எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 31 டிசம்பர், 2020

இரணியூர்க் காளி

இரணியூர்க் காளி

காரைக்குடி அருகில் உள்ளது இரணியூர். இது நகரத்தாரின் ஒன்பது கோவில்களில் ஒன்று. இக்கோவில் விமானத்தைத் தரிசித்தாலே இறைவனைத் தரிசித்ததற்குச் சமம். இன்னும் வக்கிர அமைப்பில் அமைந்த தெய்வச் சிலைகள், குபேரன், ஹிரண்யவதம், அரியும் அரனும் ஒன்றென உணர்த்தும் சம்பவங்கள், ஹிரண்யகசிபுவை அழித்தபின் ஆக்ரோஷமாய் அலைந்த நரசிம்மத்தை ஆற்றுப்படுத்தி ஆட்கொண்ட சிவன், அதனால் ஆட்கொண்டநாதர் & நரசிம்மேஸ்வரர் என்று பெயர் பெற்ற மூலவர் இன்னும் பல சிறப்புகள் உண்டு இரணியூருக்கு.

நரசிம்மரின் கோபம் கண்டு தங்கையான உமையும் உக்கிரமடைந்து அதன் பின் நவதுர்க்கைகளாக உள்மண்டபத்திலும் அஷ்டலெக்ஷ்மிகளாக வெளி மண்டபத்திலும் இரணியூர் ஆட்கொண்ட நாதர் கோவிலில் காட்சி தருகிறார்கள். தமிழரின் தொன்மையான சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டு இக்கோயில்.

இத்தோடு கோபம் கொண்ட காளி, நரசிம்மர் ( நீலமேகப் பெருமாள் ) ஆகியோரை ஆற்றுப்படுத்தியபின் அவர்களுக்கும் தனிக்கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரணியூர்க் கோவில் பற்றியும் நீலமேகப் பெருமாள் பற்றியும் முன்பே பல்வேறு இடுகைகளில் குறிப்பிட்டுள்ளேன்.

இது இரணிக்காளி கோவில் பற்றியது. இக்கோவில் இரணியூர் ஆட்கொண்ட நாதர் கோவிலில் இருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ளது. தனியான ஆரண்யம்போன்ற இடத்தில் வாய்க்கால்கள் சூழ உள்ள இடத்தில் ஏகாந்தமாகக் கோவில் கொண்டிருக்கிறாள் இரணிக் காளி.

ஞாயிறு, 27 டிசம்பர், 2020

விஜயதசமியில் தஞ்சைப் பெரியகோவில்.

விஜயதசமியில் தஞ்சைப் பெரியகோவில்.

ஜகதிப்படை கல்வெட்டு, மெய்கீர்த்தி, பாந்து என சகோ கரந்தை ஜெயக்குமாரின்  “ ஜகதிப்படை “ இடுகையில் படித்தவுடன்  சில ஆண்டுகளுக்கு முன் தஞ்சை ப்ரகதீஸ்வரர் கோயிலுக்கு விஜயதசமியன்று சென்றதும் இரவில் புகைப்படங்கள் எடுத்ததும் ஞாபகம் வந்தது.

இராஜ ராஜ சோழன் பற்றிய சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. சினிமாவில் சிவாஜியையே ராஜ ராஜ சோழனாகக் கண்டிருக்கிறோம். ( படம் பார்த்ததில்லை என்றாலும் பாடல்கள் சில பார்த்திருக்கிறேன். ) இப்படம் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை என்றாலும் இதற்கான ரசிகர்கள் அநேகம் பேரை அறிவேன். இனிமையாய் இருக்கும் எதையும் விரும்புவதுதானே மனித இயல்பு.

அந்த வருடம் ராஜ ராஜ சோழனின் 1027 ஆம் ஆண்டு சதயத் திருவிழா வேறு கொண்டாடப் பட்டுக் கொண்டிருந்தது. கோயில் தொல்லியல்துறையின் பராமரிப்பில் இருப்பதால் அதன் சாந்நித்தியம் எல்லாம் சிறுவயதில் உணர்ந்ததோடு போய்விட்டது. இதுவும் தாராசுரம் கோயில் எல்லாம் சுத்தமாக இருக்கின்றன ஆனால் நமக்கு பூக்கள், கற்பூரம், நெய்தீபம், அபிஷேக திரவியங்கள், அர்ச்சனைப் பொருட்கள் அதன் பழமைத்துவம் என்று ஏதோ வாசனை மிஸ்ஸிங். அதனால்  கோயிலுடன் கூடிய அந்தப் பழைய ஆத்மார்த்தம் போய்விட்டது. கோயில் என்பதும் ஒரு உள்ளுறை உணர்வு.

அங்கே விஜயதசமியின் போது எடுத்த சில படங்களைப் பகிர்ந்திருக்கிறேன்.

{கோவில்களிலும் ரயில்வே & பஸ் நிலையங்களிலும் ஒரு பயம் தரும் விஷயம் என்னன்னா அங்கங்கே பைரவர்கள் சுதந்திரமாக உலாவி நம்மைப் பயப்படுத்துகிறார்கள். அவ்வப்போது உரக்க திடீரென்று குரைத்துத் தள்ளுகிறார்கள்.குறுக்கும் மறுக்கும் ஓடுகிறார்கள். இதற்கு அறநிலையத்துறை ,தொல்பொருள் துறை , ரயில்வே  நிர்வாகம் எல்லாம் ஏதாவது செய்தால் தேவலாம். }

கோயில் பற்றிய பல்வேறு தகவல்கள் விக்கிபீடியாவில் கொட்டிக் கிடக்கின்றன. இது சதுரவடிவில் அமைக்கப்பட்ட கருவறைக் கோபுரம்

வெள்ளி, 25 டிசம்பர், 2020

திருக்கடையூரில் அம்மா அப்பாவின் விஜயரத சாந்தி - 2.

திருக்கடையூரில் அம்மா அப்பாவின் விஜயரத சாந்தி - 2.

ஹோமம் முடிந்து இந்தக் கும்பங்களை பிரதட்சணமாக பிரகாரங்களில் எடுத்து வரவேண்டும்.  சிவன் சந்நிதியின் பின்புறம் கிழக்குப் பக்கமாக இந்த கும்பம் சொரிதல்/அபிஷேகம் நடைபெறுகிறது.

முதலில் ஹோமம் செய்வித்த வேதியர் கும்பம் சொரிதல். இவர் அபிஷேகித்ததும் மற்றையோரும், பெண் மக்கள், பிள்ளை பெண்டுகளும் , கடைசியாகப் பெற்றோருக்குத் தலைமகனும் மருமகளும் தம்பதி சமேதராகக் கும்பம்சொரிய வேண்டும்.

இந்த சல்லடை போன்ற அமைப்பு நீரை சீராக வடியச் செய்ய உபயோகப்படுகிறது.

புதன், 23 டிசம்பர், 2020

திருக்கடையூரில் அப்பா அம்மாவின் விஜயரத சாந்தி - 1 .

திருக்கடையூரில் அப்பா அம்மாவின் விஜயரத சாந்தி - 1 .

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் அபிராமி சந்நிதியில் நித்தமும் ஆயுஷ்ஹோமங்கள், ம்ருத்யுஞ்செய ஹோமங்கள், உக்ரரத சாந்தி, சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, விஜயரத சாந்தி, சதாபிஷேகம் என ஒரே கோலாகலம்தான். கனகாபிஷேகம் , மகுடாபிஷேகம் ஆகியனவும் இருக்கலாம் தெரியவில்லை.

கோவிலின் பிரகாரமெங்கும் பிறந்த நட்சத்திரம் கொண்டாடும் தம்பதிகள்.

மார்க்கண்டேயனின் பதினாறாம் வயதின்போது அவருக்கு ஆயுள் முடிந்துபோக எமன் கவர்ந்து செல்ல வருகிறார். அப்போது மார்க்கண்டேயர் சிவனுக்கு பூஜை செய்து சிவலிங்கத்தை வாரியணைக்க அதிலிருந்து சிவன் தோன்றி எமனை எட்டி உதைத்து மார்க்கண்டேயரை சிரஞ்சீவி ஆக்கினார் என்பது ஸ்தல வரலாறு.  இவர் கால சம்ஹார மூர்த்தியாகவும் எழுந்தருளி இருக்கிறார். இதனால் இங்கே இந்த ஹோமங்கள் , சாந்திகள் செய்வது சிறப்பு.

அமிர்தமே லிங்கமாக அமைந்ததால் இங்கு இருக்கும் மூலவர் அமிர்த கடேஸ்வரர், அமிர்தலிங்கேஸ்வரர். அம்மை அபிராமி. அம்மனின் எழிலில் மூழ்கியிருந்த அபிராமி பட்டர் அமாவாசையை பௌர்ணமி என்று அரசனிடம்  கூறிவிட்டார். அதனால் அபிராமியை அந்தாதியால் பாட அவள் தன் தாடங்கத்தை எறிந்து அமாவாசையை பௌர்ணமியாக்கிய திருத்தலம். இன்னும் பல்வேறு சிறப்புக்களும் உண்டு.

இங்கே சென்ற ஆண்டு அம்மா அப்பாவின் 75 ஆவது பிறந்தநாள் விழா நடந்தது. நான், அப்பா, அம்மா மூவர் மட்டுமே சென்றுவந்தோம். அந்நிகழ்வின் தொகுப்பாக இப்புகைப்படங்களைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.

இங்கே நவக்ரஹ சந்நிதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  ஸ்தலவிருட்சம் வில்வம். தீர்த்தம் அமிர்த புஷ்கரணி, கால தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், மூவர் தேவாரம் பாடிய திருத்தலம்.  ( மாணிக்கவாசகர் பாடவில்லை ).

கோவில் வாசலில் வேதியர் கூறியபடி  முதலில் மாலை மாற்றிக் கொண்டார்கள் அப்பாவும் அம்மாவும்.


திங்கள், 21 டிசம்பர், 2020

இரணிக்கோயில் ஆக்ரோஷச் சிம்மங்களும் சிம்ம யாளியும். மை க்ளிக்ஸ். IRANIKKOIL , MY CLICKS.

இரணிக்கோயில் ஆக்ரோஷச் சிம்மங்களும் சிம்ம யாளியும். மை க்ளிக்ஸ். IRANIKKOIL , MY CLICKS.

நூற்றுக்கணக்கான ஆக்ரோஷச் சிம்மங்களை நீங்கள் இரணிக்கோயில் முழுவதும் தரிசிக்கலாம். பிரகாரத் தூண்கள் தோறும் எக்காளமிடும் சிம்மங்கள்.

ஒரு சிலவற்றில் ஒற்றையாகவும் ஒருசில தூண்களில் நாற்புறங்களிலும் கவினுற செதுக்கப்பட்டுள்ள இவற்றின் கோபமுகம் சிலசமயம் சாந்தமாகவும் சில சமயம் உக்கிரமாகவும் அச்சமூட்டுவதாகவும் உள்ளது.

வக்கிர அமைப்பில் அமைந்த கோவில் இரணிக்கோவில் இதுபற்றி முன்பே பல இடுகைகள் எழுதி  உள்ளேன். இப்போது தனியாக சிம்மங்கள் பற்றி.

ஏனெனில்  இரணியனை அழித்த உக்கிர நரசிம்மரை சரபேஸ்வரராக ஈஸ்வரன் சாந்தப்படுத்திய ஸ்தலம் இது. எனவே அசுரனை வதைத்த உக்கிர சிம்மங்கள் பொலிந்திருப்பதில் ஆச்சர்யமில்லை.


பூ மொட்டுக்களும் வாழைப்பூக்களும் மலர்ந்த தூண்களின் கீழ்ச்செறிவின் பீடத்தில் சிவகணங்களும் சிம்மமும் கூட காட்சி அளிக்கின்றன.

சனி, 19 டிசம்பர், 2020

சங்கரன்கோயில் சங்கரநாராயணர் கோமதிஅம்மன் திருக்கோயில்

சங்கரன்கோயில் சங்கரநாராயணர் கோமதிஅம்மன் திருக்கோயில்

சங்கரன் கோவிலுக்குக் செல்லும் பாக்கியம் கிட்டியது. அதோடு அதாக அது ஒரு ஆகஸ்ட் மாதம் என்பதால் ( ஆடிமாதம் - ஆடித் தபசு ) புஷ்பப் பாவாடை வேண்டுதல்களையும் தரிசிக்க முடிந்தது. இங்கே பிரகாரத்தில் உள்ள புற்று மண் விசேஷம். பதினோரு நிலை கொண்ட ராஜகோபுரம் கம்பீரம். சங்கரனும் நாராயணனும் இணைந்து சங்கர நாராயணராகக் காட்சி அளித்த தலம். அம்பாள் ஊசிமுனையில் ஈசனுக்காகத் தவமியற்றிய ஸ்தலம்.
இறைவன் சங்கரலிங்க ஸ்வாமி, இறைவி கோமதியம்மன். இருவருக்கும் தனித்தனிச் சந்நிதிகள், தனித்தனிப் பிரகாரங்கள், அர்த்தமண்டபம், மஹா மண்பபங்கள். பிரம்மாண்டம்.

வியாழன், 17 டிசம்பர், 2020

சித்திரசபையின் சித்திரக் கடவுள்.

சித்திரசபையின் சித்திரக் கடவுள்.

சிவன் நடனமாடிய ஐந்து சபைகளில் நான்கை நான் தரிசித்திருக்கிறேன்.

சிதம்பரம் பொன்னம்பலம், மதுரை வெள்ளியம்பலம், திருவாலங்காடு ரத்தின சபை, திருக்குற்றாலம் சித்திர சபை ஆகியன. திருநெல்வேலி தாமிர சபையை எப்போது தரிசிக்கப் போகிறேன் எனத் தெரியவில்லை.

தென்காசிக்குச் சென்றபோது சித்திரசபையை தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டியது. இக்கோயில் திருக்குற்றாலநாதர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. அருகிலேயே இன்னொரு குற்றாலநாதர் கோயிலும் இருக்கிறது.
இது தெப்பக்குளம்.

இது சிவன் மார்க்கண்டேயனை யமனிடம் இருந்து காத்த தலம். சிவகாமி அம்மையுடன் திருக்குற்றால நாதர் ஓவியமாகக் காட்சி அளிக்கிறார். இங்கே ஒரே ஒரு சந்நிதியும் பிரகாரமும்தான். அதைவிட அதிசயம் மூலவரிலிருந்து கோஷ்ட தெய்வங்கள் வரை எல்லாமே ஓவியங்கள்தான்.

வெள்ளி, 11 டிசம்பர், 2020

தென்காசி உலகம்மன் சமேத காசிவிசுவநாதர் திருக்கோயில்.

தென்காசி உலகம்மன் சமேத காசிவிசுவநாதர் திருக்கோயில்.

குற்றாலத்துக்குச் சென்றிருந்த போது தென்காசியில்தான் தங்கி இருந்தோம். அங்கே காசி விசுவநாதர் உலகம்மன் கோயிலுக்கு ஒரு நாள் காலையில் சென்றோம். ஒன்பது நிலை ராஜ கோபுரம். பதினாலாம் நூற்றாண்டில் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் என்னும் மன்னனால் கட்டப்பட்டதாம். அடேயப்பா என்ன பிரம்மாண்டம் பார்க்கப் பார்க்க வியப்பு. நிமிர்ந்து பார்த்தால் தலை சுளுக்கிக் கொள்ளும் அளவு உயரம். சிலைகளோ எண்ணற்றவை. கிட்டத்தட்ட 800 பொம்மைகள் கோபுரத்தில் உள்ளனவாம். !

இன்னொரு சிறப்பு இக்கோயில் ஒரு தேர்வடிவிலும் அதை இரு பெரும்  யானைகள் இழுத்துச் செல்லும் விதத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

சிவனுக்கு அம்பாளுக்கு முருகனுக்கு என்று தனித்தனிக் கோயில்களே உள்ளே இருக்கின்றன. ப்ரகாரங்களும் பிரம்மாண்டமானவை.

தல வரலாறு :-

புதன், 9 டிசம்பர், 2020

காளிக்கூத்தும் இரண்ய மல்யுத்தமும் இரண்ய சம்ஹாரமும்.

காளிக்கூத்தும் இரண்ய மல்யுத்தமும் இரண்ய சம்ஹாரமும்.

தில்லைக்காளி, திருவாலங்காட்டுக் காளி, எல்லைக்காளி எல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். இங்கே இரணிக் காளியை தரிசிப்போம் வாருங்கள். இரணியூரில் தனிக்கோயில் கொண்டுள்ள அவள் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவி கோவிலில் சிற்பத் திருமூர்த்தமாக அருள் பாலிக்கிறாள்.

அவளின் எல்லையில்லாக் காளிக்கூத்து காலந்தோறும் இங்கே நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. கூத்தனுக்கு நிகரானவள் காளி. அதனால் அவள் இரணியூரில் நிகழ்த்தும் கூத்தும் அதி அற்புதமானது. அதை உணரவும் தரிசிக்கவும் இங்கே கட்டாயம் வாருங்கள்.
கடுகிச் செல்லும் வாயுபகவான். கிழக்குப் ப்ரகாரத்தின் சுற்றில் குபேரனிலிருந்து புகைப்படம் எடுத்துள்ளேன். எதிர்பாராத ஆச்சர்யங்கள் கிடைத்தன. அவை பின் தொடர்கின்றன.

செவ்வாய், 8 டிசம்பர், 2020

ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திரம் பாராயணம்.

ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திரம் பாராயணம்.

என் உறவினர் ஒருவர் இல்லத்துக்கு ஒரு நாள் மாலை சென்றிருந்தோம். அங்கே  அன்று லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திரம் பாராயணம் செய்தார்கள்.வேறு ஊர்களிலிருந்து வந்திருந்த தோழியர் குழாமுடன் பாராயணம் செய்தது மகிழ்ச்சியாக இருந்தது. கோரஸாக மந்திரம் சொல்லும்போது கேட்கும் ஒலி இனிமையானது. அவ்வப்போது வீட்டில் படித்திருக்கிறேன் என்றாலும் சமஸ்கிருதம் என்பதால் ஓரிரு இடங்களில் உச்சரிப்பில்  பிழை வந்துவிடக் கூடாதே என்று மெதுவாக வாசித்தேன். 

சனி, 5 டிசம்பர், 2020

இரணிக்கோவில் தூண் சிற்பங்கள். - திராட்சையும் நரியும் பூச்சாடிகளும்.

இரணிக்கோவில் தூண் சிற்பங்கள். - திராட்சையும் நரியும் பூச்சாடிகளும்.

சிற்பங்களுக்குப் பெயர்பெற்ற இரணியூர் ஆட்கொண்ட நாதர் சிவபுரந்தேவி திருக்கோவிலில் தூண் சிற்பங்களைத் தனியாகப் பதிவிட்டுள்ளேன்.

இது பற்றி முன்பே பல இடுகைகள் வெளியிட்டுள்ளேன். அவை கீழே அணிவகுக்கின்றன.

இக்கோவிலில் அஷ்டலெக்ஷ்மிகள் வெளியேயும் நவதுர்க்கைகள் உள்ளேயும் உள்ள வக்ர அமைப்பில் அமைந்துள்ளன. ஆட்கொண்டநாதரே நரசிம்மேஸ்வரராகவும்,  உக்கிரம் கொண்ட இரணியூர்க் காளியும் காளிக்கூத்தும், இரண்ய மல்யுத்தம், இரண்ய வதமும் நிகழ்ந்தது.   இன்னும் பல்வேறு சிறப்பும் கொண்டது இக்கோயில்.

அஷ்டலெக்ஷ்மி மண்டபத்தில் விநாயகர் முருகன் குழந்தைக்குப் பாலூட்டும் பெண் , யானை வாகனத்தில் இந்திரன், சித்திரக் குள்ளன், சூரியன், யாளிகள், தேவ பூத கணங்கள் , சிம்மங்கள் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.

பூச்சாடி !

வியாழன், 3 டிசம்பர், 2020

திருப்பத்தூர் திருத்தளிநாதர் ஸ்ரீயோகபைரவர் திருக்கோவில்.

திருப்பத்தூர் திருத்தளிநாதர் ஸ்ரீயோகபைரவர் திருக்கோவில்.

காரைக்குடியில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருப்பத்தூர். அங்கே திருத்தளிநாதர் கோவிலுக்குச் சென்றோம் ஒரு ஞாயிறு காலையில் .மிக தேஜஸோடு ஜொலித்த அக்கோயிலைப்பற்றிய புகைப்படங்களும் விபரங்களும் பகிர்ந்துள்ளேன்.

ஈசன்  திருத்தளிநாதர் . அம்பாள் சிவகாமி அம்மை. யோக பைரவர் எனப்படும் ஆதி பைரவர் வழிபாடு இங்கே விசேஷம். இறைவனை மகாலெக்ஷ்மி வணங்கியதால் திருத்தளி நாதர் எனப்படுகிறார். வால்மீகி இங்கே தவமிருந்து அவரை புற்று மூடியதால் இந்த ஊர் திருப் புத்தூர் எனலாயிற்று. மேலும் ஈசன் கௌரிதாண்டவம் ஆடிய திருத்தலம்.

அப்பனுக்கும் அம்மைக்கும் ஸ்கந்தருக்கும் பைரவருக்கும் வன்னிமர விநாயகருக்கும், திருநாகேஸ்வரருக்கும் தனித்தனிச் சந்நிதிகள்.  ஸ்தலவிருட்சம் கொன்றை, தீர்த்தம் ஸ்ரீ தளி தீர்த்தம். அகத்தியர் வணங்கிய அகத்திய லிங்கம் இருப்பதும் சிறப்பு
வெளியே பார்க்க சிறியதாகத் தெரிந்தாலும் உள்ளே முன் மண்டபம், அர்த்தமண்டபம், கருவறை ஆகியன கொண்ட பெருங்கோவில் இது.

செவ்வாய், 1 டிசம்பர், 2020

ஷண்முகநாதபுரத்தின் ( ஆராவயல் ) மூன்று கோயில்கள்.

ஷண்முகநாதபுரத்தின் ( ஆராவயல் ) மூன்று கோயில்கள்.

ஆராவயல் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர், வீரமாகாளி அம்மன், ஷண்முக விநாயகர்  இம்மூன்று கோயில்களும் அக்கம் பக்கமாக அமைந்துள்ளன. அது மட்டுமல்ல இந்த வீரமாகாளி அம்மன் கோவிலில் இன்னொரு சிறப்பும் இருக்கிறது. அது என்னவென்று பின்னர் சொல்லி இருக்கிறேன்.

சமீபத்தில்தான் அதாவது 1. 7. 2018 அன்று  ஆறாவயலில் இம்மூன்று கோவில்களுக்கும் ஒருங்கே கும்பாபிஷேகம் நடந்தன. எங்கள் பாட்டி ஆயா வீடு உள்ள ஊர் ( மஞ்சி வீடு ) என்பதால் எனக்கு ஆறாவயல் மிகப் பிடித்தமான ஊர்.

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயம் இக்கோயில்களுக்குக் கும்பாபிஷேகம் நிகழ்ந்து வருகிறது. ஒவ்வொரு திருமணத்தின் போதும் மாப்பிள்ளை அழைப்பு இங்கே இருந்துதான் நடைபெறும்.

ஆறாவயலில் திருவிழா சமயத்தில் நடைபெறும் கூத்தைப் பார்க்கப் பெரும்கூட்டம் கூடும். சின்னப் பிள்ளையில் அங்கே ஓரிரு சமயம் சென்று கூத்துக்களைப் பார்த்திருக்கிறோம். ஆரம்பிக்க வெகு நேரம் ஆகிவிடும் என்பதால் ( பாய் எல்லாம் கொண்டு சென்று அமர்ந்து கொண்டு பார்ப்பார்கள் ) உறங்கி விட்டதும் உண்டு.

ஞாயிறு, 29 நவம்பர், 2020

மணக்குள விநாயகர். கஜானனை பூஜிக்கும் லெக்ஷ்மி.

மணக்குள விநாயகர். கஜானனை பூஜிக்கும் லெக்ஷ்மி.

புதுச்சேரி மணக்குள விநாயகர ஆலயம் மிக அழகானது. இது பதினைந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட கோவில். தொள்ளைக்காது சித்தர் என்பவர் ஒரு மணற்குளத்தங்கரையில் உருவாக்கி வழிபட்டு வந்த விநாயகர் இவர். எனவே கருவறை அமைந்திருக்கும் இடமே ஒரு கிணறு போன்ற நீர்நிலைமேல் என்கிறார்கள். பக்கத்திலேயே ஒரு குழியில் எப்போதும் வற்றாமல் நீர் நிரம்பி நிற்கிறது என்றும் சொல்கிறார்கள்.

பிள்ளையார்பட்டிக் கோவிலுக்குப் பின்  அருளாட்சி வெகுவாகப் பொலிய நான் பார்த்த விநாயகருக்கான தனிக்கோவில் இது. சுமார் 35 லட்சரூபாய் மதிப்பிலான ஏழரைக்கிலோ தங்கத் தகட்டால் செய்யப்பட்ட தங்கத்தேர் கொண்ட கோவில் இது. தங்கத்தேர் மட்டுமல்ல. கோபுரம் கூட தங்கத்தால் வேயப்பட்ட கோவிலாம். !

புதுவை கடற்கரைக்கும், அரசு அலுவலகங்களுக்கும் அரவிந்தர் ஆசிரமத்துக்கும் பக்கத்தில் உள்ளது. மிக அழகான நீண்ட தூய சாலைகள் கொண்டது புதுவை.

வெள்ளி, 27 நவம்பர், 2020

குரட்டி ஸ்ரீ ஆறடி சாத்தையனார் கோவில்.

குரட்டி ஸ்ரீ ஆறடி சாத்தையனார் கோவில்.


குரட்டி ஸ்ரீ ஆறடி சாத்தையனார் கோவில்.

குன்றக்குடியில் இருந்து நான்கைந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குரட்டி ஸ்ரீ ஆறடி சாத்தையனார் கோவில். எல்லா ஐயனார் கோவில்களும் போல இருந்தாலும் இது இன்னும் மிரட்சியோடு கூடிய அழகு.

அமைவிடமே ஒரு ஆற்றின் மேல் என்பதால் இவர் ஆறடி ஐயனார். கோவிலின் இடப்புறம் அந்தப்பக்கட்டு ஒரு கண்மாய் தெரிகிறது. அதன் நீர்த்தடம் வரும் ஆற்றுப்பாதை கோவிலின் வலப்புறம் ஒரு மாபெரும் ஆற்றுப்பாதை. மதகடி போல் காட்சி தந்தது.

வியாழன், 26 நவம்பர், 2020

திருக்காளஹஸ்தி காளத்தியப்பர் கோவில்.

திருக்காளஹஸ்தி காளத்தியப்பர் கோவில்.

திருக்காளஹஸ்திக்கு ஒருநாள் மாலையில் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. திருத்தணியில் இருந்து டாக்ஸி மூலம் சென்றடைந்தோம். மின்னும் வெய்யிலில் பளீரென்ற மூன்று நிலை வெண் கோபுரம் கண்ணைக் கவர்ந்தது. இன்னொரு புறம் எழுநிலை இராஜகோபுரம் இருக்கிறது. 


செருப்பு, செல்ஃபோன் காமிரா எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டு டோக்கன் வாங்கிச் செல்லவேண்டும். எனவே மிக மிக அழகான தங்க வேலைப்பாடுகள் ( ! ) ஆமாங்க தங்கமும் வெள்ளியும் பிடித்த விதானத்தின் தொங்குகொம்புகள், தூண்களிலிருந்து நீண்ட தாமரைகள், தாமரை மொக்குகள், விளக்கு வளையங்கள் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தாலும் புகைப்படம் எடுக்க இயலவில்லை. பணக்காரத்தனம் மிரட்சியூட்டும் அளவு இருந்தது. அவ்வளவு திருப்பணிகள் இக்கோயிலுக்குப் பலரும் செய்திருக்கிறார்கள். பணக்காரச் சாமி J

செவ்வாய், 24 நவம்பர், 2020

திருத்தணிகை முருகன் கோவில்.

திருத்தணிகை முருகன் கோவில்.

திருத்தணிகைக்கு இந்த முறை சென்றபோதும் ( படியில் ஏறாமல் ) வாகனப் பிரயாணப்பாதையிலேயே சென்றோம்.  அது ஒரு காலை நேரம். மிக அழகாக வடிவமைக்கப்பட்ட முகப்பு ஆர்ச்சுகள் கம்பீரமாக நம்மை வரவேற்கிறது.
திருத்தணியைப் போல வெய்யில் கொட்டிய ஊரை நான் பார்த்ததே இல்லை. சும்மா உங்க வெய்யில் எங்க வெய்யில் இல்லை. இது தந்தூரி அடுப்பு கூட இல்லை சூளையில் செங்கல்லைச் சுடும் வெய்யில். ஆமா அந்த ஊரில் எப்படித்தான் எல்லாரும் இருக்காங்கன்னே தெரியல. :(

ஞாயிறு, 22 நவம்பர், 2020

ஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.

ஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.

ஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்

”ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி. ஸ்ரீதேவி ரங்க நாதனின் பாதம் மங்களம் பாடடி”. என்ற பாடல் அடிக்கடி நான் முணுமுணுப்பது. அதேபோல் குழந்தைகளைக் கொஞ்சும் போது “ ங்கா ங்கா ங்கா காவேரி ரங்கா கஸ்தூரி ரங்கா எங்கே இருக்குமாம் ரங்கம்பழம் . தீர்த்தக் கரைக்கும் திருவானைக்காவலுக்கும் நடுவிலே இருக்குமாம் என்னைப் பெத்த ரங்கம் பழம்” என்று கொஞ்சுவார்கள் காரைக்குடிப் பக்கம்.  மேலும் ஸ்ரீரங்கம் என்றால் ஸ்ரீரங்கத்து தேவதைகளும் ரங்கநாதன் ஆகிய சுஜாதாவும் நினைவுக்கு வராவிட்டால் நாம் என்ன எழுத்தாளர். ? 

108 வைணவத் திருத்தலங்களுள் ஒன்று. காவிரிக்கரையில் அமைந்திருக்கும் சிறப்புப் பெற்றது. ஏழு சுற்று மதில்கள், 21 கோபுரங்கள் மட்டுமல்ல. தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிதான இக்கோபுரம் தமிழக அரசின்  பண்பாட்டுச் சின்னமாகப் பொறிக்கப்பட்டுள்ளது. கம்பர் இராமாயணத்தை அரங்கேற்றியது இங்குதானாம். !

வெள்ளி, 20 நவம்பர், 2020

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில்.

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில்.

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில்.

திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் கொண்டவை. அதில் முதல் இரண்டு கோபுரங்களின் வழியாக ஆட்டோ போன்றவையும் வரும். இரண்டாவது கோபுரம் வழியாக கோயிலுக்கான பொருட்களைச் சுமந்து மெட்டாடர் வேன் சன்னிதிக்கு முன்பு வரை வரும். அம்மாம் பெரிசு. !!!
இக்கோயிலில் ஒரு சிறப்பு காலைச்சந்தி பூஜையில் கோ பூஜை நடக்கும். சங்காபிஷேகங்களும் பிரசித்தம். உச்சிக்கால பூஜை விமர்சையாக நடக்கும். அப்போது அர்ச்சகர் புடவை உடுத்தி க்ரீடம் அணிந்து மேளதாளத்தோடு யானை முன் செல்ல சுவாமி சந்நிதிக்கு வந்து பூஜை செய்வார். அர்ச்சகார் ரூபத்தில் அகிலாண்டேஸ்வரியே இறைவனை பூஜைசெய்வதாக ஐதீகம். பஞ்சபூத ஸ்தலங்களுள் ஒன்று இது. காவிரி நீர் இங்கே சந்நிதிக்கே வருகிறது. எனவே இது அப்பு ஸ்தலம்.

புதன், 18 நவம்பர், 2020

ஆத்தங்குடி நகரச் சிவன்கோவில்.

ஆத்தங்குடி நகரச் சிவன்கோவில்.

ஆத்தங்குடி நகரச் சிவன் கோவில்

ஆத்தங்குடி நகரச் சிவன் கோவிலில் சமீபத்தில்தான் கும்பாபிஷேகம் முடிந்தது. ஏப்ரல் மாதம் என நினைக்கிறேன். கோபுரங்கள் புதுப்பொலிவுடன் ஜொலிக்க சுற்றிலும் நூற்றுக்கணக்கான யாகசாலைகள் காட்சி அளித்தன. எல்லா வகையிலும் ( வட்டம் , சதுரம், தாமரை, இதயம் ஆகிய வடிவங்களில் ) யாக குண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 

திங்கள், 16 நவம்பர், 2020

திருச்சி தாயுமானசுவாமி கோயில்.

திருச்சி தாயுமானசுவாமி கோயில்.

தாயுமான சுவாமிகள் கோவில்.

தாயுமான சுவாமி கோவிலுக்கு முன்பே ஒருமுறை சென்றிருக்கிறோம். எனது உறவினர் ஒருவருக்குக் குழந்தை பிறந்தவுடன் இங்கே வாழைப்பழத்தாரை வேண்டுதலாக அளித்தார்கள். அதை ஒரு கயிறில் கட்டி ஆட்டி தீபம் காட்டி திரும்ப எங்களுக்கே அளித்தார்கள். அதில் இருந்த வாழைப்பழங்களை அங்கே படியேறி வந்தவர்களுக்குப் பிரசாதமாக அளித்தபடியும் நாங்களும் எடுத்துக்கொண்டு திரும்பினோம்

சனி, 14 நவம்பர், 2020

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில்.

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில்.

திருப்பட்டூர் சென்றால் வாழ்க்கையில் திருப்பம் நிகழும் என்பார்கள். அதே போல் அன்றிலிருந்து நம் தலையெழுத்தும் மாற்றி  சிறப்பாக எழுதப்படுகிறதாம். திருச்சியிலிருந்து முப்பத்தைந்து கிலோமீட்டரில் ( சமயபுரத்தில் இருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் ) இருக்கிறது திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கே ஒரு விசேஷம் தினமும் சூரிய ஒளி பிரம்மபுரீஸ்வரரின்மேல்பட்டு  அவரைத் தரிசித்து வணங்குகிறது.

இங்கே தினமும் பிரம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. சிவன் சந்நிதியிலிருந்து ப்ரகாரத்தில் சிவனுக்கு வலப்புறம் தெற்குத் திசையில் தனி சந்நிதியில் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார் பிரம்மா. இவருக்கு மஞ்சள் பூசி விசேஷபூஜை நடக்கிறது. இந்த பூஜை கட்டாயம் காணவேண்டிய ஒன்று. அன்று வியாழக்கிழமையாகவும் அட்சய திரிதியையாகவும் அமைந்தது வெகு சிறப்பு. எனவே ஏழரைக்கு மேல் அபிஷேகமும் அலங்காரமும் நடந்தது




பிரம்மன் சிவனைப்போல ஐந்து தலைகள் பெற்றதால் ஆணவம் அடைய சிவன் அவரது ஐந்தாவது சிரசைக் கொய்துவிடுகிறார். இதற்குபிரம்மா சாபவிமோசனம் கேட்க ஈசன் தன்னைத் திருப்பட்டூர் என்னும் தலத்தில் துவாதச லிங்கமாக பிரதிஷ்டை செய்து வணங்கச் சொல்கிறார். அதே போல் வணங்கும் பிரம்மனின் தலையெழுத்தை சிவன் மாற்றியதுமல்லாமல் இங்கே பிரம்மனை வணங்க வருபவர்களின் தலையெழுத்தையும் மாற்ற அருள் செய்கிறார். பிரம்மன் வழிபட்டதால் ஈசன் பிரம்மபுரீஸ்வரர், நாயகி பிரம்ம நாயகி.

வியாழன், 12 நவம்பர், 2020

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில்.

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில்.

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில்.

திருச்சி மலைக்கோட்டைக்குப் போகும்போது தெரியாது உச்சிப் பிள்ளையார் நிஜமாகவே மிக மிக உச்சியில்தான் இருக்கிறார் என்று. கல்லூரிப் பருவத்தில் ஒருமுறை சென்ற போது மலையைச் சுற்றி இருக்கும் கடைகளில் ஷாப்பிங் செய்துவிட்டுத் திரும்பி விட்டோம். சில ஆண்டுகளுக்கு முன்பு போகும்போதும் திருச்சி ஏர்ப்போர்ட்டில் நெருங்கிய உறவினரை ரிசீவ் செய்ய சென்றதால் தாயுமான சுவாமி சந்நிதிக்கு மட்டும் சென்று வணங்கி வந்தோம்.
கீழே மாணிக்க விநாயகர் அருள் வழங்குகிறார். அவரை ஒட்டியும் ஒரு பாதை. அதன் பின்னும் மலையில் ஒரு மலைப்பாதை. ஒரு பையன் சைக்கிள் எல்லாம் ஓட்டிப் போனான். சிலர் டூ வீலரிலும். ஆமா இவங்க எல்லாம் எங்கேருந்து எங்கே போறாங்க. இத்தனையையும் தாங்குதா அந்த மலை. ( ஏன்னா தாயுமானவர் ( சிவன் )  சந்நிதியைச் சுற்றிலும் ஏகப்பட்ட மண்டபங்கள், பழைய மண்டபங்கள், புது மண்டபங்கள், சந்நிதிகள், இதுல மலைக்குகைகள், ( பல்லவர் கால & பாண்டியர் கால ) குடைவரைக் கோயில்களும் நாயக்கர் கால கோட்டை ஒன்றும் இருக்காம் ! ) கர்நாடகப் போரில் இக்கோட்டை முக்கியப்பங்கு வகித்ததாம் !

செவ்வாய், 10 நவம்பர், 2020

சமயபுரம் மாரியம்மன் கோவில்.

 சமயபுரம் மாரியம்மன் கோவில்.


சமயபுரம் மாரியம்மன் கோவில்.

பால்குடமும் மதுக்குடமும் பூச்சட்டியும் சுமந்து சென்று கொண்டிருந்தார்கள் திருச்சி மக்கள். இது கிட்டத்தட்ட 3 நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்தது. திங்கள், செவ்வாய், புதன். பங்குனிப் பால்குடம். 

திருச்சியில் இருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் கண்ணனூர் என்னும் இடத்தில் கோயில் கொண்டிருக்கிறாள் மாரியம்மா. ஸ்ரீரங்கத்தில் வைஷ்ணவியாக இருந்த அம்மன் தான் மாரியம்மனாக இங்கே கோயில் கொண்டிருக்கிறாளாம். தீர்த்தம் மாரி தீர்த்தம். ஸ்தலவிருட்சம் வேப்பமரம். நானூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில் இது.

ஞாயிறு, 8 நவம்பர், 2020

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில்.

அடிமுடி அறியவொண்ணா அண்ணாமலையாரை தரிசிக்கவில்லையே என பலகாலம் ஏங்கி இருக்கிறேன். அதற்கான வாய்ப்பு சில மாதங்களுக்குமுன் கிட்டியது.

அடி அடியாய் கிரிவலம் வரும் வாய்ப்பும் கிட்டியது. அடேயப்பா கிட்டத்தட்ட 18 கிலோமீட்டர்கள். ஒரு பௌர்ணமி இரவில் கிழக்கு கோபுர வாசலில் ஆரம்பித்து ( சுமார் 7 மணி இருக்கும். ) இரவு இரண்டரை மணிக்கு கிரிவலம் முடித்து தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம். மறுநாள் மாலைதான் எழுந்து திரும்ப கோயில் தரிசனம் செய்தோம்.

கட்டாயம் ஒருமுறை சென்று தரிசிக்க வேண்டிய கோவில் இது.

அடிமுடி அறியவொண்ணா அருணாசலராக ஜோதிஸ்வரூபமாக எழுந்தருளி இருக்கிறார் அண்ணாமலையார்.

அயனும் அரியும் அரனின் அடிமுடி அறிய அன்னமாகவும் வராகமாகவும் உருமாறித் தேடுகிறார்கள்.

அப்போது அரனின் சிரசில் இருந்து பல்லாண்டுகளாக விழுந்து வந்து கொண்டிருந்த தாழம்பூவிடம் பிரம்மன் தான் முடியை தரிசித்ததாக பொய் சாட்சி சொல்லும்படி வேண்டுகிறார்.  அது பொய் சொல்ல சம்மதிக்கிறது.

அரனிடம் அப்படிச் சொல்லும்போது வெகுளும் அவர் தன் பூஜையில் இனி தாழம்பூவிற்கு இடமில்லை சாபமளிக்கிறார். பொய் சொன்ன பிரம்மனுக்கும் உருவ வழிபாடு இல்லை என சாபமளிக்கிறார்.

வெள்ளி, 6 நவம்பர், 2020

மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்.

மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்.


மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்.

கருங்கற்களால் ஆன கட்டுமானக் கோவில் பாணி வகையில் மிகப் பழமையான கட்டிடம் முகுந்த நாயனார் கோவில் ஆகும். இதற்குப் பின் வந்தவை முறையே கலங்கரை விளக்குக்கு மேல் தட்டிலும் கடற்கரையிலும் எழுப்பட்டுள்ள கணேச்சுவரர், ராஜசிம்மேச்சுவரர். க்ஷத்திரிய சிம்மேச்சுவரர் முதலியவையும் ஆகும்.

புதன், 4 நவம்பர், 2020

சிவன்மலை சுப்ரமண்யசுவாமி கோயில்.

சிவன்மலை சுப்ரமண்யசுவாமி கோயில்.

திருப்பூர் பார்க் கல்லூரியில் மகளிர் மன்ற நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக அக்கல்லூரியின் முதல்வர் திருமாறன் ஜெயமாறன் அவர்களால் சில வருடங்களுக்கு முன்பு அழைக்கப்பட்டிருந்தேன். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பெங்களூருவில் இருந்து இருவருக்கு ஏசி இரண்டாம் வகுப்பு ட்ரெயின் டிக்கெட்டும், திருப்பூரில் தங்க ஏசி ரூமும் புக் செய்ததோடு காலையில் இருந்து இரவு கிளம்பும் வரை ஒரு பேராசிரியரும் பேராசிரியையும் எங்கள் பயணத் திட்டத்தையும் உணவு ஏற்பாடுகளையும் கவனித்துக் கொண்டார்கள். மறக்கமுடியாத நிகழ்வு அது. பரிசுப்பொருட்கள், பொன்னாடை, பணமுடிப்பு என்று வேறு கொடுத்து சிறப்புச் செய்திருந்தார்கள்.

நிகழ்வு முடிந்து மாலையில் சிவன் மலை மற்றும் திருப்பூர் வெங்கடேச பெருமாள் கோயில் இன்னும் சில கோவில்களுக்கு  சென்றுவர கார் ஏற்பாடு செய்து கொடுத்தார். சிறப்பான தரிசனம் பெற்றோம்.

கோயிலுக்குச் செல்லும் வழியிலும் மலை மேலும் ஒரே ப்ளாஸ்டிக் குப்பைதான் இயற்கைக்கு இடராக இருந்தது. இது சிவன் மலையா இல்லை ப்ளாஸ்டிக் மலையா என்று எண்ணுமளவு.

487 படிகளாம். நாங்கள் காரிலேயே மலைக்குச் சென்றதால் களைப்பு தெரியவில்லை. சிவன் அருளாலே அவன் மகன் தாள் வணங்கி வந்தோம்.


திங்கள், 2 நவம்பர், 2020

காரைக்குடிக்கருகே சித்திரகுப்தர் கோயில் ( கேது ஸ்தலம் )

காரைக்குடிக்கருகே சித்திரகுப்தர் கோயில் ( கேது ஸ்தலம் )

காஞ்சீபுரத்தில்தான் சித்திரகுப்தர் கோயில் பார்த்திருக்கிறோம் ஆனால் இங்கே காரைக்குடியில் இருந்து பிள்ளையார்பட்டி போகும் வழியில் லெக்ஷ்மி ( குபேரன் ) ஞான சரஸ்வதி, ஐயப்பன் ஆகிய கோயில்கள் உள்ளன.அதை ஒட்டியே இந்த சித்திரகுப்தர் கோயிலும் உள்ளது. தனியார் நிர்வாகம். காலை 7 மணி முதல் திறந்திருக்கிறது.

உள்புறம் புனரமைப்பு வேலைகள் நடைபெறுவதால் பிரகாரம் வர இயலவில்லை. அங்கேயே விளக்குக்கான எண்ணெய் விற்கிறார்கள். வாங்கி கோயிலுக்குக் கொடுக்கலாம். 7 தீபம் ஏற்றி 7 முறை வணங்கினால் சிறப்பு என்றும் போட்டிருக்கிறார்கள்.

குபேரகணபதியும் சித்திரகுப்தரும் அருள் பாலிக்கும் அழகு ஆலயம். ஆனால் புகைப்படம் எடுக்க அவர்கள் விடவில்லை. எனவே வெளியே வந்து ஒரு க்ளிக்.
காஞ்சியை அடுத்து சித்திர குப்தருக்கு அமைந்துள்ள தனி ஆலயம். ஸ்ரீ சித்திர குப்தர் கேது கிரகத்தின் அதிபதி. ஞானத்தையும் மோட்சத்தையும் அளிப்பவர். சுவாமியின் தீபாராதனைக்குத்தேவையான விளக்கெண்ணெய் கொடுத்து தீபம் பார்க்கவும் என்று போர்டில் எழுதி இருக்கிறார்கள்.

வெள்ளி, 30 அக்டோபர், 2020

தாம்பரம் வைத்தியநாதரும் இரட்டை விநாயகரும்.

தாம்பரம் வைத்தியநாதரும் இரட்டை விநாயகரும்.

தாம்பரத்தில் ( பெரும்பாக்கத்தில் ) கோயில் கொண்டிருக்கிறார்கள் இந்த வைத்தியநாதரும் & தையல்நாயகி அம்மனும் . அங்கே உள்ள ஒரு மெயின் ரோட்டில் இரட்டைப் பிள்ளையார் கோயில் ரொம்ப வித்யாசமாக இருந்தது.

இந்த பெரும்பாக்கம் வைத்தியநாதர் கோயில் கட்டப்பட்டு பதினைந்து ஆண்டுகள் ஆயிருக்கலாம். சமீபத்தில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு ஜொலிக்கிறது. அங்கங்கே வசதியான ஃப்ளாட்டுகள் இருக்கின்றன. ஆனால் கோயிலருகே அவ்வளவாக வீடுகள் இல்லை.

ஆனால் கோயில் ஜொலிக்கிறது. வெளியே ஒரு அரசமரமும் நாகர்களும் விநாயகரும்.
ஸ்ரீ வைத்தியநாதர் விடையேறு பாகனாகக் காட்சி அளிக்கிறார்.

புதன், 28 அக்டோபர், 2020

சகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர்.

சகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர்.

சகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர்.

பைரவர்தான் காக்கும் தெய்வம் காவல் தெய்வம். ஒவ்வொரு கோட்டையிலும் பைரவர் காவல் தெய்வமாக இருப்பதைக் காண்கிறேன். தர்மபுரியின் அதியமான் கோட்டையிலும் கூட பைரவர்தான் காவல் தெய்வம்.  

சென்னைக்குச் செல்லும்போதும், திருச்சி புதுக்கோட்டைக்குச் செல்லும்போதும், வரும்போதும் இந்தத் திருமயம் கோட்டை பைரவரை தரிசித்துச் செல்வது வழக்கம். பஸ்ஸிலிருந்தே மக்கள் வேண்டுதல் பணத்தை கோயிலைக் கடக்கும்போது சாலைகளில் போடுவார்கள் முன்பு. இப்போது காரில் செல்பவர்கள் இங்கே தேங்காய் உடைத்து வழிபட்டுச் செல்கிறார்கள். 

வடக்கு பார்த்த சந்நிதி. இவரை வணங்கிச் சென்றால்  வாகன விபத்துக்கள் ஏற்படாது. வழித்துணை பைரவர். மேலும் தோஷங்கள் நீக்கும் கண்கண்ட தெய்வம்.

திங்கள், 26 அக்டோபர், 2020

வயலினும் வீணையும் மீட்டும் கோபிகைகள்.

வயலினும் வீணையும் மீட்டும் கோபிகைகள்.

இரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவி கோயில் ஒரு சிற்பக் கலைக்கூடம். ஃபோட்டோகிராஃபர்ஸ் டிலைட் என்றும் சொல்லலாம். அங்கே தீட்டப்பட்டிருக்கும் இயற்கை வண்ண ஓவியங்களும் ஏ க்ளாஸ். காணக் கண்கோடி வேண்டும்.

சங்குசக்கரத்துடன் மஹாவிஷ்ணுவும்., அர்ஜுனருக்கு ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதை உபதேசித்த ஓவியமும். இதன் வரந்தையில் இருக்கும் திரை ஓவியங்களும் விதான வட்ட வடிவ ஓவியங்களும் கூட கண்கவர் அழகு.

நான்கு குதிரைகள் பூட்டிய தேர். குருஷேத்திரப் போர்க்களத்தைக் காட்டும்விதமாக பூமியின் சிவப்பு, அர்ஜுனனின் பவ்யம் கிருஷ்ணரின் உபதேசக்கோலம் எல்லாமே வெகு அழகு. சிந்தனை தெளிவுறுவதுபோல் தூரத்தே மேகம் வெளுப்பதும் கூட.


ஸ்ரீ மீனாக்ஷி திக்விஜயம். கயிலையில் சிவனுடன் பொருதும் தோற்றம். வெகு கம்பீரம். வெகு அழகு.

வியாழன், 22 அக்டோபர், 2020

சீர்மிகு சென்னையின் முப்பெரும் சக்திகள்.

சீர்மிகு சென்னையின் முப்பெரும் சக்திகள்.

ஈஸ்வரா வானும் மண்ணும்
ஹேண்ட்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா.
நீரும் நெருப்பும் ஃப்ரெண்ட்ஷிப் ஆனது உன்னாலீஸ்வரா.
மயிலையிலே கபாலீசுவரா.
கயிலையிலே பரமேஸ்வரா..

என்ற பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். மயிலை கபாலீஸ்வரரை ஒரு இரவு நேரத்தில் சென்று தரிசித்த போது இந்த கோபுர மின்விளக்கு  அலங்காரம் கண்ணைக் கவர்ந்தது.

ஏழு நிலை கொண்ட ராஜ கோபுரம் கிழக்கிலும் மூன்று நிலை கொண்ட கோபுரம் மேற்கிலும் அமைந்துள்ளது.  கற்பகாம்பாள் மயில் ரூபத்தில் தவமிருந்து கபாலீஸ்வரரை  வணங்கி வந்ததால் இந்த ஊருக்கு மயிலாப்பூர் என்று பெயர். எப்போதும் ஏதேனும் விசேஷம் நடந்து கொண்டிருக்கும் கோயில் இது. அகந்தை கொண்ட பிரம்மாவின் தலையைக் கிள்ளியதால் இவர் கபாலீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

செவ்வாய், 20 அக்டோபர், 2020

கொத்தரி சோலை ஆண்டவர் கோவில்.

கொத்தரி சோலை ஆண்டவர் கோவில்.

பள்ளத்தூர் அருகே கொத்தரியில் புரவிகள் வரிசை கட்டி நிற்கின்றன.  பார்த்தவுடனே அதிர்கிறது இதயம். அடர்ந்த விருட்சங்களிடையே ஆற்றலான புரவிகளின் ஆனந்த ஆர்ப்பரிப்பு. நேர்த்திக்கடனுக்காக மக்கள் செலுத்திய புரவிகளே இவை. ( நரியங்குடி கருங்குளம் போன்ற  சில கோயில்களில் புரவி எடுப்பு என்ற திருவிழா நடைபெறும். )

அதிர்வுகள் அதிகம் உள்ள புண்ணியஸ்தலம் இது.  புகைப்படம் எடுக்கலாமோ கூடாதோவென யோசனையோடு எடுத்த படங்கள் இங்கே.

காரைக்குடியில் இருந்து பதினோரு கிமீ தொலைவில் உள்ளது கொத்தரி. இந்தக் கோயிலில் வணங்க சில விதிமுறைகள் உள்ளன. சந்நிதிக்கு நேரே வந்து ஆண்களும் முழுக்கு நின்ற பெண்களுமே வணங்கலாம். மற்ற இளம்பெண்கள் பக்கவாட்டில் வந்து நின்று பிரசாதங்கள் பெற்றுக் கொள்ளலாம். வருவது என்றாலும் சந்நிதியின் நேரே வரக்கூடாது பக்கவாட்டிலேயே வந்து தரிசிக்க வேண்டும்.

வெள்ளி, 16 அக்டோபர், 2020

மெய்யாத்தாள் படைப்பு.

மெய்யாத்தாள் படைப்பு.

காரைக்குடியில் மெய்யாத்தா செட்டியப்ப  ஐயா படைப்பு கடந்த ஃபிப்ரவரி 14 அன்று நிகழ்ந்தது. எல்லாப் படைப்பையும் விட இந்தப் படைப்புக்கு அதிக கூட்டம். ஏனெனில் அனைவருமே வந்து பங்கேற்கலாம் என்பதே இதன் சிறப்பு. மற்றைய படைப்புகள் ( அக்கினி ஆத்தா, பாப்பாத்தி, அழகன் செட்டி ) போன்ற படைப்புகள் அவரவர் ஐயாக்கள் வீடுகள் , பங்காளிகள் வீடுகள் மட்டுமே பங்கேற்கக்கூடியதாக இருக்கும்.

அனைத்துமே வருஷப் படைப்பாக இருக்கும். மாசி மாசம் என்பது படைப்பதற்கு உகந்த மாதமாக இருக்கிறது. சிலர் ஆடியிலும் படைக்கிறார்கள். முன்னோரை வணங்குவதும், குலதெய்வத்தை வணங்குவதும் வாழ்க்கைக்கான காப்பு.

எங்கள் மெச்சி பெரியத்தா ( மெய்யம்மை ) ஆவிச்சி குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர்கள் அவ்வப்போது மெய்யாத்தா படைப்புப் பற்றியும் அனைவரும் வரலாம் என்பது பற்றியும் கூறி புடவை வாங்கி வைப்பதாகக் கூறுவார்கள். அதே சமயம் அங்கே வைக்கப்படும் புடவைகளைப் படைப்பு முடிந்ததும் ஏலத்தில் எடுக்கவும் பலர் போட்டி போடுவார்கள். ஏனெனில் இங்கே போழை/பேழை கட்டாமல் ( அதில் வைக்கப்படாமல் )  அந்தப் புடவைகள் அவ்வப்போது ஏலம் விடப்படுவதுண்டு. குழந்தைப் பேறு வேண்டுவோர், திருமணம், வேலை கிடைக்க வேண்டுவோர் இவற்றை ஏலத்தில் எடுப்பார்கள்.

புதன், 14 அக்டோபர், 2020

குன்றக்குடியின் சுப்புலெட்சுமி. மை க்ளிக்ஸ். MY CLICKS.

குன்றக்குடியின் சுப்புலெட்சுமி. மை க்ளிக்ஸ். MY CLICKS.

குன்றக்குடி ஷண்முகநாதர் கோயில் யானை சுப்புலெட்சுமியைப் பற்றி முன்பே எழுதி இருக்கிறேன். திரும்ப அவளின் அழகுத்திரு உருவத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன். நெற்றியின் பட்டையாக விபூதியும் வேலும் தாங்கி அருள்பாலிக்கும் அழகுச் சின்னம் குன்றக்குடியின் சுப்புலெட்சுமி.
மலையிறங்கி வரும்போது அடுத்தடுத்த படிகளில் எடுத்தேன். :)

சனி, 10 அக்டோபர், 2020

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், மருதீசர், வாடாமலர் மங்கையம்மன் திருக்கோயில்.

 பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், மருதீசர், வாடாமலர் மங்கையம்மன் திருக்கோயில்.

உலகத்திலேயே புகழ்பெற்ற விநாயகருக்குக் கட்டப்பட்ட தனிப்பெரும்கோயில்  பிள்ளையார்பட்டிக் கற்பக விநாயகர் கோவில். இது காரைக்குடியில் இருந்து 14 கிமீ தொலைவில் உள்ளது. குன்றக்குடி வழியாகத்தான் செல்லவேண்டும். இந்த விநாயகர் பிரம்மாண்டமானவர் ஏறக்குறைய இரண்டு மீட்டர் உயரம் , கன கம்பீரம்.

அநேகமாக எல்லா இந்துக்களின் இல்லங்களிலும் கடைகள் , நிறுவனங்கள் ஆகியவற்றிலும் இவரது புகைப்படத்தைப் பார்க்கலாம். இளையாற்றங்குடிக் கோயிலில் இருந்து  ( திருவேட்பூருடையார்)  பிள்ளையார் பட்டிக்கோயிலாரும் , இரணிக்கோயிலாரும் பிரிந்து தனிக்கோயில் அமைத்துக் கொண்டார்கள். இருவரும் சகோதரர்கள் என்பதால் இவர்களுக்குள் திருமண பந்தம் கொள்வதில்லை.

குடைவரைக் கோயில், கற்றளிக் கோயில் ஆகியவற்றோடு பிள்ளையார்பட்டி விநாயகர் வலம்புரி விநாயகர் &  மலையிலேயே உருவான சுயம்பு என்பதோடு இங்கே உறையும்  இறைவனுக்கும் இறைவிக்கும் இரு தெய்வத்திருநாமங்கள் என்பது விசேஷம். அர்ஜுன வனேசர் என்ற திருவீசர்/ மருதீசர், அசோக குஸுமாம்பாள் , சிவகாமவல்லி என்ற வாடா மலர் மங்கை ஆகியன.

 எல்லா நகரத்தார் கோயில்களிலும் ஈசனுக்கும் இறைவிக்கும் மட்டும்தான் முதலிடம், இங்கோ அவர்கள் மைந்தனுக்கு முதலிடம் கொடுத்துத் தனியே அமர்ந்திருக்கிறார்கள் அவர்கள். கேட்டதெல்லாம் கொடுப்பதால் இவர் கற்பக விநாயகர்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.