எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 15 ஏப்ரல், 2020

திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.

திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.

”தொல்லை இரும் பிறவிச் சூழும் தளை நீக்கி” என்று இருகரம் சிரம்மேல் குவித்துச் சொல்லும்போதே இந்த உடலை விட்டுப் பறந்துவிட ஆசை வருகிறதல்லவா. அல்லல்படுத்தும் தொல்லைகளிலிருந்து எளிதாக யாருக்கும் சிரமமில்லாமல் விடுபட்டு  எல்லையில்லாத இறைவன் அடியைப் பற்றிடத் தோன்றும்.

சிதம்பரத்தில் இருந்தபோது நடராஜர் கோவிலில் தினப் பிரதோஷத்துக்கு என் தோழி சங்கரி மாமியுடன் சென்றதுண்டு. ஆனால் நெய்வேலியில் இருந்தபோதுதான் அங்கே இருந்த நடராஜர் கோவிலில் மாதப் பிரதோஷத்தின்போது சுவாமி உலாவில் திருவாசகம் சொல்லப்படுவதைக் கவனித்தேன். தினம் வீட்டில் சொல்லிப் பழகிக் கொண்டேன். அதில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் உணர்ந்து படித்தபோது மெய் சிலிர்த்தது.

இளையராஜா அவர்கள் தேசனே தேனார் அமுதே சிவபுரனே என்பதில் ஆரம்பித்து சிம்பொனி அமைத்திருப்பதைக் கேட்டதாக ஞாபகம்.

காரைக்குடியில் சென்ற சில வருடங்களாக திருநாவுக்கரசர் இறைபணி மன்றம் செயல்பட்டு வருகிறது.  சிவனடியார்கள் ஒவ்வொரு ஆலயத்திலும் வேண்டி விரும்பிக் கேட்பவர் இல்லத்திலும் எழுந்தருளி திருவாசகம் முற்றோதல் செய்து வருகிறார்கள்.
ஒரு நாள் முழுதும் ( காலை 9 - மாலை 5 ) வரை நடைபெறும் இந்த வழிபாட்டில் ஓரிரு முறை கலந்து கொண்டதுண்டு.என் தாய் தந்தை உட்பட அறுபதுபேர் கலந்து கொள்கிறார்கள். இவர்கள் விடாமல் கிட்டத்தட்ட மூன்று நான்கு ஆண்டுகளாக அநேக இடங்களில் திருவாசகம் முற்றோதல் செய்து வருகிறார்கள்.
சிவபெருமான் , திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர், விநாயகர், முருகன் ஆகிய கடவுட்திருவுருவங்களை வைத்து பூக்களால் அலங்கரித்திருந்தார்கள்.
ஒவ்வொருவருக்கும் திருவாசகம் அளிக்கப்பட்டது. ஒவ்வொரு பாடல் முடிந்ததும் ஒவ்வொரு நைவேத்தியம் செய்து வந்திருந்த தம்பதியர் தீப ஆரத்தி செய்து வணங்கினார்கள். சிலர் தங்கள் குடும்பத்தினருக்குத் திருமணம், வேலைவாய்ப்பு, குழந்தைப் பேறு வேண்டிக் கொண்டு ஊஞ்சல் ஆட்டி தீபம் காட்டினார்கள்.


சில முக்கியமான பாடல்களைப் படம்பிடித்துக் கொண்டேன்.

அனைவருக்கும் அவ்வப்போது வெந்நீரும் பனங்கல்கண்டுப் பாலும் வழங்கப்பட்டது. மதிய உணவிற்கு முன் மகேஸ்வர பூஜை, வேண்டுதல், ஆசீர்வாதம் என்ற ஒன்று படிக்கப்பட்டது.

அநாதி முதற்பெருங்கடலாகிய சிவபெருமான் எல்லா உயிர்களும் வழிபட்டு உய்யும் பொருட்டுத் திருமேனி தாங்கி எழுந்தருளியிருக்கும் திருக்கோயில்கள் அனைத்திலும் நித்திய நைமித்திய வழிபாடுகளெல்லாம் வேத சிவாகமப்படி சிறப்பாக நடந்துவரும் பொருட்டு அருள்புரிவீராக.

-- அரகர அரகர.

விபூதி உருத்திராக்க தாரணம், பஞ்சாட்சர ஜபம், வேத சிவாகமப் படனம்,  தேவாரத் திருமுறைப் பாராயணம், ஆன்மார்த்த சிவபூஜை ஆகிய சிவ புண்ணியச் செயல்கள் நாடெங்கும் பரவி ஓங்கும் பொருட்டு  அருள்புரிவீராக.

-- அரகர அரகர.

மாதம் மும்மழை பெய்து, தான்யம் முதலிய எல்லா வளங்களும் செழித்தோங்கும் பொருட்டு அருள்புரிவீராக.

-- அரகர அரகர.

இந்த தானத்தில் எப்போதும் அடியார்களுக்கு மாகேசுவர பூஜை நடந்துவரும் பொருட்டு அருள்புரிவீராக.

-- அரகர அரகர.

சிவ புண்ணியச் செல்வர் ------------------------ அவர்களும் அவருடைய குடும்பத்தார் உறவினர், நண்பர்கள் ஆகியோர்களும்  நோயற்ற வாழ்வும், சகல செல்வங்களும் தேக ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும், குருலிங்க சங்கம பக்தியும், சிவஞானமும் மென்மேலும் பெற்று வாழ அருள்புரிவீராக.

-- அரகர அரகர.

அடியார்கள் அனைவரும் திருவமுது செய்தருள்க.

--- என்று சொல்லி அமுது படைத்து பந்தியில் அனைவரையும் அமரச் செய்து குடும்பத்தின் அங்கத்தினர்கள் அனைவரும் விழுந்து வணங்குவார்கள்.

அவர்களை ஆசீர்வதித்து சிவனடியார்கள் அமுதுண்ணத் துவங்குவார்கள்.


எனக்கு மிகப் பிடித்த பாடல்கள்.

”பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கிஉள்ஒளி பெருக்கி
உலப்புஇலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த
செல்வமே! சிவபெரு மானே!
யான்உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்;
எங்குஎழுந்து அருளுவது இனியே ?


“ உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;
கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்
குற்றாலத்து அமர்ந்துஉறையும் கூத்தா! உன் குரைகழற்கே
கற்றாவின் மனம்போலக் கசிந்துஉருக வேண்டுவனே. “

திருவெண்பா. திருப்பெருந்துறையில் அருளியது.



வெய்ய வினை இரண்டும் வெந்து அகல, மெய் உருகி,
பொய்யும் பொடி ஆகாது; என் செய்கேன்? செய்ய
திரு ஆர் பெருந்துறையான் தேன் உந்து செம் தீ
மருவாது இருந்தேன் மனத்து.
உரை




ஆர்க்கோ? அரற்றுகோ? ஆடுகோ? பாடுகோ?
பார்க்கோ? பரம்பரனே, என் செய்கேன்? தீர்ப்பு அரிய
ஆனந்த மால் ஏற்றும் அத்தன், `பெருந்துறையான்
தான்' என்பார் ஆர் ஒருவர் தாழ்ந்து?
உரை




செய்த பிழை அறியேன்; சேவடியே, கை தொழுதே,
உய்யும் வகையின் உயிர்ப்பு அறியேன் வையத்து
இருந்து, உறையுள் வேல் மடுத்து, என் சிந்தனைக்கே கோத்தான்
பெருந்துறையில் மேய பிரான்.
உரை




முன்னை வினை இரண்டும் வேர் அறுத்து, முன் நின்றான்
பின்னைப் பிறப்பு அறுக்கும் பேராளன்; தென்னன்;
பெருந்துறையில் மேய பெரும் கருணையாளன்;
வரும் துயரம் தீர்க்கும் மருந்து.
உரை




அறையோ, அறிவார்க்கு? அனைத்து உலகும் ஈன்ற
மறையோனும், மாலும், மால் கொள்ளும் இறையோன்;
பெருந்துறையுள் மேய பெருமான்; பிரியாது
இருந்து உறையும், என் நெஞ்சத்து இன்று.
உரை




பித்து என்னை ஏற்றும்; பிறப்பு அறுக்கும்; பேச்சு அரிது ஆம்;
மத்தமே ஆக்கும், வந்து, என் மனத்தை; அத்தன்,
பெருந்துறையான், ஆட்கொண்டு பேர் அருளால் நோக்கும்
மருந்து, இறவாப் பேரின்பம், வந்து.
உரை




வாரா வழி அருளி வந்து, எனக்கு மாறு இன்றி,
ஆரா அமுதாய் அமைந்தன்றே சீர் ஆர்
திருத்தன், பெருந்துறையான், என் சிந்தை மேய
ஒருத்தன், பெருக்கும் ஒளி.
உரை




யாவர்க்கும் மேல் ஆம் அளவு இலாச் சீர் உடையான்,
யாவர்க்கும் கீழ் ஆம் அடியேனை, யாவரும்
பெற்று அறியா இன்பத்துள் வைத்தாய்க்கு, என் எம்பெருமான்!
மற்று அறியேன் செய்யும் வகை.
உரை




மூவரும், முப்பத்து மூவரும், மற்று ஒழிந்த
தேவரும், காணாச் சிவபெருமான் மா ஏறி,
வையகத்தே வந்திழிந்த வார் கழல்கள் வந்திக்க,
மெய்யகத்தே இன்பம் மிகும்.
உரை




இருந்து என்னை ஆண்டான் இணை அடியே சிந்தித்து
இருந்து, இரந்துகொள், நெஞ்சே! எல்லாம் தரும் காண்
பெருந்துறையில் மேய பெரும் கருணையாளன்,
மருந்து உருவாய், என் மனத்தே, வந்து.
உரை




இன்பம் பெருக்கி, இருள் அகற்றி, எஞ்ஞான்றும்
துன்பம் தொடர்வு அறுத்து, சோதி ஆய், அன்பு அமைத்து,
சீர் ஆர் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே
ஊர் ஆகக் கொண்டான், உவந்து.
இந்த ஆனந்த மாலையைக் கட்டாயம் குடும்பத்தினர்தான் பாடுவார்கள்.

கேட்கக் கேட்க ஆனந்தமான சூழ்நிலை எங்கும் பொங்கிப் பரவி மனதை நெகிழ்த்தும் பாடல் இது.

 ஆனந்த மாலை


 

மின் நேர் அனைய பூம் கழல்கள் அடைந்தார் கடந்தார், வியன் உலகம்;
பொன் நேர் அனைய மலர் கொண்டு போற்றா நின்றார், அமரர் எல்லாம்;
கல் நேர் அனைய மனக் கடையாய், கழிப்புண்டு, அவலக் கடல் வீழ்ந்த
என் நேர் அனையேன், இனி, உன்னைக் கூடும்வண்ணம் இயம்பாயே.
உரை




என்னால் அறியாப் பதம் தந்தாய்; யான் அது அறியாதே கெட்டேன்;
உன்னால் ஒன்றும் குறைவு இல்லை; உடையாய், அடிமைக்கு யார்? என்பேன்:
பல் நாள் உன்னைப் பணிந்து ஏத்தும் பழைய அடியரொடும் கூடாது,
என் நாயகமே! பிற்பட்டு, இங்கு, இருந்தேன் நோய்க்கு விருந்தாயே.
உரை




சீலம் இன்றி, நோன்பு இன்றி, செறிவே இன்றி, அறிவு இன்றி,
தோலின் பாவைக் கூத்தாட்டு ஆய், சுழன்று, விழுந்து, கிடப்பேனை
மாலும் காட்டி, வழி காட்டி, வாரா உலக நெறி ஏற,
கோலம் காட்டி, ஆண்டானை, கொடியேன் என்றோ கூடுவதே?
உரை




கெடுவேன்; கெடுமா கெடுகின்றேன்; கேடு இலாதாய், பழி கொண்டாய்;
படுவேன், படுவது எல்லாம், நான் பட்டால், பின்னைப் பயன் என்னே?
கொடு மா நரகத்து அழுந்தாமே காத்து ஆட்கொள்ளும் குருமணியே,
நடு ஆய் நில்லாது ஒழிந்தக்கால், நன்றோ, எங்கள் நாயகமே?
உரை




தாய் ஆய் முலையைத் தருவானே, தாராது ஒழிந்தால், சவலையாய்
நாயேன் கழிந்து போவேனோ? நம்பி, இனித்தான் நல்குதியே;
தாயே என்று உன் தாள் அடைந்தேன்; தயா, நீ, என்பால் இல்லையே?
நாயேன் அடிமை உடன் ஆக ஆண்டாய்; நான் தான் வேண்டாவோ?
உரை




கோவே, அருள வேண்டாவோ? கொடியேன் கெடவே அமையுமே?
`ஆ! ஆ!' என்னாவிடில், என்னை `அஞ்சேல்' என்பார் ஆரோ தன்?
சாவார் எல்லாம் என் அளவோ? `தக்க ஆறு அன்று' என்னாரோ?
தேவே! தில்லை நடம் ஆடீ! திகைத்தேன்; இனித்தான் தேற்றாயே!
உரை




நரியைக் குதிரைப் பரி ஆக்கி, ஞாலம் எல்லாம் நிகழ்வித்து,
பெரிய தென்னன் மதுரை எல்லாம் பிச்சு அது ஏற்றும் பெருந்துறையாய்!
அரிய பொருளே! அவிநாசி அப்பா! பாண்டி வெள்ளமே!
தெரிய அரிய பரஞ்சோதீ! செய்வது ஒன்றும் அறியேனே!


வந்திருந்த சிவனடியவர்கள்.
திருவாசகத்தில் தோய்ந்து..
ஒளிவெள்ளம்.
மாலை நேரம்.

அந்த இல்லத்தினர் அமைத்திருந்த 108 வெள்ளி சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.
திருவாசகம்

திருசிற்றம்பலம்

தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை
மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்


1. சிவபுராணம்
(திருப்பெருந்துறையில் அருளியது தற்சிறப்புப் பாயிரம்)

திருச்சிற்றம்பலம்

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க 5

வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15


ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய்,
எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் 25

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35

வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55

விலங்கு மனத்தால், விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனார் அமுதே சிவபுரானே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் 75

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் 80

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று 85

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95

திருச்சிற்றம்பலம்


-- மாலையில் திருவாசகம் முற்றோதல் இனிதாய் நிறைவுற்றது. வந்திருந்தவர்கள் அளவளாவி மாலை டிபனும் காபியும் அருந்தினர்.  சிவனருள் பெற்று சிவனருள் தந்து வீட்டார் கொடுத்த அன்புப் பொருட்களுடன் சென்றனர். 

ஓம் நமசிவாய !

ஓம் சிவோகம் !!!!!!!!!

1 கருத்து:

  1. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University16 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 6:50
    அண்மையில்தான் சுந்தரர் தேவாரம் நிறைவு செய்துவிட்டு திருவாசகம் படிக்க ஆரம்பித்துள்ளேன். முற்றோதலைப் பகிர்ந்து பிறரும் திருவாசகத்தின் பெருமையை உணரவைத்துள்ளீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு

    திண்டுக்கல் தனபாலன்16 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 8:29
    ஓம் நமசிவாய...

    பதிலளிநீக்கு

    விஸ்வநாத்16 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 1:48
    அருமை, நன்றி, மேடம்.

    பதிலளிநீக்கு

    கரந்தை ஜெயக்குமார்16 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 6:58
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு

    G.M Balasubramaniam17 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 3:43
    வாழ்த்துகள். பதிவர் ஒற்றுமை ஓங்குக

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்18 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:35
    திருவாசகத்து உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்று சொல்வார்களே அது நினைவுக்கு வந்தது.

    படங்களுடன் பாடல்களும் பகிர்ந்தது நன்று. நன்றி.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan21 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 12:59
    மிக அருமை நன்றி ஜம்பு சார்

    நன்றி டிடி சகோ

    நன்றி விசு சார்

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி பாலா சார்

    நன்றி வெங்கட் சகோ

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan21 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 12:59
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

    pungampadi temple18 மார்ச், 2019 ’அன்று’ முற்பகல் 10:21
    இறையன்புடையீர் வணக்கம்,
    கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் புங்கம்பாடி கிராமம். குடகனாற்றின் கீழ் கரையில் அமர்ந்துள்ள கம்பீரமான கோட்டை சுவருடன் காணப்படும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம். கிபி. 1702 ஆம் வருடம் கடைசியாக கும்பாபிஷேகம் செய்யப்பட்டது என்று அங்குள்ள கல்வேட்டின் மூலம் அறியப்படுகிறது.
    1000 வருடம் பழமையான சிவாலயம் கேட்பாரற்று சிதைந்து சுற்று சுவர்கள் இடிந்து,பாழடைந்து கிடக்கிறது. பூசைகளும் நடைபெறுவதும் இல்லை.
    தற்பொழுது கிராமத்தினரால் திருப்பணி செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான முயற்சி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
    பிரதோஷம், பவுர்ணமி, தேய்பிறை அஷ்டமி மற்றும் முக்கிய நாட்களில் பூஜை நடைபெறுகிறது.
    ஆலயத்தின் அமைப்பு.:
    இறைவன்:சொக்கநாதர்
    இறைவி: மீனாட்சி அம்மன்
    பிறசன்னதிகள்: தட்சிணாமூர்த்தி , லிங்கோத்பவர், பிரம்மா , துர்க்கை, சண்டிகேஸ்வரர் , பைரவர்
    தலமரம்: வில்வம்
    கன்னிமூலை கணபதி மற்றும் சுப்பிரமணியர் சன்னதிகளில் உற்சவர் இல்லை.
    கோவிலின் மேற்குப்பகுதி சுவர் 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஆற்று வெள்ளத்தால் இடிந்துவிட்டது.
    திருப்பணிக்கு தங்களால் இயன்ற உதவியை செய்ய வரவேற்கிறோம்.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan25 மார்ச், 2019 ’அன்று’ பிற்பகல் 12:41
    மிக்க நன்றி இதை முகநூலிலும் பகிர்ந்துள்ளேன்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.