எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 24 ஜூன், 2020

நவக்ரஹ கோயில் தரிசனம் :- கீழப்பெரும்பள்ளம் கேண்மை மிக்க கேதுபகவான்

நவக்ரஹ கோயில் தரிசனம் :- கீழப்பெரும்பள்ளம் கேண்மை மிக்க கேதுபகவான்

ஞானகாரகன் கேது என்று சொல்லப்படுவதுண்டு. கால சர்ப்ப தோஷ ஜாதகம் என்றோ காலசர்ப்ப  யோக ஜாதகம் என்றோ  ஒரு ஜாதகத்தில் லக்கினத்தில் ராகுவோ கேதுவோ இடம்பெற்று  அதிலிருந்து ஏழாம் எட்டாம் இடத்திற்குள் மற்ற கிரகங்கள்  இடம்பெற்றிருந்தால் இவ்வாறு அழைப்பார்கள்.

சகட யோகக்காரர்கள் என்றும் சொல்வதுண்டு. சகடம் ( கிணற்றில் நீர் இறைக்கப் பயன்படும் கருவி போல் ) அவர்கள் வாழ்வு நிலை மேலேஏறிக் கீழிறங்கி திரும்ப மேலேறிக் கொண்டிருக்கும். அப்படிப்பட்டவர்கள் கேதுவை வணங்கினால் நிலைமை சீராகும்.
கீழப்பெரும்பள்ளம் நவக்ரஹக் கோயில்களில் சிறிய அழகிய கோயில். வெளிநிலையில் ரிஷபாரூடர் காட்சி அளிக்க எதிரே ஒரு ஆலமரம் நாகர்களால் நிரம்பி இருக்கிறது. நாகர்கள் மேலெல்லாம் பக்தர்கள் திருமணத் தடை நீக்க அணிவித்த மஞ்சள் கயிறுகள், மஞ்சள்  கிழங்குகளோடு மூடி இருக்கின்றன. குழந்தைப்பேறு வேண்டி கட்டப்பட்ட மஞ்சள் தொட்டில்கள் காற்றில் சரசரக்கின்றன. இது நாகதோஷ பரிகார ஸ்தலம்.

1900 வருடங்களுக்கு முன்பு சோழ மன்னர்கள் கட்டிய கோவில் இது. இந்த சிவாலயத்தின் மூலவர் நாகநாதர், இறைவி சவுந்தர்யநாயகி, இரண்டு மூன்று இடங்களில் மட்டுமல்ல இறைவனுக்கு நேர் எதிரே துவஜஸ்தம்பத்தின் அடியிலும் கேதுவுக்கு அதிபதியான விநாயகப்பெருமான் சிறப்பாகக்  காட்சி அளிக்கிறார். கேதுபகவான் தனிச்சந்நிதியில் வீற்றிருக்கிறார்.  ஸ்தலவிருட்ஷம் மூங்கில், தீர்த்தம் நாகதீர்த்தம். 

பாம்புத்தலையுடன் மனித உடலுடன் உடைய கிரஹம் இவர். கேதுவுக்கு  சிவன் நாகநாத சுவாமியாகக் காட்சி அளித்த தலம் இது என்கிறார்கள். 
கேது வரலாறு :-  கேதுவும் ராகுவும் நிழல் கிரகங்கள். அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தபோது அசுரர்களில் ஒருவரான  - காஷ்யப மகரிஷியின் புதல்வன் ஸ்வர்பானு  மோஹினி அமிர்தம் வழங்கும்போது  தனக்கு கிடைக்காது என்று தேவர்கள் நடுவில் புகுந்து அமிர்தம் வாங்கி அருந்திவிடுகிறார். அதை சந்திரனும் சூரியனும் மோஹினியிடம் காட்டிக் கொடுக்க மோஹினி தன்  கையிலிருந்த அகப்பையில் அடிக்க தலைவேறு உடல்வேறாகத் துண்டாகிறார் சுவர்ணபானு. ஆனாலும் அமிர்தம் குடித்த காரணத்தால் மரணம் நிகழவில்லை.
அமிர்தம் உண்டதால் அமர பதவி அடைந்தஅவர்கள் விஷ்ணுவை வணங்கித் தொழ அவர் பாம்பின் உடலையும் தலையையும் சிரசுக்கும் உடலுக்கும் பொருத்துகிறார். மனித சிரசும் பாம்பு உடலும் கொண்டவர் ராகுதேவனாகவும், சிரசு பாம்பும் உடல் மனிதனாகவும் அமைந்தவர் கேதுபகவானாகவும் அமரத்தன்மை அடைகிறார்கள். இறைவனை வணங்கி கிரஹ பதவி பெற்று தம்மைக் காட்டிக் கொடுத்த சூரியனையும் சந்திரனையும் கிரஹணமாகப் பீடிக்கிறார்கள். இருவரும் நேர் எதிர்த்தன்மையில் அமைந்து கிரஹங்களுக்கு எதிர் சுழற்சியில் செல்கிறார்கள்.
ராகு கேது பெயர்ச்சி 18 மாதங்கள் சுழற்சி கொண்டது. கடந்த ஜூலையில்  ( 2017 ) ராகு கேது பெயர்ச்சி நடைபெற்றது. 
கேதுபகவானுக்கு உரிய நிறம் பல்வகை வண்ணம் கலந்த  உடைகள், தான்யம் கொள்ளு, செவ்வரளிப் பூ, நவரத்தினம் வைடூர்யம் .

இவரை வணங்கினால் நரம்பு வாய்வு சம்பந்தப்பட்ட  உடல்நலக்கோளாறுகள் நீங்கும், மனபயம் நீங்கும், கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும். குடும்ப ஒற்றுமை பலப்படும்.
இவருக்கு உரிய எண்  7.  ஏழுவித தோஷங்கள் நீங்க ஏழுதீபம் ஏற்றி. ஏழு பிரகாரம் வந்து, பாலாபிஷேகம் செய்து  கொள்ளு, மிளகுப்பொடி, உப்பு கலந்த சாதம் படைத்து வணங்கினால் நினைத்தவை கைகூடும். எனவே ஏழு வகையான உணவுகளைப் படையலிட்டு கேது ஜெபமந்திரம் சொல்லி அவ்வுணவை ஹோமத்தில் அர்ப்பணம் செய்கிறார்கள்.

கேது மூல மந்திர ஜபம்:

"ஓம் ச்ரம் ச்ரீம் ச்ரௌம் ஷக் கேதவே நமஹ",

கேது த்யானம்

தூம்ரவர்ணம் த்வஜாகாரம் கதாவரகரத் வயம்
சித்ராம்பரதரம் கேதும் சித்ரகந்தானுலே    பனம் 
வைடூர்யாபரணம் சைவ வைடூர்ய

கேது துதி

கேதுத் தேவே கீர்த்தி தேவே
பாதம் போற்றி பாபம் தீர்ப்பாய்
வாதம் வம்பு வழக்குகளின்றி
கேதுத் தேவே கேண்மையாய் ரட்சி.

கேது காயத்ரி மந்திரம்

அச்வத்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி|
தந்நோ கேது: ப்ரசோதயாத்||

கேது ஸ்தோத்திரம்

பலாச புஸ்பஸ்ஙகாசம்
தாராகாக்ரஹ மஸ்தகம்!
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம்
தம் கேதும் ப்ரணமாம் யஹம்!!


விநாயகருக்கு உரிய அனைத்துப் பாடல்களையும் பாமாலைகளையும் கேதுவுக்காகவும் படிக்கலாம். இங்கே ஒரு விசேஷம். கேது பெயர்ச்சியின் போது மட்டும் கேதுபகவானின்  திருவீதிஉலா நடைபெறும்.


டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

1. நவக்ரஹ கோயில் தரிசனம் - ஆலங்குடி ஆலமர் ஈசன். 

2.  நவக்ரஹ கோயில் தரிசனம் :- புள்ளிருக்குவேளூரில் மங்களம் தரும் அங்காரகன்.

3. நவக்ரஹ கோயில் தரிசனம் :- திருவெண்காடு பிள்ளை இடுக்கி அம்பாளும் புதபகவானும்

4. நவக்ரஹ கோயில் தரிசனம் :- கீழப்பெரும்பள்ளம் கேண்மை மிக்க கேதுபகவான்

5. நவக்ரஹ கோயில் தரிசனம்:- கஞ்சனூரில் சுபம், சுகமீயும் சுக்கிரமூர்த்தி

6. நவக்ரஹ கோயில் தரிசனம். :- சூரியனார் கோவிலில் சிவசூரியநாராயணரை நோக்கும் மங்களகுரு..

7. நவக்ரஹ கோயில் தரிசனம்:- திருநள்ளாறு சாயாபுத்திரன் சனி பகவான்.

8. நவக்ரஹக் கோயில் தரிசனம்:- திருநாகேஸ்வரம் ராஜவாழ்க்கை நல்கும் ராகுபகவான்

9. நவக்ரஹ கோயில் தரிசனம் :- திங்களூர் சந்தோஷ வாழ்வருளும் சந்திர பகவான் 

1 கருத்து:

  1. Thenammai Lakshmanan17 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 11:34
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

நவக்ரஹக் கோலங்கள்.

 நவக்ரஹக் கோலங்கள்.