எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 30 ஏப்ரல், 2020

இராசிகளை ஆளும் இரணியூர் நீலமேகப் பெருமாளும் கனகவல்லித் தாயாரும்.

 இராசிகளை ஆளும் இரணியூர் நீலமேகப் பெருமாளும் கனகவல்லித் தாயாரும்.

தீமையை அழித்து நன்மையைப் புதுப்பிக்க சிவன் விஷ்ணு காளி மூவரும் உக்கிர வடிவம் எடுத்த ஊர் இரணியூர்.

நரசிம்ம அவதாரமெடுத்து இரணியனை வதம் செய்த விஷ்ணுவின் தோஷம் நீங்க சரபேசுவரராக ஆட்கொண்டார் சிவன். எனவே ஆட்கொண்டநாதராக சிவனும், நரசிம்மேஸ்வரராக விஷ்ணுவும் அருள் பாலிக்கும் தலம் இது.

இங்கே ஸ்ரீ ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவி  திருக்கோயிலும், ஸ்ரீ நீலமேகப் பெருமாள் கனகவல்லித்தாயார் திருக்கோயிலும், ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோயிலும் அமைந்து அருள் பாலிக்கின்றன.

நீலமேகப் பெருமாள் கோயிலில் சிவனின் திருவிளையாடற் சிற்பங்கள் போல இங்கே  தசாவதாரச் சிற்பங்களோடு கிருஷ்ணரின் பால்ய லீலைகளும் சிற்பங்களாகப் பிரகாரக் கற்சுவரில் செதுக்கப்பட்டுள்ளன. பெருமாள் சந்நிதிக்கு முன்புற நடையின் விதானத்தில் கல்லால் செதுக்கப்பட்ட பன்னிரெண்டு ராசிகளும் மிக அழகு.  அவை கண்ணையும் கருத்தையும் கவர்ந்த்தால் புகைப்படம் எடுத்தேன். அவை உங்கள் பார்வைக்கு.

“பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச்செங்கண்
அச்சுதா! அமரர் ஏறே!
ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானே!”
முன்புற நடையும் வாயிலும்

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

தென் திருப்பதி அரியக்குடியின் மூலைக் கருடனும், சுதர்சனச் சக்கரத்தாழ்வாரும்.

தென் திருப்பதி அரியக்குடியின் மூலைக் கருடனும், சுதர்சனச் சக்கரத்தாழ்வாரும்.

திருப்பதிக்கு நேர்ந்து கொண்டால் கூட அந்தப் ப்ரார்த்தனையை அரியக்குடி பெருமாள் ஏற்றுக் கொள்வதால் நிறைவேற்றி விடலாம். ஆனால் அரியக்குடியில் நேர்ந்துகொண்டால் அந்தப் பிரார்த்தனையை அங்கேயேதான் நிறைவேற்றவேண்டும். அந்தத் திருவேங்கடமுடையான் அவ்வளவு சக்தி வாய்ந்தவர் என்பார்கள்.

திருப்பதி பெருமாளைச் சேவிக்கச் சென்ற சேவுகன் செட்டியார் அவர்கள் முதுமை அடைந்ததால் மலை ஏற முடியாமல் தவிக்க பெருமாளே அவர் வசிக்கும் இடத்துக்கு அருகில் இருப்பதாக அருள் பாலித்துக் கோயில் கொண்டதால் திருப்பதியை விட அரியக்குடியே அதிகம் சக்தி கொண்டது என்கிறார்கள்.இதைத் தென் திருப்பதி என்றும் சொல்கிறார்கள்.

சேவுகன் செட்டியார் தேடியபோது துளசிச் செடியும் காளாஞ்சியும் குங்குமமும் கண்ட இடத்தில் மூலவர் கிடைத்ததாகச் சொல்வார்கள்.  அங்கேயே பிரம்மாண்டமாகக் கோயில் ( கல் மண்டபங்கள் ) எழுப்பி உள்ளார்கள். வெளிப்பிரகாரத்தில் தசாவதாரச் சிலைகள் உள்ளன.

வருடா வருடம் புரட்டாசி சனிக்கிழமைகளில் தரிசனம் செய்வதோடு அவ்வப்போதும் அரியக்குடி சென்று வருவதுண்டு. மிகச் சிறப்பான வைணவத் தலம் அது.

வைகுண்ட ஏகாதசியன்று பெருங்கூட்டம் இருக்கும். வீட்டிலேயே மானஸபூஜை செய்து விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பதுண்டு. முடிந்தவர்கள் நாலாயிரம் திவ்யப் ப்ரபந்தமும் படிக்கலாம்.

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் 1
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே. 11


ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோ ரமே 1
சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே 11

அதைப் பற்றி விரிவா இங்கேயும் பாருங்க. !!!


அரியக்குடி கோயில் ஐநூறு ஆண்டுகளுக்கு உட்பட்டதுதான் என்றாலும் அதன் கீர்த்தி அளவிடற்கரியது.திருப்பதிக்கு நிகரான பெருமை உடையது. அதன் கோயிலும் திருச்சுற்று மாளிகையும் பிரம்மாண்டமானது. இயற்கை வண்ணங்களால் வரையப்பட்ட ஓவியங்களுடன் கண்கவர் காட்சி கொண்டது.

இங்கே பெருமாள் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி இருந்தாலும் இதன் உற்சவர் சேவுகன் செட்டியாரால் ஸ்ரீரங்கத்தில் உடையவரிடமிருந்து கேட்டுப் பெற்றுக் கொண்டுவரப்பட்டதாம். அதன் ஒவ்வொரு வாகனங்களும் மிகப் பிரம்மாண்டமானவை.   

ஹரி > அரி குடி கொண்ட ஊர் என்பதால் அரியக்குடி என வழங்கப்படுகிறது. மிக அழகான ஒன்பது நிலைக் கோபுரம். அதன் கருடாழ்வாரின் இருபுறமும் சிங்கங்கள் அமைந்து கவினுறக் காட்சி தருகிறார்கள். மூலவர் திருவேங்கடமுடையான் ஸ்ரீதேவி பூதேவி சமேதராகக் காட்சி தருகிறார்.

வைகுண்ட ஏகாதசியில் விரதமிருந்து அரியக்குடிப் பெருமாளைத் தரிசித்து மறுநாள் துளசி தீர்த்தம் அருந்தி முடிந்தவர்கள் பழ ஆகாரம் கொண்டு முடிப்பார்கள்.  அநேகர்  நெல்லிக்காய் தயிர்ப்பச்சடி, அகத்திக்கீரைப் பொரியல், சுண்டைக்காய்ப் பச்சடி, கருணைக்கிழங்குக் குழம்பு, பாசிப்பருப்பு மசித்து பச்சரிசிச் சோறு, நெய், தயிர் உண்டு விரதம் முடிப்பார்கள்.

முதல்நாள் தூக்கம் வராமல் இருக்க ஸ்தோத்திரங்கள் பாராயணம் செய்வதும் பரமபதம், தாயம் விளையாடுவதும் உண்டு.

அரியக்குடியில் பிரகாரத்தில் இருக்கும் அழகு கருடாழ்வார். :) இதன் புஷ்கரணியின் பெயர் ஆகாச கங்கை. அது இதன் எதிரில் படிகள் வைத்த மிகப் பெரிய சைஸ் கிணறு போல் இருக்கும்.
ஒன்பது நிலை ராஜ கோபுரம். தெங்கிளங்கீற்றுகளுக்குள் ஒய்யாரக் காட்சி தருகிறது.

ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

காஞ்சி அத்திவரதரும் அரியக்குடி திருவேங்கடமுடையானும்.

காஞ்சி அத்திவரதரும் அரியக்குடி திருவேங்கடமுடையானும்.

வைகுண்ட ஏகாதசியும் சிவராத்திரியும் இந்துக்கள் கடைப்பிடிக்கும் விரதத் திருநாட்கள்.

பெருமாள் பக்தர்கள் வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்து கோயிலுக்குச் சென்று பெருமாளைத் தரிசித்துச் சொர்க்க வாசல் வழியாகச் செல்வார்கள்.

காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலிலும் அரியக்குடி திருவேங்கடமுடையான் ஸ்தலத்திலும் எடுத்த சில படங்களைத் தெரிந்த தகவல்களுடன்  பகிர்கிறேன்.

காஞ்சி அத்தி வரதர் கோயில்  44 ஆவது திவ்ய தேசம்.  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. இங்கே உள்ள சிற்பவேலைப்பாடுகளும் கற்சங்கிலிகளும்,சிம்மங்களும் குதிரை வீரர்களும் காணக்கண்கோடி வேண்டும். 96 அடி உயரமுள்ள ராஜகோபுரம்.

இந்தக் கோயில் முழுக்கக் கல்வெட்டுகள். நடக்கும் படிகளில் கூட. நான் எடுத்த அநேக புகைப்படங்கள் பழைய போனிலும் லாப்டாப்பை ஃபார்மேட் செய்ததிலும் காணாமல் போய்விட்டன. :(

24 படி கொண்ட சிறு குன்றின் உச்சியில் அமைந்த சன்னதி அத்திகிரி வரதருடையது. காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களை அந்த 24 படிகள் குறிக்கிறதாம். பெருந்தேவி தாயாருக்குத் தனிச்சன்னதி உள்ளது. வெள்ளிப் பல்லி, தங்கப்பல்லி, ஆகியன சிறப்பு. திருக்குளத்தில் - அனந்தசரஸ் தீர்த்தத்தில் இருக்கும் அத்தி வரதரைக் கொடுப்பினை இருந்தால் 2019 இல் தரிசிக்கலாம். 40 வருடத்துக்கு ஒரு முறையே தரிசிக்கலாமாம் !

இங்கே இருக்கும் சுதர்சனச் சக்கரத்தாழ்வார் 16 கரங்களுடன் பிரம்மாண்டமாகக் கண்ணைக் கவர்கிறார். இவர் சன்னதியைச் சுற்றி 12 சக்கரத்தாழ்வார் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருமங்கை ஆழ்வாரால்  மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யஷேத்திரம் இது.

காஞ்சி வரதரைத் தரிசிக்க வந்த அழகுக் குழந்தைத் தெய்வம். 
96 அடி உயர ராஜ கோபுரம்.

வியாழன், 23 ஏப்ரல், 2020

முத்து நகரில் மும்மூர்த்திகளுடன் ஸ்வர்ண விநாயகர்.

முத்து நகரில் மும்மூர்த்திகளுடன் ஸ்வர்ண விநாயகர்.

இலுப்பைக்குடிக்குச் செல்லுமுன்பு முத்து நகரில் ஒரு விநாயகர் கோயில் மண்டலாபிஷேகத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது. சென்றமாதம் நடந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.எனவே மண்டலாபிஷேகத்தில் கலந்து கொண்டோம்.

அலமு வீடியோஸ் திரு வெங்கடாசலம் அவர்கள் பலவருடங்களுக்கு முன்பு எழுப்பிய கோயில் இது. இதற்குக் கும்பாபிஷேகம் என்று அழைத்திருந்தார்கள். ஆனால் மண்டலாபிஷேகத்தன்றே மதியம்தான் சென்று தரிசித்தோம்.

வருபவர்களுக்கு காளாஞ்சி கொடுக்கப்பட்டவிதம் அற்புதம். ( காளாஞ்சி என்றால் அர்ச்சனை செய்த தேங்காய் பழத்தை வந்திருந்தவர்களுக்குத் தாம்பூலமாகக் கொடுப்பது. சொல்லிக் கொண்டு செல்லும்போது கொடுக்கும் பிரசாதம். ) வருபவர்கள் எல்லாம் அர்ச்சனை செய்ய முன் ஏற்பாட்டுடன் வருவதில்லை. பக்கத்தில் கடைகள் ஏதும் இல்லை.

வெங்கடாசலம் அவர்கள்  அர்ச்சகர்களிடம் முன்பே தெரிவித்திருந்தபடி ஒரு சில்வர் பேசினில் தேங்காய் பழம் வெற்றிலை பாக்கு, சூடம் ஊதுபத்தி ஆகியன வைத்து வருபவர்களிடம் பேர் நட்சத்திரம் கேட்டு அர்ச்சனை செய்து கொடுத்தார்கள். வந்தவர்களுக்கும் மகிழ்ச்சி & திருப்தி. !
அங்கேயே காலை உணவும் ( ஏழுவகைப் பலகாரம், மதிய உணவும் வழங்கப்பட்டது. கோயில் முன்பக்கம் இரட்டை ஷாமியானா போடப்பட்டு அழகாக டேபிள் சேர் போட்டுப் பரிமாறினார்கள், மதிய உணவும் ஏழு காய் கறிகளுடன் வடை பாயாசம் கட்லெட், அப்பளம், சாம்பார் சாதம் புளி சாதம், கெட்டிக் குழம்பு, சாம்பார், இளங்குழம்பு, ரசம், தயிர் , ஊறுகாய், சிப்ஸ்  என கிராண்டாக இருந்தது.

செவ்வாய், 21 ஏப்ரல், 2020

கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்

கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்

கானாடுகாத்தானில் சக்தி வாய்ந்த மங்கள ஆஞ்ஜநேயர் கோயில் இருக்கிறது. துணையுடன் காட்சி தரும் ஆஞ்சநேயர் இங்கே அருள்பாலிக்கிறார். என்னது ஆஞ்சநேயருக்குத் துணைவியா.. ஆச்சர்யமா இருக்கில்ல.. ஆமாம். தன் மனைவி சுசீலையுடன் இங்கே அவர் காட்சி அளிக்கிறார் கோபுரத்தில். அவருக்கு ஒரு மகனும் உண்டு. அவர் பெயர் மகரத்துவஜன்.

கானாடு காத்தானில் இருக்கும் பிள்ளையார் கோயில், ஊரணி, அரண்மனை, பூங்கா ஆகியவற்றையும் எடுத்தேன். அவற்றில் சில புகைப்படங்களைப் பகிர்கிறேன்.

கானாடு காத்தான் எண்ட்ரன்ஸிலேயே இந்தக் கோயில் இருக்கு. சுற்றி வயல்களும் , பை பாஸ் ரோடுமாக ஒரே ஏகாந்தத்தில் லயித்திருக்கிறார் மங்கள ஆஞ்சநேயர். சனிக்கிழமைகளில் கூட்டம் கொள்ளாது. வெற்றிலை மாலை, வெண்ணெய்க் காப்பு, வடை மாலை சாற்றுபவர்கள் அதிகம்.

சிங்கங்கள் காவல் இருக்க நான்கு பக்கங்களிலும் கோபுரத்தைச் சுற்றி அழகழகான ஆஞ்சநேயர்கள்.

////அதலித பலதாமம் ஸ்வர்ண சைலாபதேஹம்
துநுஜவன க்ருசாநும் ஞானினாமக்ரகண்யம் |
ஸகல குணநிதானம் வானராணாமதீசம்
ரகுபதிவரதூதம் வாதஜாதம் நமாமி || 

ஆஞ்சநேய ஸ்வாமியைப் பற்றிய ச்லோகம்.////

-- துளசிதாசர் இயற்றிய ராமசரிதமானஸ்.


பஞ்சமுக ஆஞ்சநேயர்.
வீரதீர ஆஞ்சநேயர்.

ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

ராசிபுரம் நவமாருதியும் வீரதீரத் தூதனும்.

ராசிபுரம் நவமாருதியும் வீரதீரத் தூதனும்.

ராசிபுரத்தில் ஒரு அற்புதமான ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போகும் பாக்யம் கிடைத்தது. மன்னார்குடியில் எங்கள் வீட்டிற்குப் பின்புறம் ஒரு ஆஞ்சநேயர் கோயில் இருந்தது. அதைக் கடந்து போகும்போதெல்லாம் வெண்ணெய் வாசமும் மகிழம்பூ வாசமும் சுத்தும். சனிக்கிழமைகளில் சேவிக்கச் செல்வதுண்டு.

ஆஞ்சநேயர் என்றால் பிரம்மச்சரியம், மனோபலம், ஞானத் தெளிவு, சிரஞ்சீவித்தன்மை, வெற்றிலைமாலை, வெண்ணெய்க் காப்பு, தூது, சஞ்சீவி மலை, சூடாமணி, செயல்திறம், பணிவன்பு, எல்லையற்ற இறை பக்தி  எல்லாம் ஞாபகம் வரும். அசைக்க முடியாத மாபெரும் சக்தி அவர். ராமநாமம் ஜெபிக்கும் இடங்களில் எல்லாம் அவர் இருப்பார்.

த்ரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர்,த்ரிநேத்ர சதுர்புஜ ஆஞ்சநேயர், நாமக்கல் ஆஞ்சநேயர், சுசீந்திரம் ஆஞ்சநேயர், நெய்வேலி அஞ்சநேயர் ஆகிய ஆஞ்சநேயர்களைத் தரிசித்திருந்தாலும் கண்டவுடன் கொள்ளை கொண்டவர் இந்த ராசிபுரம் ஆஞ்சநேயர்.

நடக்க முடியாத காரியங்களையும் நடத்திக் கொடுப்பவர். கர்மவினைகளைத் தொலைப்பவர்.

”அஸாத்ய ஸாதக ஸ்வாமிந்
அஸாத்யம் தவ கிம் வதா
ராம து‘த கிருபாஸ’ந்தோ
மத் கார்யம் ஸாதய ப்ரபோ”

ராசிபுரம் கச்சேரி தெருவில் அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோயில் இருக்கிறது. அங்கே சென்று தரிசித்து நான் பிரமித்த ஆஞ்சநேயரை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்தக்கோயிலில் முக்கியமாகத் தூது சென்ற ஆஞ்சநேயரின் வீரதீர பராக்கிரமம் சிறப்பிக்கப்படுகிறது.  வெளியிலேயே கோபுரத்தின் பக்கவாட்டில் வாலில் ஆசனம் அமைத்து அமர்ந்த திருக்கோலத்தில் கம்பீர ஆஞ்சநேயர் காட்சி அளிக்கிறார்.  ராவணன் சபையில் ஆசனம் மறுக்கப்பட ஆஞ்சநேயர் தனது வாலையே சுருட்டி ஆசனமாக்கி அமர்ந்து  எதிரியிடம் போர்முரசு கொட்டியவர்.

இந்தக்கோயிலின் சிறப்பு பற்றிக் கோயில் அர்ச்சகர் பலவாறு கூறியும் பல்வேறு அலங்காரங்களில் எடுத்த புகைப்படங்களையும் காண்பித்தார். அன்றே எழுதி இருந்தால் நிறைய எழுதி இருக்கலாம். இன்று பலது மறந்துவிட்டது. ஞாபகத்தில் உள்ளதை எழுதுகிறேன்.
வீரமாருதி கம்பீர மாருதி
தீரமாருதி அதி தீர மாருதி
கீத மாருதி சங்கீத மாருதி
தூத மாருதி ராம தூத மாருதி

வெள்ளி, 17 ஏப்ரல், 2020

கார்த்திகை தீபம் ரெசிப்பீஸ் & கோலங்கள்

கார்த்திகை தீபம் ரெசிப்பீஸ் & கோலங்கள்.

கார்த்திகை தீபம் ரெசிப்பீஸ் 

1. தேன் மிட்டாய்
2. மிக்ஸ்ட் வெல்லப் பொரி
3. தினைக் கொழுக்கட்டை
4. காய்கறிப் பொரி
5. மைதா ஸ்கொயர்ஸ்
6. கோதுமை மாவு சுருள் முறுக்கு
7. பூந்தி அச்சு மிட்டாய்
8. நட்ஸ் சிக்கி
9.பால் பொங்கல்
10. சேமியா பழப்பாயாசம்.

புதன், 15 ஏப்ரல், 2020

திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.

திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.

”தொல்லை இரும் பிறவிச் சூழும் தளை நீக்கி” என்று இருகரம் சிரம்மேல் குவித்துச் சொல்லும்போதே இந்த உடலை விட்டுப் பறந்துவிட ஆசை வருகிறதல்லவா. அல்லல்படுத்தும் தொல்லைகளிலிருந்து எளிதாக யாருக்கும் சிரமமில்லாமல் விடுபட்டு  எல்லையில்லாத இறைவன் அடியைப் பற்றிடத் தோன்றும்.

சிதம்பரத்தில் இருந்தபோது நடராஜர் கோவிலில் தினப் பிரதோஷத்துக்கு என் தோழி சங்கரி மாமியுடன் சென்றதுண்டு. ஆனால் நெய்வேலியில் இருந்தபோதுதான் அங்கே இருந்த நடராஜர் கோவிலில் மாதப் பிரதோஷத்தின்போது சுவாமி உலாவில் திருவாசகம் சொல்லப்படுவதைக் கவனித்தேன். தினம் வீட்டில் சொல்லிப் பழகிக் கொண்டேன். அதில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் உணர்ந்து படித்தபோது மெய் சிலிர்த்தது.

இளையராஜா அவர்கள் தேசனே தேனார் அமுதே சிவபுரனே என்பதில் ஆரம்பித்து சிம்பொனி அமைத்திருப்பதைக் கேட்டதாக ஞாபகம்.

காரைக்குடியில் சென்ற சில வருடங்களாக திருநாவுக்கரசர் இறைபணி மன்றம் செயல்பட்டு வருகிறது.  சிவனடியார்கள் ஒவ்வொரு ஆலயத்திலும் வேண்டி விரும்பிக் கேட்பவர் இல்லத்திலும் எழுந்தருளி திருவாசகம் முற்றோதல் செய்து வருகிறார்கள்.
ஒரு நாள் முழுதும் ( காலை 9 - மாலை 5 ) வரை நடைபெறும் இந்த வழிபாட்டில் ஓரிரு முறை கலந்து கொண்டதுண்டு.என் தாய் தந்தை உட்பட அறுபதுபேர் கலந்து கொள்கிறார்கள். இவர்கள் விடாமல் கிட்டத்தட்ட மூன்று நான்கு ஆண்டுகளாக அநேக இடங்களில் திருவாசகம் முற்றோதல் செய்து வருகிறார்கள்.

திங்கள், 13 ஏப்ரல், 2020

ஓங்காரச் சுனையில் மிருதங்க ஒலி.

ஓங்காரச் சுனையில் மிருதங்க ஒலி.

களத்திர தோஷமும், புத்திர தோஷமும், காலசர்ப்பதோஷமும் இருந்தாலும்,

ஏழிலும் எட்டிலும் ராகுவோ கேதுவோ அமர்ந்திருந்தாலும்,

ஒன்பது கிரகங்களும் லக்னத்திலிருந்து ( ராகுவிலிருந்து கேதுவரை )  தலையும் வாலுமாய்ப் பக்கம் பக்கம் அமர்ந்திருந்தாலும் ( காலசர்ப்ப தோஷம் )

இம்மாதிரித்  தகராறு செய்யும் களத்திரன் ராகுவையும், ஞானகாரகன் கேதுவையும் கார்வார் செய்யணும்னா புகார் செய்யவேண்டிய கடவுள் பேரையூர் நாகநாத சுவாமிதான்.!

இக்கோயில் 1878 இல் ஆவணிமாதம் திங்கட்கிழமை திருவோண நட்சத்திரத்தில் இராமச்சந்திர மகாராஜா அவர்கள் உத்தரவுப்படி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.  அதன்பின் 99 ஆண்டுகள் கழித்து 1977 இல் மகராஜன் என்பவராலும், 1989 இல் அய்யாக்கண்ணு என்பவராலும் திருக்குடமுழுக்குப் பெருஞ்சாந்திவிழா நடைபெற்றிருக்கிறது.

காரைக்குடியிலிருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் நமுணசமுத்திரம் தாண்டி அமைந்துள்ளது பேரையூர் அருள்மிகு நாகநாத சுவாமி ஆலயம் . 42 கிமீ தூரம். இக்கோயிலைப் பார்த்தவுடன் எங்கெங்கும் நாகம் கண்டு ஒரே மிரட்சியாகிவிட்டது. தரையில், மதிலில், கோபுரவாசலில், நந்தவனத்தில் எங்கெங்கும் நாகர்கள்.
ஒவ்வொரு ஞாயிறும் மாலை நாலரையிலிருந்து ஆறு மணிக்குள் ராகுகாலத்தில் அங்கே இருக்கும் நாகர் சிலைக்கும் நாகராஜனுக்கும் பால் அபிஷேகம் செய்து நெய்விளக்கு ஏற்றுகின்றார்கள். அழகழகான இளையவர்கள் கூட்டம் அதிகம். பார்த்ததும் அவர்கள் அழகுக்கு இன்னும் ஏன் திருமணமாகவில்லை என்று ஆச்சர்யம் ஏற்பட்டது. எவ்வளவு கூட்டம் இருந்தாலும் அர்ச்சகர்கள் ஆறு மணிக்குள் பாலாபிஷேகம் செய்து முடித்து விடுகிறார்கள்.

ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

திருப்புகழைப் பாடப் பாட..

திருப்புகழைப் பாடப் பாட..

சில மாதங்களுக்கு முன்பு இல்லத்தில் திருப்புகழ் பாராயணம் நடைபெற்றது.

முருகப் பெருமானின் மேல் அருணகிரிநாதர் பக்தி கெழுமப் பாடிய இசைப்பாடல்கள் அடங்கியது திருப்புகழ். இதன் ஒவ்வொரு பாடலும் சொல்லும் பொருளும் சந்தநயமும் கொண்டு நம் மனதைக் கொள்ளை கொள்பவை.

அருணகிரி நாதர் பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த முருகனடியார். இவர் அருளிய பத்தாயிரம் பாடல்களில் 1307 பாடல்களே கிடைத்துள்ளன. அதில்  இருந்து ”திருப்புகழ் 108 மணிமாலை” என்று நூற்று எட்டுப் பாடல்கள் மட்டும் ”திருமுருகன் திருப்புகழ் பாராயணக் குழுவினரால் “தொகுக்கப்பட்டு பக்தர்களால்  பாடப்பட்டு வருகிறது.

மண்ணுலகில் மனிதமனங்களில் இருக்கும் ஆலகால விஷத்தைத் தான் எடுத்துக் கொண்டு மனிதர்கள் நன்னெறியுடன் வாழப் பக்தி நெறியைக் குழைத்துத் திருப்புகழ் என்னும் அமிர்தத்தை அளித்தாராம் அருணகிரிநாதர்.

திருவண்ணாமலைக் கோபுரத்தில் ஏறி வாழ்வை வெறுத்துத் தன்னை மாய்க்கத் துணிந்த இவரைக் கந்தவேள் காப்பாற்றித் தன்னைப் பாடுமாறு பணித்தாராம். ”முத்தைத் தரு பத்தித்திரு நகை” என முருகன் அடி எடுத்துக் கொடுக்க பல சந்தப்பாக்களைப் பாடினாராம்.

இந்தத் திருப்புகழ் அனைத்தையும் ஊர் ஊராகச் சென்று நமக்காகச் சேகரித்தவர் வ. த. சுப்ரமணியப் பிள்ளை என்னும் இறையருள் பெற்றவர்.  இவரது மைந்தர் வ. சு. செங்கல்வராயப் பிள்ளை இவற்றைப் பதிப்பித்தார். இந்தத் திருப்புகழ் அமிர்தம் மந்திரமாகி சேஷாத்ரி சுவாமிகள் மூலமாக வள்ளிமலை சுவாமிகளுக்குச் சென்றதாம். இவரைத் தொடர்ந்து பொதுமக்களுக்கும் திருப்புகழ் அடையச் செய்தவர்கள் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களும், திருப்புகழ் இராகவனும் ஆவார்கள். அவர்கள் பணிக்குச் சிரந்தாழ்ந்த வணக்கங்கள்.

2009 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதன் முதலில் திருப்புகழ் இசை அமைக்கப்பட்டு காரைக்குடி,செக்காலை பொறியாளர் சுப்ரமணியன் அவர்களின் புதல்வர் ஆடிட்டர் மெய்யப்பன் இல்லத்தில் 108 ஏகதின திருப்புகழ் பாடப்பட்டது. இதை துபாயில் இருக்கும் எனது சகோதரன் மற்றும் அவரது நண்பர்கள் இல்லத்திலும் பின்பற்றிப் பாடி வருகிறார்கள்.
அதிகாலையில் பூஜைக்குத் தயாராய்க் கோலங்களும் கடவுள் திருவுருவமும்.

வெள்ளி, 10 ஏப்ரல், 2020

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்.

கோபுரம் (கோயில்)

இந்த இணைப்பில் கோயில் கோபுரங்களைப் பற்றிப் பார்க்கலாம். கோபுர தரிசனம் என்பது இன்றியமையாத ஒன்று. கோயிலுக்குச் செல்ல இயலாவிட்டாலும் கோபுரத்தைப் பாத்துக் கன்னத்தில் போட்டுக் கொள்வதுண்டு. கோயிலின் ஆறுகாலப் பூசைப் பொழுதுகளில் இல்லத்திலிருந்தபடியே கோபுர தரிசனம் மட்டுமே கண்டு வணங்குபவர்களும் உண்டு. மிகப் பெரும் கோபுரங்கள் விமானம் என்று அழைக்கப்படுகிறது. ( டவர்ஸ், ஸ்தூபி, போன்றவையும் கோபுரங்கள்தான்  ஆனால் இங்கே கோயில் கோபுரம் மட்டும் குறிப்பிட்டுள்ளேன். )

தென் தமிழகத்தில்தான் பெரும்பாலும் கோபுரங்கள் சிறப்பான சிற்ப அமைப்போடு இருக்கின்றன. கல்லால் செய்யப்பட்டவை. மேலும் ஒரு நிலைக் கோபுரத்தில் இருந்து பதினாறு நிலைக் கோபுரம் வரை உள்ளன. பதினாறு கோபுரங்கள் அமைந்த கோயிலும் உண்டு.

கோபுரத்தைப் பார்க்கும்போதெல்லாம் கடவுள் நினைவுக்கு வருவார் என்பதால் கோபுர தரிசனம் கோடிப்புண்ணியம் என்றாயிற்று.

இது கோயிலூர் கோயில் கோபுரம்.

  
இது வைரவன்பட்டி கோயில் கோபுரம்.

புதன், 8 ஏப்ரல், 2020

வளம்தரும் வளரொளிநாதரும் வடிவுடை நாயகியும் அருள்தரும் கருப்பரும்.

வளம்தரும் வளரொளிநாதரும் வடிவுடை நாயகியும் அருள்தரும் கருப்பரும்.

கிபி ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது வைரவன்பட்டி வைரவன் கோயில். காரைக்குடியில் இருந்து பதினான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது வைரவன் பட்டி. குன்றக்குடி, பிள்ளையார்பட்டி தாண்டியவுடன் ஒரு கிலோமீட்டர் பயணத்தில் வைரவன்பட்டியை அடையலாம். இது நகரத்தாரின் ஒன்பது நகரக் கோயில்களில் ஒன்று.  நகரத்தார் திருப்பணி செய்த நகரச் சிவன்கோயில்.இங்கே நகர சத்திரம், திருமண மண்டபம் உணவுக்கூடம் எல்லாம் இருக்கிறது. திருமணம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் ஆகியன சிறப்பாக நடைபெறுகின்றன.

சிற்பக் கலைக்குப் பெயர்பெற்ற கோவில்களில் இதுவும் ஒன்று. கிழக்கு நோக்கிய கோவில். ஐந்து நிலை ராஜகோபுரம், சஞ்சீவி மலையைக் கொண்டு வந்து லெட்சுமணனைக் காப்பாற்றியதால் விசுவரூப ஆஞ்சநேயரை வணங்கும் ராமர், நாய்வாகனத்துடன் காட்சி தரும் வைரவர், ஏழிசைத்தூண் மண்டபத்தில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தி, தோஷம் நீக்கும் பல்லி, குடைவரைக் கோயில் பாணியில் அமைந்த சண்டீசர் சன்னதி, போருக்குச் செல்லும் குதிரை வீரன், கண்ணப்ப நாயனார், கொடிப்பெண்கள் சிற்பங்கள், ஏறழிஞ்சில் மரம் , வைரவர் தனது சூலத்தால் உருவாக்கிய வடுகதீர்த்தம்/வைரவதீர்த்தம் என்ற புஷ்கரணி ஆகியன சிறப்பு.

பிரம்மாவின் அகந்தையை அழிக்க சிவன் உருவாக்கிய பைரவர் பிரம்மாவின் ஐந்தாவது தலையைக் கிள்ளி எறிந்தார். அந்த பைரவர் தண்டமும், பிரம்மன் தலையும், முத்து மாலை, சிலம்பு அணிந்து கோயில் கொண்டுள்ள ஸ்தலம் இது. பைரவர் காக்கும் கடவுள். எல்லா சிவன் கோயில்களிலும் எழுந்தருளி இருப்பார். தினமும் திருக்கோயில் சாவியை பைரவர் சன்னதியில் அனுமதி பெற்று எடுத்து அர்த்தசாம பூசையின்போது அவரிடம் ஒப்படைத்துத்தான் கதவை சாத்துவார்கள்.

மும்மூர்த்திகளிலும் யார் பெரியவர் என்ற போட்டி வந்தபோது அடிமுடி அறியவொண்ணா அண்ணாமலையாராக நின்று ஒளிவடிவமாகத் தோன்றி மலையாகக் குளிர்ந்ததாலேயே இவர் வளர் ஒளி நாதரானார்.
இரண்டு கோபுரங்கள். கட்டுக்கோப்பாக நிர்வாகிக்கப்படும் கோயில் வளாகம். ( இதன் புஷ்கரணியை முன்பே ஒரு இடுகையில் போட்டிருக்கிறேன்.

ஊருணிகள் - திருக்கோயில் புஷ்கரணிகளும் தாமரை பூத்த தடாகங்களும். )

திங்கள், 6 ஏப்ரல், 2020

உய்யவந்த அம்மன் கோயிலில் வித்யாசமாய் ஒரு வேண்டுதல்.

உய்யவந்த அம்மன் கோயிலில் வித்யாசமாய் ஒரு வேண்டுதல்.

புதுவயல் சாக்கோட்டையில் உய்யவந்த அம்மன் கோயில் உள்ளது. இங்கு இருக்கும் அம்மனை உய்ய வந்த தாயார் என்றும் உய்ய வந்த நாச்சியார் என்றும் சொல்கிறார்கள். அருமையான எளிமையான கோயில். கோபுரங்கள்தான் மூன்று நான்கு இருக்கு.
வெளியிலேயே உக்கிரம் தெரிகிறதல்லவா. கோபுரத்தில் முருகன்.

சனி, 4 ஏப்ரல், 2020

ஊருணிகள் - திருக்கோயில் புஷ்கரணிகளும் தாமரை பூத்த தடாகங்களும்.

ஊருணிகள் - திருக்கோயில் புஷ்கரணிகளும் தாமரை பூத்த தடாகங்களும்.

திருக்கோயில்களுக்குச் செல்லும்போதெல்லாம் என்னைக் கவர்ந்த இடங்கள் அதன் ஊருணிகள்தான். நன்கு மகிர மகிர நீர் நிறைந்து தெப்பக்குளங்கள் அழகுறக் காட்சி அளிக்கும். ஊரணி ( ஊருணி) , குளம், புஷ்கரணி, தடாகம், வாவி, தீர்த்தக் குளம்,  எல்லாமே ஒன்றுதான். கோயிலுக்குச் செல்வோர் முதலில் இந்தத் தீர்த்தத்தைத் தம்மேல் தெளித்துக் கொண்டு ( ப்ரோக்‌ஷணம் செய்து கொண்டு ) கால்களை சுத்தம் செய்து கொண்டு உள்ளே சென்று இறைவனை வணங்குவர்.

எனக்கு எப்போதும் ஏதோ ஒரு மையல் அந்த மகிர்ந்து கிடக்கும் நீரின் மீதும், பசியப் படர்ந்து கிடந்து கிளர்ச்சியைத் தூண்டும் பசுமைகளின் மீதும். சில ஊரணிகள் ப்ளேக்ரவுண்ட் மாதிரி காலியாக இருந்தாலும் சிறிதளவாவது நீர் இருக்கும்

பொதுவாக தென்னகக் கோயில்களின் கட்டுமானங்களில் சிறந்தது இந்தத் திருக்கோயில் புஷ்கரணிகள்தான். இவை பெரும்பாலும் சதுர வடிவில் அமையும். நாற்புறமும் படிகள். நாற்புறமும் ஒவ்வொரு கரையிலும் இரு இடங்களில் படிகள் இருக்கும். சில செவ்வக வடிவிலும் வெகு அரிதாக சில வட்ட வடிவிலும் அமைவதுண்டு.

நல்ல கட்டுமானத்தோடு தூர் வாரப்பட்டுப்பராமரிக்கப்படும். மேலும் இக்குளங்களில் ஈசான்ய மூலையில் ஒரு கிணறு கட்டாயம் இருக்கும். இன்னும் ஊரணிக்குள்ளே  சில பல இடங்களிலும் இருக்கலாம். ஊரணியில் நீர் வற்றிய தருணங்களில் இவற்றில் சிலர் நீர் இறைப்பதை காரைக்குடி நகரச் சிவன்கோயிலில் பார்த்திருக்கிறேன்.

தெப்பம் மிதக்கும் காட்சியை மனக்கண்ணுள் கொண்டுவரும் தெப்ப மண்டபத்தோடு இருக்கும் இத்திருக்குளம் காரைக்குடி திருக்கோயிலூரில் உள்ளது . என்றைக்கும் நீர் குறையாது. இம்மாதிரிக் குளங்களுக்கு கம்மாய் - கண்மாய் போன்ற மற்ற நீர் தேங்கும் இடங்களில் இருந்து நீர் வரத்து இருந்துகொண்டே இருக்கும்.
இது அதே திருக்கோயிலூரில் உள்ளே நுழைந்ததும் காணப்படும் ஊரணி. படிகளின் கட்டமைப்புகளையும் கரைகள் பலப்படுத்தப்பட்டிருப்பதையும் பாருங்கள்.

வியாழன், 2 ஏப்ரல், 2020

துர்க்கை உள்ளே லெக்ஷ்மி வெளியே.

துர்க்கை உள்ளே லெக்ஷ்மி வெளியே.

காரைக்குடியில் இருந்து இரணியூர் 25 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவி கோயிலில் உக்கிரமும் அதிகமாக இருப்பதால் வக்கிரம் கொண்ட அமைப்பில் கோயில் திரு உருவங்கள் அமைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். தூண்களில் நவ துர்க்கைகள் உள்ளிருக்க, அஷ்டலெக்ஷ்மிகளும் வெளிப் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் அமைந்திருப்பது இக்கோயிலில் மட்டுமே. பொதுவாக லெக்ஷ்மி உள்ளே இருப்பதும் துர்க்கைகள் வெளிச்சன்னதியில் காவல் காப்பதும்தான் வழக்கம்.

நரசிம்மர் உக்கிரமானபோது சிவன் ( ஆட்கொண்டநாதர் ) சரபேசராக அவர் உக்கிரம் தணித்த கோயில். மேலும் அதனால் அண்ணனைக் கண்ட சிவபுரந்தேவியும் உக்கிரமாகக் காட்சி அளிப்பதாகக் கூறுகிறார்கள். இவள் உக்கிரமான போது உருவான நவசக்திகள்தான் நவ துர்க்கைகளாக அருள் பாலிக்கிறார்கள்.அம்மன் சன்னதி முன் நவதுர்க்கைகள் அணிவகுத்து நிற்கின்றார்கள் கொள்ளை அழகு.

ருத்ர துர்க்கை.

ஜல துர்க்கை.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.