எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 12 ஜூன், 2020

இந்திராஜான் சேப்பலும், ஸந்தான கணபதி ஸஞ்சீவி ஆஞ்சநேயரும்.

இந்திராஜான் சேப்பலும், ஸந்தான கணபதி ஸஞ்சீவி ஆஞ்சநேயரும்.


காரைக்குடியில் இந்திராஜான் ஹாஸ்பிட்டலைத் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. செக்காலையில் டாக்டர் சுகுமாரியம்மாவுக்குப் பின்னால் பிரபலமான டாக்டர் இந்திராஜான். இவரது தந்தை மெனா மெனா வீதியில் உள்ள ஜான் மெடிக்கல்ஸ் நடத்திவந்தார் என நினைக்கிறேன். 

எங்கள் தலைமுறையில் பெரும்பாலோர் இந்த உலகுக்கு வந்ததும் பார்த்த முதல் முகம் சுகுமாரியம்மாவுடையதாகத்தான் இருக்கும்.



இந்திராஜானம்மா ஹாஸ்பிட்டல்லுக்குச் சென்றிருந்தபோது இந்த தியான இடத்தைப் பார்த்தேன். ( கல்லூரிகளில் சேப்பல்ஸூன் ஸைலன்ஸ் ) என்று எழுதி இருப்பதன் முழு அர்த்தமும் இங்கே புரிந்தது.



ரிசப்ஷனை அடுத்து ஒரு வளைவும் ஓபன் முற்றமும் செடிகொடிகள் கொண்ட பூங்காவும் இருக்கு. சிலுவை அமைப்பில் அமைந்திருந்த சேப்பலின் பகுதி அழகு. சூரிய வெளிச்சம் வரும்வண்ணம் செய்யப்பட்டிருப்பது சிறப்பு. பெண்களுக்கான சிறப்பு மருத்துவமனை என்றே இதைச் சொல்லலாம். வயதால் மிகத் தளர்ந்தாலும் இந்திராஜான் அவர்களும் அவர்களின் கணவரும் இந்த ஜான் மெடிக்கல் செண்டரைத் திறம்பட நிர்வாகித்து வருகிறார்கள்.  




லாஸ்ட் சப்பர் - ’கடைசிவிருந்து’ ஓவியம் வாசலை அலங்கரிக்க சேப்பலின் அமைப்பு எண்கோணத்தில் பச்சை இலை, கொடிகள் கொண்ட கம்பி அமைப்புகளுடன் அழகாக அமைந்திருந்தது.  ’அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார்’ என்ற வார்த்தைகள் அனைவருக்கும் மனச்சாந்தி அளிப்பவையாக அமைந்திருந்தன. இந்த ஆசியின் பலன்தான் நாம் இன்று ஜீவித்திருப்பதும்.



காரைக்குடியின் செக்காலை சிவன் கோயில் அருகே அமைந்திருக்கிறது ஸந்தான கணபதி ஸஞ்சீவி ஆஞ்சநேயர் திருக்கோயில்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இருண்டாற்போலிருந்த இந்தக்கோயில் இப்போது ஜொலிக்கிறது. மேலும் இந்தக் கோயிலில் ஒரு சாந்நித்யம் நிலவும். ஏனெனில் இதன் அர்ச்சகர் கோயிலை ஆத்மார்த்தமாக ஆராதிப்பதுதான் காரணம்.



கோயிலைக் கடக்கும்போது தீப தூப சந்தன குங்கும பத்தி சாம்பிராணி வாசனைகளோடு பூக்களின் நறுமணமும் நம்மை ஒரு தெய்வீக உலகுக்கு அழைத்துச் செல்லும்.

ஸந்தான கணபதி மந்தகாசப் புன்னகை புரிய, ஸஞ்சீவி ஆஞ்சநேயரோ ஸஞ்சீவினி மூலிகைக்காக ஸஞ்சீவி மலையையே சுமந்து அழகுற அருள் பாலிக்கிறார்கள். தினமும் இருவரிடத்திலும் ஆரஞ்சு வாழைப்பழம் நிவேதனம் இருக்கும். சனிக்கிழமை என்றால் மலைபோல் துளசி தாங்கிப் புன்னகைப்பார் ஹனுமான். வெண்ணெயும் சாத்தப்பட்டுக்கொண்டே இருக்கும்.



வடைமாலையும் அடிக்கடி காணவும் ருசிக்கவும் கிடைக்கும். அக்ரஹார மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க சிவன் கோயிலில் அனுமதி பெற்றபின் இக்கோயில் அவர்களாலேயே முழுதும் பராமரிக்கப்படுகிறது. தினமும் காலையில் நைவேத்தியம் உண்டு. விசேஷ நாட்களிலும் அன்னதானம் உண்டு. கோயிலுக்கு வருபவர்கள்  கேட்பதற்கு ஏற்றவாறு உபன்யாசங்கள், ஆன்மீகச் சொற்பொழிவுகளையும் ஒலிபரப்பச் செய்கிறார் அதன் அர்ச்சகர்.



தினசரி வழிபாடுகள், பக்தர்கள் வரும்போது ஆரத்திகாண்பித்தல், அர்ச்சனை செய்யும் நேரம் தவிர மிச்ச நேரங்களில் ஆத்மசுத்தியுடன் ஹனுமான் சாலீசா, கணேச பஞ்சரத்னம் போன்ற இறைவன் பாடல்களைப் பாடியும் படித்தும் வருகிறார்.    


மனநிறைவு தரும் கோயில் இது. இங்கே கணபதிக்கும் ஆஞ்சநேயருக்கும் உள்ள விசேஷ தின வழிபாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன. இதன் ஒரு பக்க சிவன்கோயில் ஊரணி தாமரைத் தடாகமாகக் காட்சி அளிக்கிறது. கோபாலனின் ஆநிரைகள் அங்கங்கே அமர்ந்திருக்கும் காட்சியும் காணலாம்


ராமலெக்ஷ்மண சீதா தேவி சமேதராக ஆஞ்சநேயர் காட்சி அளிப்பதும் கோபுரத்தில் காணலாம். அனைவருக்கும் மனச்சாந்தியும் மன தைரியமும் நிம்மதியும் சந்தான பாக்கியமும் சௌபாக்கியமும் மாங்கல்ய பலமும் அளிக்கும் ஸ்தலமாக இக்கோயில் விளங்குகிறது.

1 கருத்து:

  1. வெங்கட் நாகராஜ்9 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 6:46
    நல்ல தகவல்கள். நன்றி.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan11 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 12:24
    nandri Venkat sago


    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.

விநாயகர் சதுர்த்திக் கோலங்கள்.