நாகவல்லி நாககன்னியுடன் மங்கள ராகு.
கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருநாகேஸ்வரம் சிறந்த ராகு ஸ்தலம் ஆகும். இது நவக்ரஹக் கோயில்களில் ஒன்று. ராகுபகவான் மட்டுமில்லை, இவரோடு ஆதிசேஷன், கார்கோடகன், தக்ஷன், அநந்தன் ஆகிய பாம்புகள் சிவனை வழிபட்ட ஸ்பெஷல் தலம் இது.
இங்கே வரும் 27 ஆம் தேதி ராகு பெயர்ச்சிக்காக லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
காவிரிக்கரையில் அமைந்துள்ள இக்கோயிலில் ஸ்ரீ நாகநாதஸ்வாமி கோயில் கொண்டுள்ளார்.. திருச்சுற்றில் ராகுபகவான் நாகவல்லி, நாககன்னியுடன் எழுந்தருளி உள்ளார்.
ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கே பாலாபிஷேகம் செய்து வணங்கி வருகிறார்கள். ராகு தோஷம் என்றால் பேரையூர் கூடப்போகக்கூடாதாம். இவர்தான் சுப்ரீம் பவர் உள்ளவராம். இவரைத்தான் வணங்கணுமாம்.
தினப்படியுமே ராகுகாலத்தில் பூஜையும் பாலாபிஷேகமும் நடைபெறுகிறது. இவர் மேல் பொழியும் பால் நீல நிறமாக மாறிவிடுவதாகச் சொல்கிறார்கள்.
500 ரூ, 250 ரூ டிக்கெட்டுகள் உண்டு.
ராகு சன்னதியின் எதிர்த்தாற்போல் உள்ள மாபெரும் ஹாலில் முதலில் 500 ரூ டிக்கெட்காரர்களும் அதன் பின் 250ரூ டிக்கெட்காரர்களும் அமர்ந்துகொள்ளலாம்.
தோஷம் ஏதுமில்லாமல் சைடாக பிரகாரத்தில் வலம் வரும் பக்தர்களும் எட்டி தரிசனம் செய்து கொள்ளலாம்.
அபிஷேகம் ஆராதனை முடிந்ததும் காளாஞ்சியும் மாலையும் தருகிறார்கள். வெளியே காலையில் வாங்கிய ஒரு மாலை & அர்ச்சனைப் பை 250 ரூ. இதையும் நிர்வாகமே கொடுத்து நியாயமான காசை வாங்கிக்கொள்ளலாம்.
500 ரூ டிக்கெட்டுக்கே இம்புட்டுக்கூட்டமா என்று இருந்தது.
இந்த ராகு கேதுவுக்கெல்லாம் உக்கார இடமேயில்லையா. . இப்பல்லாம் எல்லார் ஜாதகத்திலும் உக்கார்ந்திருக்காப்புல இருக்கு , எல்லாப் புள்ளக ஜாதகத்திலும் உக்கார்ந்து கல்யாணத்தைக் கெடுக்குது என்று ஒருவர் சொன்னதும் பக்கத்திலிருந்தவர் சொன்னார்., எல்லார் ஜாதகத்திலும் ஏதோ ஒரு கட்டத்தில் ராகு கேது இருக்கத்தான் இருக்கும். அவர்கள் உட்கார்ந்திருக்கும் ஸ்தானம் பொறுத்து வாழ்வில் ஏற்படும் தீமைகளுக்குப் பரிகாரம் செய்யவே இவற்றை ஜோசியர்கள் பரிந்துரைக்கிறார்கள் என்றார்.
கௌதம மகரிஷி, பராசரர், பகீரதன் ஆகியோரும் வழிபட்டிருக்காங்க. கம்பீர ராஜகோபுரம். ஏழு இராஜகோபுரங்களை உடைய ஸ்தலம். பூலோகத்தில் சிறந்தது என்று சிவபெருமானே சொன்ன கோயிலாம் இது.