எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 29 மே, 2020

திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதப்பெருமாள் ஆலயத்தில் போதி மரம்..

திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதப்பெருமாள் ஆலயத்தில் போதி மரம்..


இத்திருத்தலைத்தைப் பார்த்ததுமே மிகக் கம்பீரமாகவும் பொலிவாகவும் இருந்தது. பெருமாள் உறையும் ஸ்தலங்கள் என் மனதிற்குப் பிடித்தமானவை. அதிலும் பள்ளி கொண்ட பெருமாள் என்றால் ரொம்பவே பிடிக்கும். ரொம்ப அட்டகாசமாக தலைக்குக் கீழே கை கொடுத்து அரவணையில் அரைத்துயிலில் அவர் அருள் பாலிப்பதே அம்சம். இங்கே வலதுகை கீழ் வைத்து  சயனத்திருக்கோலத்தில் இருக்கிறார் ஸ்ரீ தர்ப்ப சயன இராமர்.  . முதலில் அவரது பிரம்மாண்டத் திருக்கோலத்தில் வியந்து பாத தரிசனம் செய்து திரும்பத் திரும்ப அந்தக் கண்ணனைக் கார்மேக வண்ணனைக் கரிய எம் பெருமானை கண் நிறைய வணங்கினேன்.

புதன், 27 மே, 2020

திருக்கடையூர் அபிராமி, சீர்காழி சட்டைநாதர் கோயில்கள்.

திருக்கடையூர் அபிராமி, சீர்காழி சட்டைநாதர் கோயில்கள்.

தோணியப்பரைப் பார்த்துத் தோடுடைய செவியன் என்று ஞானப்பால் பெற்ற திருஞான சம்பந்தர் பாடிய பாடல் இங்கேதான் நிகழ்ந்தது.

திருக்கடையூர் காலசம்ஹார மூர்த்தியையும் அபிராமியையும் அதே நாளில் தரிசித்தோம்.

இங்கே தங்கவில்லை. அழகாக இருந்தது என்று எடுத்தேன். 

திங்கள், 25 மே, 2020

பூமீஸ்வர ஸ்வாமிகோயில் - புதுவண்ணத் தேர்.

பூமீஸ்வர ஸ்வாமிகோயில் - புதுவண்ணத் தேர்.

கடியாபட்டியில் இருக்கும் ஸ்ரீ பிரம்ம வித்யாம்பாள் சமேத ஸ்ரீபூமிஸ்வர ஸ்வாமி கோயிலின் ஒன்பதாம் திருவிழா நாளான இன்று தேரோட்டம் நடைபெறுகிறது. சிலநாட்கள் முன்பு அங்கே சென்ற என்னை எனது சித்தப்பா அத்தேரைக் காண அழைத்துச் சென்றார்கள். தூரத்தில் இருந்து பார்க்கும்போது உயரமாகக் கவர்ந்ததே ஒழிய அதன் சிறப்பம்சங்கள் புரியவில்லை. ஆனால் கிட்டே சென்று பார்த்தபோது அடடா.. என் சொல்வேன். அங்கே முழுதும் புதிதாக வண்ணம் தீட்டப்பட்டு கண்கவர நின்றிருந்த தேரைக் கண்டேன். மெய்மறந்தேன்.

சுற்றிச் சுற்றிப் புகைப்படம் எடுத்தேன். :)


எனக்கு இந்தத் தேரையும் அதன் வண்ணந்தீட்டப்பட்ட குதிரைகளையும்  பார்க்கும்போது கண்மணி குணசேகரனின் ஒரு கதை ஞாபகம் வந்தது. J
 



இதில் தேர்க்கால் கட்டை, சக்கரம், குதிரைகள், தேரின் எல்லாப் பக்கங்களும் எடுத்திருக்கிறேன்.

சனி, 23 மே, 2020

காமதேனுவும் கீதோபதேசமும் பட்டாபிஷேகமும்.

காமதேனுவும் கீதோபதேசமும் பட்டாபிஷேகமும்.

காரைக்குடிக்கு அருகில் இருக்கும் இரணிக்கோயில் சிற்பங்களுக்கும் ஓவியங்களுக்கும் புகழ்பெற்றது. இங்கே நவதுர்க்கைகள் உள்ளே ஆட்சி புரிய, அஷ்டலெக்ஷ்மிகளும் வெளி மண்டபத்தில் கொலுவீற்று அருள் பாலிக்கிறார்கள். குபேரன் வணங்கிய ஸ்தலம். அஷ்ட பைரவர்களும் உக்ரபைரவர்களும் காட்சி அளிக்கும் ஸ்தலம். நீலமேகப் பெருமாளுக்கும் இரணிக்காளிக்குத் தனிக்கோயில் இருக்கும் ஸ்தலம்.


காமதேனு

வியாழன், 21 மே, 2020

ஆதி கேசவனும் மாதொரு பாகனும் செங்கோட்டு வேலவனும்.

ஆதி கேசவனும் மாதொரு பாகனும் செங்கோட்டு வேலவனும்.

வெகு வருடங்களாக ரங்ஸ் என்னைத் திருச்செங்கோடு அழைத்துச் செல்வதாகச் சொல்லிக்கொண்டிருந்தார். ஏனோ அது அமையவேயில்லை. அக்கம் பக்கம் ஊருக்குப் போவோம்.ஆனால் திருச்செங்கோடு போக வாய்க்காது.

பொதுவாக ரங்கஸுக்கு மலையேறுவதில் விருப்பம் அதிகம். இந்த மலை ஏறுவது கடினமான ஒன்று என்றும் அதனாலேயே போகவேண்டும் என்றும் சொல்வார். பேருந்து வசதியும் உண்டு.

ஒரு சுபயோக சுபநாளில் ஒரு வழியாக பெருந்துறையில் இருந்து செங்கோட்டு வேலவனைத் தரிசிக்கப் புறப்பட்டோம்.

இந்தக் கோயில் புராணம் சுருக்கமாக. - இங்கே சிவனை மட்டும் பிருங்கி முனிவர் வலம் வந்து வணங்க வருந்திய உமை தவம் செய்து சிவனின் உடலில் பாதி இடம்பெற உமையொரு பாகன் ஆனார் சிவன்.

செவ்வாய், 19 மே, 2020

நாகவல்லி நாககன்னியுடன் மங்கள ராகு.

 நாகவல்லி நாககன்னியுடன் மங்கள ராகு.

கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருநாகேஸ்வரம் சிறந்த ராகு ஸ்தலம் ஆகும். இது நவக்ரஹக் கோயில்களில் ஒன்று. ராகுபகவான் மட்டுமில்லை, இவரோடு ஆதிசேஷன், கார்கோடகன், தக்‌ஷன், அநந்தன் ஆகிய பாம்புகள் சிவனை வழிபட்ட ஸ்பெஷல் தலம் இது.

இங்கே வரும் 27 ஆம் தேதி ராகு பெயர்ச்சிக்காக லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

காவிரிக்கரையில் அமைந்துள்ள இக்கோயிலில் ஸ்ரீ நாகநாதஸ்வாமி கோயில் கொண்டுள்ளார்.. திருச்சுற்றில் ராகுபகவான் நாகவல்லி, நாககன்னியுடன் எழுந்தருளி உள்ளார்.

ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கே பாலாபிஷேகம் செய்து வணங்கி வருகிறார்கள். ராகு தோஷம் என்றால் பேரையூர் கூடப்போகக்கூடாதாம். இவர்தான் சுப்ரீம் பவர் உள்ளவராம். இவரைத்தான் வணங்கணுமாம்.

தினப்படியுமே ராகுகாலத்தில் பூஜையும் பாலாபிஷேகமும் நடைபெறுகிறது. இவர் மேல் பொழியும் பால் நீல நிறமாக மாறிவிடுவதாகச் சொல்கிறார்கள்.

500 ரூ, 250 ரூ டிக்கெட்டுகள் உண்டு.

ராகு சன்னதியின் எதிர்த்தாற்போல் உள்ள மாபெரும் ஹாலில் முதலில் 500 ரூ டிக்கெட்காரர்களும் அதன் பின் 250ரூ டிக்கெட்காரர்களும் அமர்ந்துகொள்ளலாம்.

தோஷம் ஏதுமில்லாமல் சைடாக பிரகாரத்தில் வலம் வரும் பக்தர்களும் எட்டி தரிசனம் செய்து கொள்ளலாம்.

அபிஷேகம் ஆராதனை முடிந்ததும் காளாஞ்சியும் மாலையும் தருகிறார்கள். வெளியே காலையில் வாங்கிய ஒரு மாலை & அர்ச்சனைப் பை 250 ரூ. இதையும் நிர்வாகமே கொடுத்து நியாயமான காசை வாங்கிக்கொள்ளலாம்.

500 ரூ டிக்கெட்டுக்கே இம்புட்டுக்கூட்டமா என்று இருந்தது.

இந்த ராகு கேதுவுக்கெல்லாம் உக்கார இடமேயில்லையா.  . இப்பல்லாம் எல்லார் ஜாதகத்திலும் உக்கார்ந்திருக்காப்புல இருக்கு , எல்லாப் புள்ளக ஜாதகத்திலும் உக்கார்ந்து கல்யாணத்தைக் கெடுக்குது  என்று ஒருவர் சொன்னதும் பக்கத்திலிருந்தவர் சொன்னார்., எல்லார் ஜாதகத்திலும் ஏதோ ஒரு கட்டத்தில் ராகு கேது இருக்கத்தான் இருக்கும். அவர்கள் உட்கார்ந்திருக்கும் ஸ்தானம் பொறுத்து வாழ்வில் ஏற்படும் தீமைகளுக்குப் பரிகாரம் செய்யவே இவற்றை ஜோசியர்கள் பரிந்துரைக்கிறார்கள் என்றார்.




கௌதம மகரிஷி, பராசரர், பகீரதன் ஆகியோரும் வழிபட்டிருக்காங்க. கம்பீர ராஜகோபுரம். ஏழு இராஜகோபுரங்களை உடைய ஸ்தலம். பூலோகத்தில் சிறந்தது என்று சிவபெருமானே சொன்ன கோயிலாம் இது.

ஞாயிறு, 17 மே, 2020

விருத்தன் திருமணமும் விடையேறு பாகன் திருவிளையாடல்களும்.

விருத்தன் திருமணமும் விடையேறு பாகன் திருவிளையாடல்களும்.

இரணிக்கோயில் சிற்பங்களைப் போல மிக அழகு வாய்ந்தவை வெளி மண்டபத்தில் இயற்கைச் சாயம் கொண்டு வரையப்பட்டிருக்கும் இந்த ஓவியங்கள்.
வள்ளி திருமணம். ! முருகன் விருத்தன் வேடத்தில் வந்து வேழமுக அண்ணனின் உதவியோடு வள்ளியை மணம் புரிந்தது.

வெள்ளி, 15 மே, 2020

இரணிக்கோயில் தூண்சிற்பத் திருமூர்த்தங்கள்.

இரணிக்கோயில் தூண்சிற்பத் திருமூர்த்தங்கள்.

புகைப்படக்காரர்களின் டிலைட் என்றால் அது இரணிக்கோயில் என்றால் மிகையாகாது. காரைக்குடிக்கு அருகில் இருக்கும் ஒன்பது நகரக் கோயில்களில் இந்த சிற்பக் கலையில் மாத்தூர், வைரவன் கோயில், நேமம், இரணிக்கோயில் ஆகிய சிறப்பிடம் பிடிக்கின்றன. அதிலும் இரணிக் கோயில் புராணக் கதையின் படியும் சரி, சிற்பவேலைப்பாடுகளிலும் ஓவியங்களிலும் சரி முதலிடம் பிடிக்கிறது. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என அவற்றைப் படம் பிடித்துப் பகிர்ந்துள்ளேன்.

சிவனின் 108 திருமூர்த்தங்களும் இடம் பெற்றிருக்கலாம். ஆனால் நான் சிலவற்றையே படம் பிடித்திருக்கிறேன். நல்ல கரவு செறிவான சிற்ப வேலைப்பாடுகள். கல்லில் சங்கிலி , நகம், முடி போன்றவற்றைக் கூட யதார்த்தத்தைப் போல அச்சு அசலாக வடித்திருக்கிறார்கள். அந்தக் காலத்தில் அப்பிடியாப்பட்ட ஸ்தபதிகள் இருந்திருக்கிறார்கள். இப்போது எங்கே எனத் தெரியவில்லை.

இக்கோயில்கள் பெரும்பாலும் கற்றளிக்கோயில்கள்தாம். இங்கே பிக்ஷாடணர் காட்சி அளிக்கின்றார். அவருடைய பாதரட்சைகளைக் கூடப் பாருங்களேன்.நாணம் மீறிய ஆசையால் தன்னிலை மறக்கும் ரிஷி பத்தினிகளும் வடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
முயலகனும் சூரசம்ஹார மூர்த்தியும். அவரது சிரசைப் பாருங்கள். தீ லாவுகிறது.

புதன், 13 மே, 2020

காரைக்குடிக்கு அருகே கல்வி, செல்வம் , சந்தோஷம் அளிக்கும் கோயில்கள்.

காரைக்குடிக்கு அருகே கல்வி, செல்வம் , சந்தோஷம் அளிக்கும் கோயில்கள்.

காரைக்குடிக்கு அருகில் இருக்கும் பிள்ளையார்பட்டி, குன்றக்குடி உலகப் புகழ் வாய்ந்த கோயில்கள். ஆனால் இங்கே குன்றக்குடி பிள்ளையார்பட்டி சாலையில் இருக்கும் லெக்ஷ்மி குபேரர் கோயில்( வாஸ்து கோயில் ), ஞான சரஸ்வதி கோயில் மற்றும் பாதரக்குடி அருகே இருக்கும் சந்தோஷி மாதா கோயில்களும் சிறப்பு வாய்ந்தவைதாம்.

விநாயகருக்கு அருகில் லெக்ஷ்மி , சரஸ்வதி இருப்பதைப் பார்த்திருப்பீர்கள் புகைப்படங்களில் . அதே போல் சந்தோஷி மாதா விநாயகரின் மகள். இம்மூவரும் பிள்ளையார் பட்டியின் அருகருகே கோயில் கொண்டிருப்பது வெகு சிறப்பு.   குபேர (லெக்ஷ்மி), ஞான சரஸ்வதி, சந்தோஷிமாதா ஆகிய கோயில்கள் ஒரு சீரற்ற அஃகன்னா போல் அமைந்துள்ளன.

கல்வியும் செல்வமும் இன்றியமையாதன. கல்வியும் செல்வமும் இருந்து குடும்ப ஒற்றுமை இல்லாமல் இருக்கிறது. குடும்பத்தில் நிரந்தர ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவுவது அத்யாவசியமானதுதானே.

இதற்கு முன் சில இடுகைகளில் இந்த வாஸ்து கோயிலில் இருக்கும் விநாயகர்களைப் பகிர்ந்திருப்பேன். கோயிலில் படம் எடுக்க அனுமதி இல்லையாததால் கடைகளையும் வாஸ்து மீனையும் எடுத்திருந்தேன்.

காரைக்குடியில் இருந்து பதினாலுகிலோமீட்டரில் உள்ள குன்றக்குடியில் இருந்து பிள்ளையார் பட்டி செல்லும் வழியில் இடப்புறம் பிரியும் சாலையில் சிறிது திரும்பி உள்ளே சென்றால் இக்கோயில் அமைந்திருக்கிறது.
தாமரை பீடமும், முன்னே வாஸ்து மீன்கள் நீந்தும் தொட்டியும் இருக்கிறது. மேலேறி சென்றால் குபேரன் சந்நிதி. மிக அருமையான சோலையின் நடுவே அமைந்துள்ள இக்கோயில் தரிசிக்க வேண்டிய ஒன்று. பக்கங்களில் குழந்தைகள் விளையாட பூங்காவும் உள்ளது.

செவ்வாய், 12 மே, 2020

இரணிக்கோயில் கோபுரங்களும் திருச்சுற்று மதிலில் பள்ளிகொண்டபெருமாளும் நான்முகனும்.

இரணிக்கோயில் கோபுரங்களும் திருச்சுற்று மதிலில் பள்ளிகொண்டபெருமாளும் நான்முகனும்.

இரணிக்கோயில் பற்றி முன்பே எழுதி இருக்கிறேன். அதன் வெளிப்பிரகாரமாக வந்து எடுத்த கோபுரப்படங்களை இங்கே பகிர்ந்துள்ளேன்.

மிகவும் வடிவான  சிற்பங்களோடு பொலிந்தன கோபுரங்கள். சிவபுரந்தேவியின் அருளாட்சி.
இன்னொரு கோணத்தில்.
லாங்க் ஷாட் :)
பக்கத்திலிருக்கும் பிள்ளையார் கோயில் கோபுரம்.
தெளிவாக.. லெக்ஷ்மி சரஸ்வதியுடன் சிவபுரந்தேவியும். லெக்ஷ்மி பக்கத்தில் யானையும் சரஸ்வதி பக்கத்தில் மயிலும். கரும்பும் பாசம் அங்குசமும் சுமந்த சிவபுரந்தேவி.

திருவாச்சியை ஒட்டிய இரு புறமும் சிங்கங்கள். சாமரம் வீசும் பணிப்பெண்கள்கூட என்ன கம்பீரம்.


கோபுரத்தில் ரிஷபமும் பூதகணமும். பக்கத்திலேயே ஏதோ கட்டி இருக்காங்க. சாளரமா தெரில.
தெவிட்டாத அமைப்பு.
பூதகணங்களும் ரிஷபங்களும்.
 இன்னொரு புற கோபுரங்கள்.
அதே அதே சபாபதே. :)
இன்னும் கொஞ்சம் க்ளோஸப். மஹாலெக்ஷ்மியும் நான்முகனும் சரஸ்வதியும்.
பள்ளிகொண்ட பெருமாள், பிரம்மா, லெக்ஷ்மி, நாரதர், பெரிய திருவடி. எல்லாரும் திருச்சுற்று மதிலில்
விநாயகரும் விடையேறு பாகனும்.
நான்முகன் சரஸ்வதி காயத்ரி கவரிப் பெண்கள், பாம்புப் பிடாரன், வாத்யம் இசைக்கும் பெண்.
கயிலாயத்தில் மொத்தக் குடும்பமும் தனித்தனியாவும் பேட்ச் பேட்சாவும் ப்ரஸண்ட் சார். !


டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.

1. அஷ்ட பைரவர்களும் 108 உக்கிர பைரவர்களும்.

2. துர்க்கை உள்ளே லெக்ஷ்மி வெளியே.

3. இராசிகளை ஆளும் இரணியூர் நீலமேகப் பெருமாளும் கனகவல்லித் தாயாரும். 

4. ஊருணிகள் - திருக்கோயில் புஷ்கரணிகளும் தாமரை பூத்த தடாகங்களும்.

5. இரணிக்கோயில் கோபுரங்களும் திருச்சுற்று மதிலில் பள்ளிகொண்டபெருமாளும் நான்முகனும். 

6. இரணிக்கோயில் படிச்சிற்பங்கள்.

7. இரணிக்கோயில் தூண்சிற்பத் திருமூர்த்தங்கள்.

ஞாயிறு, 10 மே, 2020

அதியமான் கோட்டை ஆதி பைரவரும் பூசணிப் பிஞ்சு தீபமும்.

அதியமான் கோட்டை ஆதி பைரவரும் பூசணிப் பிஞ்சு தீபமும்.

இந்தியாவிலேயே இரண்டு இடங்களில்தான் உன்மந்திர/உன்மத்த பைரவர் கோயில்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று காசியிலும் இன்னொன்று தர்மபுரியிலும் இருக்கின்றன. இக்கோயில் 1200 வருடப் பழமை வாய்ந்தது. மிக உக்ரம் வாய்ந்த சக்தியான கோயில். சிவன் மூர்த்தி  ( சிலை) இல்லாமல் மஹாவீரரின் சிலை மட்டும் பைரவர் மூர்த்தி ( சிலை) யுடன் இங்கே ப்ரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது விசேஷம்.

நமது காலச்சக்கரத்தின் அதிபதி காலபைரவர்தான் . நம் காலக்கணக்கை ஆரம்பித்து வைப்பவரும் முடித்து வைப்பவரும்  இவரே. . இவரிடமே எல்லா சிவன் கோயில்களிலும் ( கோயில் சாவிப் பொறுப்பை ஒப்படைத்து வணங்கும் பூசையும்  ) அர்த்தசாம பூசையும் , ( அனுமதி பெற்று காலையில் கோயிலைத் திறந்து தினசரி நடைமுறை வழிபாடுகளை மேற்கொள்ளும் பூசை ) திருவனந்தலும் நடைபெறும்.

தர்மபுரியில் உள்ள காலபைரவர் கோயில் மிகவும் சக்தி வாய்ந்தது. இது ஒன்பதாம் நூற்றாண்டில் அதியமான் மன்னனால் கட்டப்பட்டது. இங்கே இருந்துதான் போருக்குச் செல்லும்முன் அவர் தனது  வீர வாளை வைத்து வணங்கிச் செல்வாராம். அதன் பின் அவருக்கு வெற்றிக் கோட்டையாகிவிட்டது அதியமான் கோட்டை. அவரது குலதெய்வமானார் காலபைரவர்.அரசர் காலத்தில்  கோட்டையின் சாவி இவரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இன்னும் சில விசேஷங்களும் உண்டு. இங்கே ஒன்பது நவக்ரகங்களும் கோயிலின் மஹா மண்டபத்தின் மேற்கூரையில் பொறிக்கப்பட்டுள்ளன. எனவே இவற்றின் வழியாக வரும்போது நவக்கிரக தோஷங்கள் நீங்குமாம். அதே போல உன்மந்திர பைரவர் திருமேனியில் பன்னிரெண்டு ராசிகளும் 27 நட்சத்திரங்களும் அடக்கம்.

தலையில் மேஷத்தில் இருந்து பாதத்தில் மீனம் வரை ( சிரசு தலை மேல் அக்கினிப் பிழம்பு  - மேஷம், முகம் - ரிஷபம், கழுத்து - மிதுனம், மார்பு - கடகம், இரண்டு கால்களுக்கும் மேல்  - சிம்மம், வயிறு - கன்னி, ஆண்குறி - துலாம், தொடை - விருச்சிகம், முட்டி - தனுசு , முட்டியின் கீழ்ப்பகுதி - மகரம், பாதம் - கும்பம், பாத விரல் - மீனம் ) அடங்கி உள்ளதால் சம்பந்தப்பட்ட ராசிக்காரர்கள் அந்த ஸ்தானங்களை நோக்கி வணங்க தோஷம் நீங்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வெள்ளி, 8 மே, 2020

கிருஷ்ணர் தவழ்ந்த மதுராபுரி. ( ஹாலிடே நியூஸ் பத்ரிக்கையில். )

கிருஷ்ணர் தவழ்ந்த மதுராபுரி. ( ஹாலிடே நியூஸ் பத்ரிக்கையில். )

குலம் வாழும் பிள்ளை தவழும் மதுராபுரி. 


”மழலை கிருஷ்ணர் (குலம் வாழும் பிள்ளை தவழும்) தவழ்ந்த மதுராபுரி” என்ற இந்த இடுகை என்னுடைய உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும் என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)

புதன், 6 மே, 2020

இரணிக்கோயில் படிச்சிற்பங்கள்.

இரணிக்கோயில் படிச்சிற்பங்கள்.

இரணிக்கோயில் சிற்பக் கலைக்குப் புகழ்பெற்றது . இங்கே எடுத்த சில படிச் சிற்பங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். படிக் கோலம் என்பது ரொம்ப விசேஷம் என்பது போல இந்தப் படிச் சிற்பங்களும் விசேஷமா இருக்கு. விதம் விதமான பூக்களும் தாமரையும்தான் இதன் அழகை அதிகமாக்குகின்றன. கொடிகளும் இலைகளும் தத்ரூபம்.

நான் ரசித்த அழகை நீங்களும் கண்டு களியுங்கள்.

கவிழ்ந்த கருங்கல் தாமரை பூத்திருக்கும் வாயில்கள்.
பொதுவாக வெள்ளைக்கல்லில்தான் படிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இலைகளும் ஐந்து இதழ் கொண்ட பூக்களும் பூத்திருக்கின்றன. கீழே அன்னபட்சி தன் வாயில் கவ்வி இருக்கிறது இக்கொடியை.

திங்கள், 4 மே, 2020

பசு ஸ்தோத்திரமும், நட்சத்திரக் கோயில்களும், திருவோடு மரமும்.

பசு ஸ்தோத்திரமும், நட்சத்திரக் கோயில்களும், திருவோடு மரமும்.


சிற்பவேலைப்பாடு மிக்க கோயில்களில் ஒன்று மாத்தூர்க் கோயில். ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு கல்லும் கதைசொல்லும்வண்ணம் செதுக்கப்பட்டிருக்கும். இங்கே ஐநூற்றீசுவரர், பெரிய நாயகி அம்பாளோடு மகிழமரத்தடி ஆனந்த முனீஸ்வரரும் அழகுற அருள்பாலிக்கிறார்.

சனி, 2 மே, 2020

மகா கணபதி ஹோமமும் பூரணகும்ப மரியாதையும். - பிள்ளையார்பட்டி.

மகா கணபதி ஹோமமும் பூரணகும்ப மரியாதையும். - பிள்ளையார்பட்டி.

 கற்பக மூர்த்தி கற்பக மூர்த்தி கற்பக மூர்த்தி சரணம். பிள்ளையார்பட்டி பற்றிக் கேள்விப்பட்டிராதவர் இருக்கமுடியாது. முழுமுதற் கடவுள் பிள்ளையார் .சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பு பெருபரணன் என்ற பாண்டிய மன்னனால் அமைக்கப்பட்ட குடைவரைக்கோயில் இது.

திருவீசபுரம்/திருவீசர்நகர் என்று அழைக்கப்படும் இத்தலத்தில் விநாயகர் கற்பக விநாயகர் என்றும் தேசி விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார். மிகப் பிரம்மாண்டமான கண்கவர் விநாயகரை வலம் வருவதானால் அவர்திரு உரு அமைந்துள்ள மலையோடு சேர்த்துப் பெரும்பிரகாரம்தான் வரவேண்டும். மருதீசர் என்னும் அர்ஜுனவனேஸ்வரர் & வாடாமலர் மலர்மங்கையும் அருள்பாலிக்கிறார்கள்.

இங்கே ஓவிய மண்டபத்தில் இருக்கும் விநாயகரின் கண்கள் எங்கே சென்றாலும் நம்மைப் பார்ப்பது போலே அமைந்திருக்கும். கிழக்கு வடக்கு என்று இரு கோபுரங்கள் உண்டு. விநாயகர் சதுர்த்தி விசேஷம். ஏன் ஆங்கிலப் புத்தாண்டு  அன்று உலகமே திரண்டு இவரிடம் ஆசி வேண்டி நிற்கும்.

பிள்ளையார்பட்டியில் பிரகாரத்தில் ஒரு குட்டிக் குன்று இருக்கும். சின்னப் பிள்ளையில் அதில் ஓடி ஏறி விளையாடுவது எங்கள் பொழுது போக்கு :)

சிதம்பரத்தில் நடராஜரின்  ”குஞ்சிதபாதம்” என்ற குட்டி மாலை கிடைப்பது விசேஷம். அதேபோல் பிள்ளையார்பட்டிக்குச் சென்றமுறை சென்றிருந்தபோது எங்கள் மகனுக்கு ’தோமாலை’  என்ற விநாயரின் மாலை ( ஸ்பெஷல் மாலை ) கிடைத்தது. விநாயகர் திருவுருவம் மலையோடு செதுக்கப்பட்ட ஒன்று என்பதால் மாலையைக் கழுத்து வழி அணிவிக்க முடியாது. இரு தோளிலும் பகுதி பகுதியாக ஆனால் முழுமையான மாலையாக அணிவிப்பார்கள். அதைப் பார்க்கவே அழகாக இருக்கும் :). அந்த மாலையின் ஒரு தோள்பகுதி மாலைதான் தோமாலை. அது கிடைத்தது குறித்து மகிழ்ச்சி அடைந்தோம் :)
இங்கே பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் நகரத்தார் ட்ரஸ்ட் என்று ஒன்று உள்ளது. தினமும் இங்கே காலை மதியம் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கும் கணபதி ஹோமம் செய்பவர்களுக்கும் , பிறந்தநாள் திருமணநாள் கொண்டாடுபவர்களுக்கும் உணவு வழங்கப்படுகிறது.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.