எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 19 ஜூன், 2019

சித்திரா பௌர்ணமி ரெசிப்பீஸ் & கோலங்கள்.

சித்திரா பௌர்ணமி ரெசிப்பீஸ் & கோலங்கள்.

சித்திரா பௌர்ணமி ஸ்பெஷல் ரெசிப்பீஸ்:-

1.கடலை எள்ளு சிக்கி
2.கோதுமைச் சீயம்
3.சிவப்பரிசிக் கொழுக்கட்டை
4.துவரம்பருப்புத் துவையல்.
5.வெள்ளை ரவை மிளகுப் பொங்கல்.
6.மல்லாட்டைச் சட்னி.
7.மைதா முள்ளு முறுக்கு.
8.மாவற்றல் குழம்பு
9.சர்க்கரை வள்ளிக்கிழங்குப் பாயாசம்.

1.கடலை எள்ளு சிக்கி :-

தேவையானவை :- வேர்க்கடலை -  1 கப், வெள்ளை எள் – அரை கப், நெய் – ஒரு டேபிள் ஸ்பூன், சர்க்கரை – ஒன்றரை கப், ஏலப் பொடி – கால் டீஸ்பூன்

செய்முறை:- வேர்க்கடலையை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும். ஒரு தட்டில் நெய்யைத் தடவி வைக்கவும். ஒரு பானில் மிச்ச நெய்யைக் காயவைத்து சர்க்கரையைப் போட்டு உருகவிடவும். லேசாக உருகி வரும்போது வேர்க்கடலை, எள்ளைப் போட்டு ஏலப் பொடியையும் போட்டு நன்கு கிளறி லேசாக இளக்கமாக இருக்கும்போதே நெய் தடவிய தட்டில் கொட்டி சப்பாத்திக் கட்டையால் சமப்படுத்தவும். முழுதாய்ப் பெரிய வட்டமாகவோ அல்லது சதுரத் துண்டுகள் போட்டு நிவேதிக்கவும்.

2.கோதுமைச் சீயம்:-

தேவையானவை :- கோதுமை மாவு – 1 கப், தோசை மாவு புளிப்பில்லாதது – 1 கப், சின்ன வெங்காயம் – 15 உரித்துப் பொடியாக அரியவும். பச்சைமிளகாய் – 2 பொடியாக அரியவும். தேங்காய் – அரை மூடி , துருவவும்.. உப்பு – அரை டீஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு, கொத்துமல்லித்தழை – ஒரு கைப்பிடி, காரட் – சின்னம் – 1 துருவவும். எண்ணெய் – பொரிக்கத்தேவையான அளவு.

செய்முறை :- தோசை மாவில் கோதுமை மாவைப்போட்டு உப்புப் போடவும். இரண்டு டீஸ்பூன் எண்ணெயில் பொடியாக அரிந்த பச்சை மிளகாய், பெரிய வெங்காயம், துருவிய தேங்காய், காரட், கருவேப்பிலை, கொத்துமல்லித்தழை போட்டு லேசாக வதக்கி மாவில் போட்டு நன்கு பிசையவும். சிறிய போண்டா அளவுக்கு மாவை எடுத்து காயும் எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து நிவேதிக்கவும்.


3.சிவப்பரிசிக் கொழுக்கட்டை:-

தேவையானவை :-சிவப்பரிசி – 2 கப், சீரகம் – அரை டீஸ்பூன், தேங்காய்த்துருவல் – ஒரு கப், பெரிய வெங்காயம் – 1 பொடியாக அரியவும். கருவேப்பிலை – 2 இணுக்கு. எண்ணெய் – 2 டீஸ்பூன். வெந்நீர் – ஒன்றேகால் கப். உப்பு – அரை டீஸ்பூன்.

செய்முறை :- சிவப்பரிசியை கழுவிக் காயவைத்து மாவாக அரைத்து வைக்கவும். இந்த மாவில் இரு கப் எடுத்து அதில் சீரகத்தைக் கசக்கிப் போடவும். பொடியாக அரிந்த வெங்காயம், கருவேப்பிலை போட்டு உப்பு எண்ணெய் சேர்த்து தேங்காய்த்துருவலையும் போட்டு நன்கு கலக்கவும். கொதிக்கும் வெந்நீரை ஊற்றி நன்கு இறுக்கப் பிசைந்து பிடி கொழுக்கட்டைபோலப் பிடித்து ஆவியில் வேகவைத்து நிவேதிக்கவும். 


4.துவரம்பருப்புத் துவையல்.:-

தேவையானவை :- துவரம்பருப்பு – 1 கப், தேங்காய் – கால் மூடி, வரமிளகாய் – 2, உப்பு – கால் டீஸ்பூன், பூண்டு – 2 பல்.

செய்முறை :-துவரம் பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுக்கவும். மிளகாயையும் அதில் போட்டு வறுத்து இறக்கவும். மிக்ஸியில் வரமிளகாய், துவரம் பருப்பைப் பொடி செய்துகொண்டு அதில் தேங்காய்த்துருவல் உப்பு போட்டு தேவையான நீர் சேர்த்து கொரகொரப்பாக் அரைக்கவும். 2 பல் பூண்டை உரித்துப் போட்டு கடைசியாக இரண்டு சுற்றுச் சுற்றி இறக்கவும்.


5.வெள்ளை ரவை மிளகுப் பொங்கல்.:-

தேவையானவை :- வெள்ளை ரவை – 2 கப், பாசிப்பருப்பு – 1 கைப்பிடி, மிளகு – 10, சீரகம் – அரை டீஸ்பூன். உளுந்து – அரை டீஸ்பூன் ,நெய் – 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி – 1 இஞ்ச் துண்டு, கருவேப்பிலை – 1 இணுக்கு, முந்திரிப் பருப்பு – 10.

செய்முறை :- வெள்ளை ரவையை நன்கு வறுத்து வைக்கவும். மிளகை ஒன்றிரண்டாகப் பொடித்து வைக்கவும். பாசிப்பருப்பை மசிய வேகவைத்து வைக்கவும். ஐந்து கப் தண்ணீரை தனியாக ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைக்கவும். ஒரு பானில் நெய்யை ஊற்றி உளுந்து சீரகம், முந்திரிப் பருப்பு தாளித்து கருவேப்பிலை போடவும். பொரிந்ததும் மிளகையும் வெள்ளை ரவையையும் போட்டுப் புரட்டி விட்டு ஐந்து கப் கொதிக்கும் நீரை ஊற்றவும். நன்கு கிளறி மூடி போட்டு வேகவைத்து இறக்கும்போது மசித்த பாசிப்பருப்பைச் சேர்த்து நன்கு கலக்கி மிச்ச நெய்யை விட்டு நிவேதிக்கவும். 

6.மல்லாட்டைச் சட்னி.:-

தேவையானவை :- வறுத்த நிலக்கடலை – 1 கப், வரமிளகாய் – 3, பெரிய வெங்காயம் – 1, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன். பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை.

செய்முறை :- ஒரு பானில் வறுத்த நிலக்கடலையைத் திரும்பப் போட்டு லேசாக வறுத்து தோலை எடுத்து சுத்தம் செய்து வைக்கவும். வரமிளகாயை வெறும் வாணலியில் லேசாக வறுத்து வைக்கவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி ஒரு டீஸ்பூன் எண்ணெயில் மென்மையாக வதக்கி வைக்கவும். நிலக்கடலை, வரமிளகாய், வெங்காயம் சேர்த்து உப்பு போட்டு மிக்ஸியில் தேவையான தண்ணீர் ஊற்றி அரைத்து எடுக்கவும். இதில் கடுகு உளுந்து பெருங்காயத் தூளை மிச்ச எண்ணெயில் தாளித்துக் கொட்டி உபயோகிக்கவும்.


7.மைதா முள்ளு முறுக்கு.:-

தேவையானவை :- மைதா – 2 கப், வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், வெள்ளை எள் – ஒரு டீஸ்பூன். எண்ணெய் – பொரிக்கத்தேவையான அளவு.

செய்முறை :- மைதாவை இட்லிப் பாத்திரத்தில் துணி போட்டு ஆவியில் வேகவைத்து எடுக்கவும். இதில் உப்பு , லேசாக கசக்கிய சீரகம், வெள்ளை எள், வெண்ணெய் போட்டு நன்கு கலக்கவும். காய்ந்த எண்ணெயைச் சிறிது ஊற்றி தேவையான தண்ணீர் ஊற்றி இறுக்கமாகக் கட்டிகளில்லாமல் பிசையவும். எண்ணெயைக் காயவைத்து மகிழம்பூ அச்சில் போட்டு முறுக்காகப் பிழிந்து வேகவைத்து எடுத்து நிவேதிக்கவும். 

8.மாவற்றல் குழம்பு :-

தேவையானவை :-மாவற்றல் – 20., வேகவைத்த துவரம்பருப்பு – 1 கப்,சின்ன வெங்காயம் – 6, தக்காளி – 1, புளி – சிறு நெல்லி அளவு, உப்பு – அரை டீஸ்பூன், சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், மஞ்சள் பொடி – கால் டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், பெருங்காயப் பொடி – ஒரு சிட்டிகை, கருவேப்பிலை – 1 இணுக்கு.

செய்முறை :- மாவற்றலை வெந்த துவரம் பருப்புடன் குக்கரில் போடவும். இதில் சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி இரு விசில் வரும்வரை வைக்கவும். வெந்ததும் லேசாக மசிக்கவும். புளியை உப்புடன் சேர்த்துக் கரைத்து இரண்டு கப் சாறு எடுக்கவும். இதில் சாம்பார் பொடியைப் போட்டு வைக்கவும். குக்கரில் இந்தக் கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.  எண்ணெயில் கடுகு, உளுந்து, சீரகம், கருவேப்பிலை பெருங்காயப் பொடி தாளித்துக் கொதிக்கும் குழம்பில் கொட்டி உபயோகிக்கவும்.


9..சர்க்கரை வள்ளிக்கிழங்குப் பாயாசம் :-

தேவையானவை :- சர்க்கரை வள்ளிக் கிழங்கு – கால் கிலோ, பச்சரிசி – 2 டீஸ்பூன், பாசிப்பருப்பு – 2 டீஸ்பூன், வெல்லம் – இரண்டு அச்சு, தேங்காய் – கால் மூடி, நெய் – 2 டீஸ்பூன், ஏலப்பொடி – 1 சிட்டிகை, முந்திரி , கிஸ்மிஸ் தலா  - 10

செய்முறை :- சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேகவைத்துத் தோலுரித்து மசித்து வைக்கவும். பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் லேசாக வறுத்துப் பொடிக்கவும். இதை சிறிது நீரில் கரைத்துக் கொதிக்கவிடவும். இதில் இன்னும் சிறிது நீர் சேர்த்து மசித்த கிழங்கைப்போட்டுக் கொதிக்கவிடவும். கொதிக்கும்போது வெல்லத்தைப் பொடி செய்து சேர்க்கவும். தேங்காயை நைஸாக அரைத்து வைக்கவும். பாயாசத்தை இறக்கி வைத்து வெதுவெதுப்பாக இருக்கும்போது அரைத்த தேங்காயைக் கலக்கவும். நெய்யில் முந்திரி கிஸ்மிஸைப் பொரித்து ஏலப்பொடி தூவி பாயசத்தில் போட்டு நிவேதிக்கவும். 

டிஸ்கி - இந்த ரெசிப்பீஸ் 22. 4. 2016 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.  


ிஸ்கி 2. :- பங்குனி உத்ிர ஸ்பல் ரெசிப்பீஸ் & கோலங்கைப் பாராட்டிய ெல்வூர் ஆர். விநாயாமன் அவர்கட்கு நன்றி. 

1 கருத்து:

  1. Muruganandan M.K.29 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 12:48
    சுவைத்து உண்டேன்
    உங்கள் ரெசிப்பிகளை

    பதிலளிநீக்கு

    Yarlpavanan29 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 1:18
    சிறந்த வழிகாட்டல் பதிவு

    தங்கள் பதிவுகளை இணைத்து மின்நூல் ஆக்க உதவுங்கள்
    http://tebooks.friendhood.net/t1-topic

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan4 மே, 2016 ’அன்று’ பிற்பகல் 10:06
    நன்றி முருகானந்தன் சார்

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan4 மே, 2016 ’அன்று’ பிற்பகல் 10:06
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.