தேவகோட்டை கோட்டை அம்மன் கோயில் திருவிழாவுக்குச் சென்று வந்தோம் இந்த வருடம். கொரோனாவின் காரணத்தால் கூட்டம் இல்லாமல் அமைதியாக வரிசையில் சென்று தரிசித்தோம். மாலை நேரம் நான்கு மணி இருக்கும்.
தேவகோட்டையின் முக்கிய தெய்வங்களில் ஒன்று கோட்டை அம்மன். இத்திருவிழாவிற்காக விரதம் எல்லாம் இருந்து வந்து வணங்குவார்கள் மக்கள்.
இந்தக் கோயில் 130 நகரத்தார் புள்ளிகளுக்குச் சொந்தமானது. 16 ஆண்டுக்கு ஒரு முறை அறங்காவலர் குழு நியமிக்கப்படுகிறது. மேலும் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் 15 நாட்கள் வருடத் திருவிழா நடக்கிறது. ஒரு தளம்/மேடைதான் அம்மன். அம்மேடையில் பூரண கும்பம் வைத்துத் திருவிழாவின் போது அம்மனை அலங்கரிக்கிறார்கள்.
வைஷ்ணோ தேவியில் மூன்று பிண்டிகள் ( பிடி மண் போல சமைந்த 3 உருவங்கள் ) தேவியாக வணங்கப்படுகிறாள். காரைக்குடி முத்தாளம்மன் கோவிலிலும் மேடையே அம்மன் அருவமாக உறையும் இடம் . திருவிழாவின் போதுதான் அம்மன் உருவம் எடுக்கிறாள்.
பல்வேறு வேண்டுதல்கள் உண்டு. உடல் நலம் காக்க மாவிளக்குப் போடுதல் , திருமண பாக்கியம் பெற திருமாங்கல்யம் சாத்துதல் , குழந்தை பிறந்தால் கரும்புத் தொட்டில் கட்டுதல் என. சில மக்கள் கும்பிடு கரணம் போன்றவற்றையும் நேர்ந்து கொள்வதுண்டு.
அலங்கரிக்கப்பட்ட அம்மனைத் திருவிழா முடிவில் திருக்குளத்தில் நன்னீராட்டி எடுப்பார்கள் . அருவமாய் உறைந்து காத்திருக்கும் அவள் அடுத்த வருடம் திரும்பத் தன் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேறியதற்கு நன்றி சொல்ல வரும்போது அங்கே உருவமாக எழுந்தருளி இருப்பாள் கோட்டை அம்மன்.
முல்லை, மல்லிகைப் பூப்பந்தலுக்குள் கோட்டை அம்மன் கொலுவிருக்கும் காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும் நீங்களும் ஒருமுறை சென்று வாருங்கள்.
இந்தக் கோவில் கோட்டையம்மன் கோவிலுக்கு அருகில் இருக்கும் பிள்ளையார் கோவில். பிள்ளையார் கோவிலுக்குள்ளேயே கொடிமரம் உள்ளது வித்யாசம்.திண்ணஞ்செட்டி ஊருணிக்கருகில் இருக்கிறது என நினைக்கிறேன். அழகான கொடுங்கைகளும் தூண்களும் சிம்ம யாளிச் சிற்பங்களும் மிகப் பெரிய மணியும் அழகு.
அந்தக் காலக் கல் கட்டிடம்.
அடுத்து நாங்கள் சென்றது தேவகோட்டையின் நகரச் சிவன் கோவில்மிகப் பிரம்மாண்டமான கோவில். நிறையச் சந்நிதிகள். விதானத்தில் வட்டப் பூந்தட்டுகள் போன்ற ஓவியங்கள்.
இது வாயிலுக்கு இன்னொரு பக்கம்.
இது பிரகாரத்தின் இன்னொரு பக்கச் சுற்று.
சேக்கிழார் சந்நிதி.
அம்மை & அப்பன் சந்நிதி இரண்டுமே ஐந்து நிலை ராஜ கோபுரங்கள். !
மிக அழகான கோவில்கள். சிறு மிருகங்கள் நுழைந்துவிடாமல் இருக்க கம்பிக் கதவு போட்டிருக்கிறார்கள்.
இரு கோயில்களுக்கும் இடையில் உள்ள மதிற்சுவரில் மீனாக்ஷி திருக்கல்யாணம். மொத்தத்தில் மனம் நெகிழ வைத்த நல்ல தரிசனம்.
Thenammai Lakshmanan10 ஜனவரி, 2022 அன்று பிற்பகல் 8:28
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!