எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 17 பிப்ரவரி, 2020

முருகன் கோலங்கள் & நிவேதனங்கள்.

முருகன் கோலங்கள் & நிவேதனங்கள்.


1.வள்ளிக்கிழங்கு பொரியல்
2.வாழைப்பூ பால் கூட்டு
3.கத்திரிக்காய் வாழைக்காய் கூட்டி அவிச்சுக் குழம்பு.
4.மரக்கறிக்காய் தோசை.
5.தேன்குழல்
6.மனகோலம்.
7.முறுக்குவடை.
8.சிவப்பரிசி அவல் பொரி உருண்டை.
9.முந்திரி பக்கோடா
10.பாதாம் பூரிப் பாயாசம்.

1.வள்ளிக்கிழங்கு பொரியல்

தேவையானவை:-

வள்ளிக்கிழங்கு - 1 துண்டு, மஞ்சள் பொடி - 1 சிட்டிகை, எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன், வரமிளகாய் – 1, கருவேப்பிலை - 1 இணுக்கு, உப்பு - 1/2 டீஸ்பூன்.





செய்முறை :-
வள்ளிக்கிழங்கைத் தோல் சீவி துண்டுகளாக நறுக்கி நன்கு கழுவவும். உப்பும் மஞ்சள் பொடியும் சேர்த்து வேகவிடவும். மென்மையானதும் வடிகட்டவும். பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்துபோட்டு சிவந்ததும்., கருவேப்பிலை., வரமிளகாய் தாளிக்கவும். பின் கிழங்கை சேர்த்து தேவையான உப்பு போட்டு  ஒரு நிமிடம் நன்கு கிளறி இறக்கவும்.

2. வாழைப்பூ பால் கூட்டு

தேவையானவை:-

வாழைப்பூ - பாதி ( உள்ளிருக்கும் தளிர் பகுதி), துவரம் பருப்பு /பாசிப்பருப்பு - 50 கி, பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரியவும், பச்சை மிளகாய் - 1 இரண்டாக வகிரவும், சாம்பார் பொடி - 1/4 டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு, எண்ணெய் - 1 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன், தேங்காய்ப் பால் அல்லது பால் - 1/4 கப்

செய்முறை:-

வாழைப்பூவின் நரம்புகளை எடுத்துவிட்டுப் பொடியாக நறுக்கவும். துவரம் பருப்பு அல்லது பாசிப்பருப்பை வேக வைக்கவும். அதில் வாழைப்பூ, வெங்காயம், பச்சை மிளகாய், சாம்பார் பொடி போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி மென்மையாகும் வரை வேக வைக்கவும். உப்பு சேர்த்து இன்னும் இரு நிமிடங்கள் வேக விடவும். எண்ணெயில் கடுகு, உளுந்து, கருவேப்பிலை தாளித்துக் கொட்டவும். தேங்காய்ப் பால் அல்லது பாலைச் சேர்த்து சூடாக வத்தக்குழம்பு சாதத்தோடு பரிமாறவும்.


3.கத்திரிக்காய் வாழைக்காய் கூட்டி அவிச்சுக் குழம்பு.

தேவையானவை :-

கத்திரிக்காய் – 4, வாழைக்காய் – 1, சின்ன வெங்காயம் – 8, வெள்ளைப்பூண்டு – 4, தக்காளி – 1, நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், பெருங்காயம் – சிறு துண்டு, கருவேப்பிலை – 2 இணுக்கு, புளி – 1 நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி – 2 டேபிள் ஸ்பூன். மஞ்சள் பொடி – 1 சிட்டிகை. உப்பு – 1 டீஸ்பூன்.

செய்முறை:-
கத்திரிக்காயை காம்பு நீக்கி இரண்டாக வெட்டி க்ராஸ், கிராஸாக வெட்டித் தண்ணீரில் போடவும். வாழைக்காயைத் தோலுரித்து வட்ட வட்டமாக நறுக்கித் தண்ணீரில் போடவும். வெங்காயம் வெள்ளைப்பூண்டைத் தோலுரித்து குறுக்குவாட்டில் வெட்டவும். தக்காளியைக் கழுவி வெட்டி வைக்கவும்.

ஒரு கடாயில் உப்புப் புளியை 4 கப் தண்ணீரில் கரைத்து ஊற்றவும். அதில் மஞ்சள் பொடி, சாம்பார் பொடி, கருவேப்பிலை, பெருங்காயம், சீரகம், வெந்தயம், பூண்டு வெங்காயம், தக்காளி, கத்திரிக்காய், வாழைக்காயைப் போட்டு ஒரு கரண்டியால் நன்கு கலக்கிவிட்டு நல்லெண்ணெயைப் பச்சையாக  அதில் ஊற்றி அடுப்பில் ஏற்றவும். கொதி வந்ததும் சிம்மில் 10 நிமிடம் வைத்து மூடிபோட்டு வேகவைத்து இறக்கவும். தாளிக்க வேண்டாம் என்பதால் எல்லாவற்றையும் கரைத்துவிட்டு இந்தக் குழம்பை நேரடியாக ரைஸ் குக்கரில் ஒரு விசில் வரும்வரை வைக்கலாம் அல்லது எலக்ட்ரிக் ரைஸ் குக்கரிலும் செய்யலாம் என்பது இதன் சிறப்பு.

4.மரக்கறிக்காய் தோசை.

தேவையானவை :-

பச்சரிசி - 1/4 கப், புழுங்கரிசி - 1/4 கப், உளுந்து - 1/4 கப், பாசிப்பருப்பு - 1/4 கப், துவரம்பருப்பு - 1/2 கப், கடலைப்பருப்பு - 1/2 கப், சம்பா மிளகாய் – 4, சோம்பு - 1 டீஸ்பூன், சீரகம் - 1/4 டீஸ்பூன், மிளகு - 1/4 டீஸ்பூன், உப்பு - 1 டீஸ்பூன்., மஞ்சள் பொடி - 1 சிட்டிகை, சின்னவெங்காயம் - 1 கப் பொடியாக அரிந்தது., எண்ணெய் - பொரிக்கத்தேவையான அளவு.

செய்முறை:-

அரிசி வகைகளையும் பருப்பு வகைகளையும் தனித்தனியாக ஊறவைக்கவும். மிளகாய் சோம்பு சீரகம் மிளகைப் பொடித்து ஊறவைத்தவைகளைச் சேர்த்து உப்புப் போட்டுக் கரகரப்பாக அரைக்கவும். மஞ்சள் பொடியைச் சேர்க்கவும். சின்ன வெங்காயத்தை சிறிது எண்ணெயில் வதக்கி மாவில் சேர்த்து குட்டி குட்டி ஊத்தப்பங்களாக ஊற்றவும். திருப்பிப் போட்டு வேகவைத்து எடுக்கவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து மரக்கறிக்காய் தோசைகளைப் பொறித்தெடுத்துப் பரிமாறவும்.

5.தேன்குழல் :-

தேவையானவை :-

பச்சரிசி - 4 கப், வெள்ளை உளுந்தம் பருப்பு - 1 கப், உப்பு - 1 1/2  டீஸ்பூன், தண்ணீர் - 2 கப், எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு ( அல்லது டால்டா  அல்லது தேங்காய் எண்ணெய் - விரும்பினால் )

செய்முறை:-
பச்சரிசியைக் கழுவி நிழற்காய்ச்சலாகப் போட்டு மிக்ஸியில் பொடித்துச் சலிக்கவும். உளுந்தம் பருப்பை வெறும் வாணலியில் வெதுப்பி மிக்ஸியில் பொடித்துச் சலிக்கவும். இரண்டையும் கலந்து உப்பு சேர்த்துத் தேவையான நீர் ஊற்றிப் பிசையவும். கொஞ்சம் காய்ந்த எண்ணெயையும் ஊற்றிப் பிசைந்து நீள் உருண்டைகளாக உருட்டி ஒரு ஈரத் துணி கொண்டு மூடவும்.

எண்ணெயைக் காயவைத்து ( சிறிது டால்டா வேண்டுமானால் இப்போது சேர்க்கவும் .)  மாவு உருண்டைகளைத் தேன்குழல் அச்சில் போட்டு காயும் எண்ணெயில் பிழிந்து வெண்ணிறமாக எடுக்கவும். பக்குவம் சரியாக இருந்தால் வெண்ணிறமாகவே வரும்.

6. மனகோலம்.

தேவையானவை:-

பாசிப்பருப்பு மாவு - 2 கப், வெல்லம் - 2 கப், உப்பு - 1/2 டீஸ்பூன், டால்டா/எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, தேங்காய் - 5 இன்ச் துண்டு, பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், சீனி பொடித்தது - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:-
பாசிப்பருப்பை வெறும் வாணலியில் லேசாக  வறுத்து அரைத்துச் சலிக்கவும். உப்பும் தேவையான தண்ணீரும் சேர்த்து மாவு பிசையவும்.எண்ணெய் அல்லது டால்டாவைக் காயவைத்து மனகோலக் கட்டையில் போட்டு பிழிந்து  2 இன்ச் துண்டுகளாக உதிர்த்து வைக்கவும்.

தேங்காயைப் பல்லுப் பல்லாக நறுக்கி நெய்யில் வதக்கவும். பொட்டுக்கடலையையும் நெய்யில் வறுத்துக் கொட்டவும்.மனகோலம், தேங்காய், பொட்டுக்கடலை மூன்றையும் ஒரு சில்வர்/பித்தளை பேசினில்  போடவும்.

வெல்லத்தில் சிறிது நீர் சேர்த்து முற்றிய பாகு தயாரித்து இந்தக் கலவையில் ஊற்றிக் கலந்து விடவும். பொடித்த சீனியைத் தூவி ஆறியபின் பரிமாறவும்.

7. முறுக்குவடை.

தேவையானவை :-

பச்சரிசி - 4 கப், வெள்ளை உளுந்தம்பருப்பு - 1 1/2 கப், உப்பு - 1 2 டீஸ்பூன், எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு.

செய்முறை:-

பச்சரிசியைக் கழுவி ஊற வைக்கவும். நீரை வடித்து ஒரு துணியில் உலரப் போடவும்.பச்சரிசியை சிறிது ஈரத்தோடு பொடிக்கவும்.வெள்ளை உளுந்தம்பருப்பை சிவப்பாக வெதுப்பி பொடிக்கவும் இரண்டையும் சலிக்கவும். இரண்டையும் சேர்த்து வெண்ணெயும் உப்பும் சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்துப் பிசையவும். மாவு மென்மையாக இருக்க வேண்டும்.

ஒரு கையளவு மாவை எடுத்து எண்ணெய் அல்லது நெய் தடவிய ஷீட்டில் விரல்களால் சுழற்றி முறுக்கு செய்யவும்.எண்ணெயைக் காயவைத்து ஒவ்வொன்றாகப் பொரித்தெடுக்கவும். சூடாகப் பரிமாறவும்.

8. சிவப்பரிசி அவல் பொரி உருண்டை.

சிவப்பரிசி அவல் – கால் கிலோ, பொட்டுக்கடலை – ஒரு கைப்பிடி, வேர்க்கடலை – 1கைப்பிடி, எள் – 1 டீஸ்பூன், ஏலப்பொடி – 1 சிட்டிகை. வெல்லம் – 75 கி. நெய் – சிறிது.

செய்முறை:-

கடாயில் பொட்டுக்கடலை, வேர்க்கடலை, எள் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து ஒரு பேசினில் போடவும். சிவப்பரிசி அவலை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு பொரிந்ததும் பேசினில் இருக்கும் மற்றவற்றோடு போட்டு ஏலப்பொடி தூவி வைக்கவும். வெல்லத்தை நைத்து சிறிது தண்ணீர் சேர்த்து கம்பிப் பாகு காய்ச்சவும். பேசினில் இருக்கும் பொரி, கடலை எள் மிக்ஸரில் போட்டு கரண்டிக் காம்பால் கிளறிவிட்டு நெய் தொட்டு உருண்டைகள் பிடிக்கவும். நிவேதிக்கவும்.

9. முந்திரி பக்கோடா

தேவையானவை:-

முந்திரிப் பருப்பு - 100 கிராம், {கடலை மாவு - 1 கப், சோள மாவு - 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் , உப்பு - 1/2 டீஸ்பூன் , சோம்புத்தூள் - 1 சிட்டிகை ( விரும்பினால்) , சமையல் சோடா - 1 சிட்டிகை ( விரும்பினால்) , ரெட் ஃபுட் கலர் - 1 சிட்டிகை (விரும்பினால்.) } அல்லது எம் டி ஆர் பஜ்ஜி போண்டா மிக்ஸ் - 1 கப். , தண்ணீர் - 1/4 கப் , எண்ணெய் - பொறிக்கத்தேவையான அளவு


செய்முறை:- முந்திரியுடன் கடலை மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், உப்பு, சோம்புத்தூள், சமையல் சோடா மற்றும் ரெட் ஃபுட் கலரை சேர்க்கவும். {அல்லது எம் டி ஆர் பஜ்ஜி போண்டா மிக்ஸை சேர்க்கவும்.} தண்ணீரை ஊற்றி நன்கு பிசறி எண்ணெயைக் காயவைத்துப் பொரித்தெடுத்துச் சூடாகப் பரிமாறவும்.

10. பாதாம் பூரிப் பாயாசம்.

தேவையானவை :-

பாதாம் – 100 கி, மைதா – 2 கப், கோதுமை – 1 கப், பால் – 10 லி
மில்க் மெய்ட் டின் – 1, சீனி – 1 கிலோ, பாதாம் எசன்ஸ் – சில சொட்டு, குங்குமப்பூ – அரை டப்பா. , எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:-

பாதாமை வெந்நீரில் ஊறவைத்துத் தோலுரித்து பால் விட்டு மைய அரைக்கவும். அதில் மைதா கோதுமை போட்டு ஒரு சிட்டிகை உப்புப் போட்டுப் பிசைந்து பட்டன் சைஸில் பூரி செய்து பொறித்தெடுக்கவும்.

பாலைக் காய்ச்சி சீனி சேர்த்துக் கரைந்ததும் மில்க் மெய்ட் சேர்த்து நன்கு கரைத்து பாதாம் எசென்ஸ் போடவும். குங்குமப்பூவைப் வெதுவெதுப்பான பாலில் கரைத்து ஊற்றவும். பரிமாறும்போது கப்புகளில் கொஞ்சம் பாதாம் பூரியைப் போட்டு வெதுவெதுப்பான பாலை ஊற்றிப் பரிமாறவும்.

1 கருத்து:

  1. Thenammai Lakshmanan30 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 11:01
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்1 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 8:01
    கடைசியா இருக்கிற இரண்டும் [முந்திரி பகோடா, பாதாம் பூரி பாயசம்] எனக்கு வேணுமே.....:)

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan3 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 1:27
    கட்டாயம் நேரில் வரும்போது செய்து தரேன் வெங்கட் சகோ :)

    பதிலளிநீக்கு

நவக்ரஹக் கோலங்கள்.

 நவக்ரஹக் கோலங்கள்.