எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

உயிர்கொடுத்த உஜ்ஜயினி மாகாளி. - சாமுண்டி & வரசித்தி மாதா

உயிர்கொடுத்த உஜ்ஜயினி மாகாளி. - சாமுண்டி & வரசித்தி மாதா

ஜோதிர்லிங்கஸ்தலங்களில் ஒன்று உஜ்ஜயின். இங்கே மாகாகாளேஸ்வரை தரிசிக்கச் சென்றபோது மகா காலபைரவரையும் மாகாளியையும் தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது. பிறப்பறுக்கும் ஏழு ஸ்தலங்களில் உஜ்ஜனியினியும் ஒன்று. இந்தூரிலிருந்து காரில் சென்றோம்.

சக்தி பீடம் என்றும் சொல்லப்படக்கூடிய இத்தலத்தில் எல்லாக் கோயில்களுமே உக்கிரம் தாங்கியவைதான். அஸ்தியால் அபிஷேகம் நடத்தப்படும் ஜ்யோதிர்லிங்கம், சாராயம் படைக்கப்படும் கால பைரவர் , சிரசைக் கொய்து சமர்ப்பித்தும் உயிர்ப்பித்த காளி என்று எங்கு நோக்கினும் உக்ர பக்தியை விளைக்கும் சாமிகள் . இந்த மாகாளியை வரசித்தி மாதா என்றும் சொல்கிறார்கள். ஸ்கந்த புராணத்தில் இந்த தேவியை ரக்த தண்டிகா/சாமுண்டா என்றும் சொல்கிறார்கள்.

பர்த்துருஹரி, விக்கிரமாதித்தன், சாலிவாகனன், காளிதாசன் ஆகியோர்  அரசாண்ட & வாழ்ந்த இடம்.

அசுர அரசன் அந்தகாசுரன் ஈசனை வேண்டி ஒரு வரம் பெறுகிறான். அதன்படி அவனது ஒவ்வொரு துளி ரத்தத்திலிலிருந்தும் அவனைப் போன்ற அசுரர்கள் உருவாவார்கள். வரம் கொடுத்த ஈசனுடனே போர் புரிகிறான் அசுரன். சிவன் தனது திரிசூலத்தால் தாக்க அசுரனது உடலில் இருந்து இரத்தத் துளிகள் சிதற ஒவ்வொரு துளியிலிருந்தும் ஒரு அசுரன் உருவாகிறான். பல்கிப் பெருகுகிறார்கள் அசுரர்கள். திகைக்கின்றன சிவபூத கணங்கள். அப்போது தோன்றுகிறாள் ரக்த சாமுண்டாதேவி. அந்த ரத்தத் துளிகளைக் குடித்து அசுரர்களையும் உண்டுவிட முடிவில் ஈசன் அந்தகாசுரனை நெற்றிக் கண்ணால் எரித்து  அவனுக்கு மோட்சம் அளிக்கிறார். உலகம் அசுரர்களின் பிடியிலிருந்து விடுபடுகிறது. 

உயிரை எடுத்த இந்த தேவி உயிரைக் கொடுக்கும் மாகாளியானது எப்படி ? முடிவில் கொடுத்திருக்கிறேன்.  படியுங்கள்.
வழியெங்கும் மஞ்சளும் விதம் விதமான குங்குமமும் கொட்டிக் கிடக்கும் கடைகள். வட இந்தியக் கோயில்களில் இந்த சிந்தூரும் சாமிக்கு அணிவிக்கும்  ஜரி சல்லாத்துணியும் பிரதான பிரசாதம்.

மஹா மாயா கோயிலின் முன்.
போர் பந்தரோ இல்லை உஜ்ஜயினா தெரில. சாரி சாரியாக சாமிக்கு வேண்டுதல் கும்பம் சுமந்து செல்லும் ராஜஸ்தான்/குஜராத்/மத்தியப்ப்ரதேச மகளிர்.
நவாவரணதேவிகள் ஆவாகனம். தேவியின் சக்தி பீடம் என்பதால் சக்தி யந்திரம் - ஸ்ரீ யந்திரம் - மகா மேரு  வரையப்பட்டுள்ளது.

சிவ புராணத்தின்படி தட்சன் யாகத்தில் சதியில் பாய்ந்த தாட்சாயிணியின் உடலைச் சுமந்து தாண்டவம் ஆடும்போது சக்தியின் முழங்கை விழுந்த இடம் இது என்று கூறப்படுகிறது. சிவதாண்டவத்தில் சக்தியின் உடல் விழுந்த 51 இடங்களும் சக்தி பீடங்கள் என்றழைக்கப்படுகின்றன. சண்ட ப்ரசண்ட அசுரர்களை அழித்த சண்டி தேவியும் இவளே என்கிறார்கள்.

கன்னிகாபுரம் என்ற சிறியதான தனது ராஜ்யத்தை விரிவுபடுத்த எண்ணி வேறு தகுந்த இடம் பார்க்கச் சொல்லி  தனது தம்பியான பட்டியை விக்கிரமாதித்தன் அனுப்பி வைக்கிறான். அவன் வந்த வனாந்திரத்திலோ ஒரு தாமரைத் தடாகத்தின் மேல் ஏழு உரிகளும் கீழே ஒரு வேலும் நடப்பட்டு இருந்தது. அங்கே இருந்த கல்வெட்டு ஒன்றில் அங்கே தீர்த்தமாடி காளியை வணங்கி அந்த உரிகளை ஒரே வெட்டில் துண்டித்து அந்த வேலின் மேல் பாய்பவனுக்கு காளி காட்சி அளிப்பாள். ஐம்பத்தாறு தேசத்து மன்னர்களும் அவனின் ஏவல் புரிவார்கள் என்று பொறித்திருந்ததைப் படித்துத் தன் அண்ணன் விக்கிரமாதித்தனிடம் தெரிவிக்கிறான். அதைக் கேட்ட விக்கிரமாதித்தன் அவ்வாறே குளித்து வணங்கி ஏழு உரிகளிலும் வட்டமாகச் சுற்றி காலை வைத்து ஒன்றாக்கித் துண்டித்து அந்த வேலின் மேல் பாய காளி காட்சி அளித்துக் கைகளில் ஏந்திக் காப்பாற்றினாளாம். அவனுக்கு ஆயிரம் ஆண்டுகள் அரசாட்சி புரியும் அற்புத வரத்தையும் கொடுத்தாளாம். அதன்படி அவன் காடாறு மாதம் நாடாறு மாதம் என ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்தான் எனப் படித்திருக்கிறேன். 

///பதினோருமுறை தன் சிரசைக் காணிக்கையாக்கியும் விக்கிரமாதித்த ராஜனுக்கு உஜ்ஜனியினி மாகாளி உயிர் கொடுத்தாளாம்/// என உஜ்ஜயினி கோயிலில் எழுதப்பட்டுள்ளதாக ஒரு வலைத்தளம் சொல்லுகிறது.

இந்தக் கோயில்களில் எல்லாம் முன்புறத்தில் சந்நிதிக்கு இருபுறமும் விளக்கு ஏற்ற மிகப் பிரமாண்டமான விளக்குத் தூண்கள் நிறுவப்பட்டுள்ளன.அவற்றில் நூற்றுக்கணக்கான விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை மராத்தியர்கள் காலத்தில் நிறுவப்பட்டனவாம். நவராத்திரி சமயத்தில் அவை ஒளிவிடுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்குமாம்.

சைத்ர நவராத்திரி, அஸ்வின் நவராத்திரி, துர்கா பூஜா, சிவராத்திரி, மகா பூர்ணிமா, பால்குன் பூர்ணிமா, பௌஷ் பூர்ணிமா, ஷ்ரவண் மாதம் ( ஆவணி மாதம் ) , மஹா கும்பமேளா ஆகியன இங்கே விமரிசையாகக் கொண்டாடப்படும் திருவிழாக்கள்.

1 கருத்து:

  1. Thenammai Lakshmanan30 டிசம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 9:26
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.