எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 30 அக்டோபர், 2020

தாம்பரம் வைத்தியநாதரும் இரட்டை விநாயகரும்.

தாம்பரம் வைத்தியநாதரும் இரட்டை விநாயகரும்.

தாம்பரத்தில் ( பெரும்பாக்கத்தில் ) கோயில் கொண்டிருக்கிறார்கள் இந்த வைத்தியநாதரும் & தையல்நாயகி அம்மனும் . அங்கே உள்ள ஒரு மெயின் ரோட்டில் இரட்டைப் பிள்ளையார் கோயில் ரொம்ப வித்யாசமாக இருந்தது.

இந்த பெரும்பாக்கம் வைத்தியநாதர் கோயில் கட்டப்பட்டு பதினைந்து ஆண்டுகள் ஆயிருக்கலாம். சமீபத்தில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு ஜொலிக்கிறது. அங்கங்கே வசதியான ஃப்ளாட்டுகள் இருக்கின்றன. ஆனால் கோயிலருகே அவ்வளவாக வீடுகள் இல்லை.

ஆனால் கோயில் ஜொலிக்கிறது. வெளியே ஒரு அரசமரமும் நாகர்களும் விநாயகரும்.
ஸ்ரீ வைத்தியநாதர் விடையேறு பாகனாகக் காட்சி அளிக்கிறார்.

புதன், 28 அக்டோபர், 2020

சகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர்.

சகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர்.

சகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர்.

பைரவர்தான் காக்கும் தெய்வம் காவல் தெய்வம். ஒவ்வொரு கோட்டையிலும் பைரவர் காவல் தெய்வமாக இருப்பதைக் காண்கிறேன். தர்மபுரியின் அதியமான் கோட்டையிலும் கூட பைரவர்தான் காவல் தெய்வம்.  

சென்னைக்குச் செல்லும்போதும், திருச்சி புதுக்கோட்டைக்குச் செல்லும்போதும், வரும்போதும் இந்தத் திருமயம் கோட்டை பைரவரை தரிசித்துச் செல்வது வழக்கம். பஸ்ஸிலிருந்தே மக்கள் வேண்டுதல் பணத்தை கோயிலைக் கடக்கும்போது சாலைகளில் போடுவார்கள் முன்பு. இப்போது காரில் செல்பவர்கள் இங்கே தேங்காய் உடைத்து வழிபட்டுச் செல்கிறார்கள். 

வடக்கு பார்த்த சந்நிதி. இவரை வணங்கிச் சென்றால்  வாகன விபத்துக்கள் ஏற்படாது. வழித்துணை பைரவர். மேலும் தோஷங்கள் நீக்கும் கண்கண்ட தெய்வம்.

திங்கள், 26 அக்டோபர், 2020

வயலினும் வீணையும் மீட்டும் கோபிகைகள்.

வயலினும் வீணையும் மீட்டும் கோபிகைகள்.

இரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவி கோயில் ஒரு சிற்பக் கலைக்கூடம். ஃபோட்டோகிராஃபர்ஸ் டிலைட் என்றும் சொல்லலாம். அங்கே தீட்டப்பட்டிருக்கும் இயற்கை வண்ண ஓவியங்களும் ஏ க்ளாஸ். காணக் கண்கோடி வேண்டும்.

சங்குசக்கரத்துடன் மஹாவிஷ்ணுவும்., அர்ஜுனருக்கு ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதை உபதேசித்த ஓவியமும். இதன் வரந்தையில் இருக்கும் திரை ஓவியங்களும் விதான வட்ட வடிவ ஓவியங்களும் கூட கண்கவர் அழகு.

நான்கு குதிரைகள் பூட்டிய தேர். குருஷேத்திரப் போர்க்களத்தைக் காட்டும்விதமாக பூமியின் சிவப்பு, அர்ஜுனனின் பவ்யம் கிருஷ்ணரின் உபதேசக்கோலம் எல்லாமே வெகு அழகு. சிந்தனை தெளிவுறுவதுபோல் தூரத்தே மேகம் வெளுப்பதும் கூட.


ஸ்ரீ மீனாக்ஷி திக்விஜயம். கயிலையில் சிவனுடன் பொருதும் தோற்றம். வெகு கம்பீரம். வெகு அழகு.

வியாழன், 22 அக்டோபர், 2020

சீர்மிகு சென்னையின் முப்பெரும் சக்திகள்.

சீர்மிகு சென்னையின் முப்பெரும் சக்திகள்.

ஈஸ்வரா வானும் மண்ணும்
ஹேண்ட்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா.
நீரும் நெருப்பும் ஃப்ரெண்ட்ஷிப் ஆனது உன்னாலீஸ்வரா.
மயிலையிலே கபாலீசுவரா.
கயிலையிலே பரமேஸ்வரா..

என்ற பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். மயிலை கபாலீஸ்வரரை ஒரு இரவு நேரத்தில் சென்று தரிசித்த போது இந்த கோபுர மின்விளக்கு  அலங்காரம் கண்ணைக் கவர்ந்தது.

ஏழு நிலை கொண்ட ராஜ கோபுரம் கிழக்கிலும் மூன்று நிலை கொண்ட கோபுரம் மேற்கிலும் அமைந்துள்ளது.  கற்பகாம்பாள் மயில் ரூபத்தில் தவமிருந்து கபாலீஸ்வரரை  வணங்கி வந்ததால் இந்த ஊருக்கு மயிலாப்பூர் என்று பெயர். எப்போதும் ஏதேனும் விசேஷம் நடந்து கொண்டிருக்கும் கோயில் இது. அகந்தை கொண்ட பிரம்மாவின் தலையைக் கிள்ளியதால் இவர் கபாலீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

செவ்வாய், 20 அக்டோபர், 2020

கொத்தரி சோலை ஆண்டவர் கோவில்.

கொத்தரி சோலை ஆண்டவர் கோவில்.

பள்ளத்தூர் அருகே கொத்தரியில் புரவிகள் வரிசை கட்டி நிற்கின்றன.  பார்த்தவுடனே அதிர்கிறது இதயம். அடர்ந்த விருட்சங்களிடையே ஆற்றலான புரவிகளின் ஆனந்த ஆர்ப்பரிப்பு. நேர்த்திக்கடனுக்காக மக்கள் செலுத்திய புரவிகளே இவை. ( நரியங்குடி கருங்குளம் போன்ற  சில கோயில்களில் புரவி எடுப்பு என்ற திருவிழா நடைபெறும். )

அதிர்வுகள் அதிகம் உள்ள புண்ணியஸ்தலம் இது.  புகைப்படம் எடுக்கலாமோ கூடாதோவென யோசனையோடு எடுத்த படங்கள் இங்கே.

காரைக்குடியில் இருந்து பதினோரு கிமீ தொலைவில் உள்ளது கொத்தரி. இந்தக் கோயிலில் வணங்க சில விதிமுறைகள் உள்ளன. சந்நிதிக்கு நேரே வந்து ஆண்களும் முழுக்கு நின்ற பெண்களுமே வணங்கலாம். மற்ற இளம்பெண்கள் பக்கவாட்டில் வந்து நின்று பிரசாதங்கள் பெற்றுக் கொள்ளலாம். வருவது என்றாலும் சந்நிதியின் நேரே வரக்கூடாது பக்கவாட்டிலேயே வந்து தரிசிக்க வேண்டும்.

வெள்ளி, 16 அக்டோபர், 2020

மெய்யாத்தாள் படைப்பு.

மெய்யாத்தாள் படைப்பு.

காரைக்குடியில் மெய்யாத்தா செட்டியப்ப  ஐயா படைப்பு கடந்த ஃபிப்ரவரி 14 அன்று நிகழ்ந்தது. எல்லாப் படைப்பையும் விட இந்தப் படைப்புக்கு அதிக கூட்டம். ஏனெனில் அனைவருமே வந்து பங்கேற்கலாம் என்பதே இதன் சிறப்பு. மற்றைய படைப்புகள் ( அக்கினி ஆத்தா, பாப்பாத்தி, அழகன் செட்டி ) போன்ற படைப்புகள் அவரவர் ஐயாக்கள் வீடுகள் , பங்காளிகள் வீடுகள் மட்டுமே பங்கேற்கக்கூடியதாக இருக்கும்.

அனைத்துமே வருஷப் படைப்பாக இருக்கும். மாசி மாசம் என்பது படைப்பதற்கு உகந்த மாதமாக இருக்கிறது. சிலர் ஆடியிலும் படைக்கிறார்கள். முன்னோரை வணங்குவதும், குலதெய்வத்தை வணங்குவதும் வாழ்க்கைக்கான காப்பு.

எங்கள் மெச்சி பெரியத்தா ( மெய்யம்மை ) ஆவிச்சி குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர்கள் அவ்வப்போது மெய்யாத்தா படைப்புப் பற்றியும் அனைவரும் வரலாம் என்பது பற்றியும் கூறி புடவை வாங்கி வைப்பதாகக் கூறுவார்கள். அதே சமயம் அங்கே வைக்கப்படும் புடவைகளைப் படைப்பு முடிந்ததும் ஏலத்தில் எடுக்கவும் பலர் போட்டி போடுவார்கள். ஏனெனில் இங்கே போழை/பேழை கட்டாமல் ( அதில் வைக்கப்படாமல் )  அந்தப் புடவைகள் அவ்வப்போது ஏலம் விடப்படுவதுண்டு. குழந்தைப் பேறு வேண்டுவோர், திருமணம், வேலை கிடைக்க வேண்டுவோர் இவற்றை ஏலத்தில் எடுப்பார்கள்.

புதன், 14 அக்டோபர், 2020

குன்றக்குடியின் சுப்புலெட்சுமி. மை க்ளிக்ஸ். MY CLICKS.

குன்றக்குடியின் சுப்புலெட்சுமி. மை க்ளிக்ஸ். MY CLICKS.

குன்றக்குடி ஷண்முகநாதர் கோயில் யானை சுப்புலெட்சுமியைப் பற்றி முன்பே எழுதி இருக்கிறேன். திரும்ப அவளின் அழகுத்திரு உருவத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன். நெற்றியின் பட்டையாக விபூதியும் வேலும் தாங்கி அருள்பாலிக்கும் அழகுச் சின்னம் குன்றக்குடியின் சுப்புலெட்சுமி.
மலையிறங்கி வரும்போது அடுத்தடுத்த படிகளில் எடுத்தேன். :)

சனி, 10 அக்டோபர், 2020

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், மருதீசர், வாடாமலர் மங்கையம்மன் திருக்கோயில்.

 பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், மருதீசர், வாடாமலர் மங்கையம்மன் திருக்கோயில்.

உலகத்திலேயே புகழ்பெற்ற விநாயகருக்குக் கட்டப்பட்ட தனிப்பெரும்கோயில்  பிள்ளையார்பட்டிக் கற்பக விநாயகர் கோவில். இது காரைக்குடியில் இருந்து 14 கிமீ தொலைவில் உள்ளது. குன்றக்குடி வழியாகத்தான் செல்லவேண்டும். இந்த விநாயகர் பிரம்மாண்டமானவர் ஏறக்குறைய இரண்டு மீட்டர் உயரம் , கன கம்பீரம்.

அநேகமாக எல்லா இந்துக்களின் இல்லங்களிலும் கடைகள் , நிறுவனங்கள் ஆகியவற்றிலும் இவரது புகைப்படத்தைப் பார்க்கலாம். இளையாற்றங்குடிக் கோயிலில் இருந்து  ( திருவேட்பூருடையார்)  பிள்ளையார் பட்டிக்கோயிலாரும் , இரணிக்கோயிலாரும் பிரிந்து தனிக்கோயில் அமைத்துக் கொண்டார்கள். இருவரும் சகோதரர்கள் என்பதால் இவர்களுக்குள் திருமண பந்தம் கொள்வதில்லை.

குடைவரைக் கோயில், கற்றளிக் கோயில் ஆகியவற்றோடு பிள்ளையார்பட்டி விநாயகர் வலம்புரி விநாயகர் &  மலையிலேயே உருவான சுயம்பு என்பதோடு இங்கே உறையும்  இறைவனுக்கும் இறைவிக்கும் இரு தெய்வத்திருநாமங்கள் என்பது விசேஷம். அர்ஜுன வனேசர் என்ற திருவீசர்/ மருதீசர், அசோக குஸுமாம்பாள் , சிவகாமவல்லி என்ற வாடா மலர் மங்கை ஆகியன.

 எல்லா நகரத்தார் கோயில்களிலும் ஈசனுக்கும் இறைவிக்கும் மட்டும்தான் முதலிடம், இங்கோ அவர்கள் மைந்தனுக்கு முதலிடம் கொடுத்துத் தனியே அமர்ந்திருக்கிறார்கள் அவர்கள். கேட்டதெல்லாம் கொடுப்பதால் இவர் கற்பக விநாயகர்.

வியாழன், 8 அக்டோபர், 2020

வைரவன்பட்டி வளரொளிநாதர் வடிவுடையம்மன் திருக்கோயில்.

வைரவன்பட்டி வளரொளிநாதர் வடிவுடையம்மன் திருக்கோயில்.

துலாபாரம் கொடுக்கப்படும் சிறப்புக் கோயில்கள் பலவுண்டு. அவற்றில் ஒன்றாக காரைக்குடியின் அருகில் இருக்கும் வைரவன்பட்டியில் இருக்கும் வைரவன் கோயில் திகழ்கின்றது. இதற்கு வைரவர் துலாபாரம் என்று பெயர்.

காரைக்குடியில் இருந்து 15 கிமீ தூரத்தில் உள்ளது இக்கோயில். குன்றக்குடி , பிள்ளையார் பட்டி வழியாக திருப்பத்தூர் செல்லும் சாலையில் சிறிது பிரிந்து செல்லும் உட்சாலையில் அமைந்துள்ளது. ( வழியில், நேமங்கோயில்,  இரணிக்கோயிலுக்குச் செல்லும் சாலையைச் சந்திக்கலாம். )
இக்கோயில் நகரத்தார் கோயில்களுள் ஒன்று. இக்கோயிலின் புஷ்கரணி மிகவும் அழகானது. அந்தக்காலத்திலேயே நீர் சேகரிப்பு முறைப்படி வாய்க்கால் , கால்வாய்களின் மூலம் நீர் வரத்து எப்போதும் இருக்கிறது.

செவ்வாய், 6 அக்டோபர், 2020

நேமம் ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் சௌந்தரநாயகியம்மன் திருக்கோயில்.

நேமம் ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் சௌந்தரநாயகியம்மன் திருக்கோயில்.

காரைக்குடியில் இருந்து நேமங்கோவில் 13 கிமீ தூரத்தில் உள்ளது. குன்றக்குடி, பிள்ளையார்பட்டி, வைரவன் பட்டிவழியாகச் செல்லலாம். குன்றக்குடியின் வடக்குப் பாதை வழியாகவும் செல்லலாம். இது கொஞ்சம் கிட்டப்பாதை.

சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக இக்கோயிலையும் கூறலாம். பிரகாரத்தில் அலங்கரிப்பது  எல்லாமே உக்கிர தெய்வங்கள்.

ஐந்துநிலை ராஜகோபுரம் நம்மைக் கம்பீரமாக வரவேற்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்கோவில் இது. நகரத்தார்களின் ஒன்பது கோவில்களில் இதுவும் ஒன்று.

இக்கோவிலின் புஷ்கரணியின்பெயர் சோழ தீர்த்தம். மிக அழகான தாமரைத்தடாகம் அது. இக்கோயிலின் எதிரே சத்திரம் உள்ளது. இங்கும் சஷ்டியப்த பூர்த்தி செய்துகொள்வோர் உண்டு.

இக்கோவிலில் விநாயகர் ஆவுடையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது சிறப்பு.
சந்நிதிக்குச் செல்லும் முன் வாயிலின்  விதானத்தில் ரிஷபாரூடர், மீனாக்ஷி திருக்கல்யாணம், நான்கு வேதங்களும் நான்கு நாய்களாக காலபைரவரைச் சுற்றி இருக்கும் காட்சி., சனகாதி முனிவர்களுடன்  கல்லாலின் புடை அமர்ந்த தக்ஷிணாமூர்த்தி. என அழகு ஓவியங்கள்.

வெள்ளி, 2 அக்டோபர், 2020

அறுபத்திமூவர் மடத்தில் திருமுறைத் தேனமுது.

அறுபத்திமூவர் மடத்தில் திருமுறைத் தேனமுது.

காரைக்குடி அறுபத்திமூவர் மடத்தில் திருமுறைப் பாராயணம் நடைபெற்றது. ஐந்து திருமுறைகளில் இருந்து 500 பாடல்கள் பாடப்பட்டன. சமயக்குரவர்கள் நால்வர் பாடிய பன்னிரு திருமுறைகளில் இருந்து இப்பாடல்கள் தொகுக்கப்பட்டிருந்தன. காரைக்கால் அம்மையாரின் பாடல்களும் இருந்தன.

நமக்கு மிகவும் பரிச்சயமான பாடல்கள் அநேகம். திருமூலரின் பாடல்கள் பலவும் கூட இடம் பெற்றிருந்தன. திருமுறைத் தேனமுதைச் சுவைத்து மகிழ்ந்தேன். இதற்கு ஆயிரம் ஜன்னல் வீட்டு நா. நா. நா.அழகப்ப செட்டியார் - உமையாள் ஆச்சி வீட்டார் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன், மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம், குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும், மந்திரமாவது நீறு, கூற்றாயினவாறு விலக்கலீர், அப்பனை நந்தியை ஆரா அமுதினை., சொற்றுணை வேதியன்  இவற்றோடு

திருவாசகமும் “ தொல்லை  இரும்பிறவிச் சூழுந்தளை நீக்கி அல்லலறுத்து ஆனந்தமயமாக்கியதே எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசமென்னும் தேன் “ஆகியனவும் பாடப்பட்டன.

ஒவ்வொரு பாட்டுக்கும் உரிய ராகத்தில் அவற்றைப் பாடினார்கள், இந்த பன்னிரு திருமுறைப் பாராயண குழுமத்தார். நாமும் பின் தொடர்ந்தோம்.
திருப்பொன்னூஞ்சல் என்னும் பாடல் பாடப்படும்போது இந்த ஊஞ்சலை ஆட்டியபடி பாடினோம்.

இதில் ஈசனும் இறைவியும் குழந்தையாகக் காட்சி தந்ததுபோல்  இரு சிறு மாலைகளும், ஒரு கழுத்தணியும் ஒரு குழையும் காட்சி அளித்தது.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.