எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 25 டிசம்பர், 2020

திருக்கடையூரில் அம்மா அப்பாவின் விஜயரத சாந்தி - 2.

திருக்கடையூரில் அம்மா அப்பாவின் விஜயரத சாந்தி - 2.

ஹோமம் முடிந்து இந்தக் கும்பங்களை பிரதட்சணமாக பிரகாரங்களில் எடுத்து வரவேண்டும்.  சிவன் சந்நிதியின் பின்புறம் கிழக்குப் பக்கமாக இந்த கும்பம் சொரிதல்/அபிஷேகம் நடைபெறுகிறது.

முதலில் ஹோமம் செய்வித்த வேதியர் கும்பம் சொரிதல். இவர் அபிஷேகித்ததும் மற்றையோரும், பெண் மக்கள், பிள்ளை பெண்டுகளும் , கடைசியாகப் பெற்றோருக்குத் தலைமகனும் மருமகளும் தம்பதி சமேதராகக் கும்பம்சொரிய வேண்டும்.

இந்த சல்லடை போன்ற அமைப்பு நீரை சீராக வடியச் செய்ய உபயோகப்படுகிறது.


நான் மட்டும் சென்றதால் நான் மட்டும் குடும்பத்தினர் அனைவர் சார்பாகவும். (தம்பிகள், எங்கள் குழந்தைகள், குடும்பத்தினர் மற்றும்  என் கணவர் ) கும்பம் சொரிந்தேன்.

பின்புறம் சல்லடையைத் தாங்கி நிற்பவர் சேஃப் ட்ராக் ட்ரைவர். காரைக்குடியில் இருந்து திருக்கடையூர் வரை பேசிக்கொண்டே வந்ததால் அவரும் ஒரு தம்பி போல் ஆகிவிட்டார்.


அவர் ஒரு கிறிஸ்துவர். இருந்தும் எங்கள் பெற்றோருக்குப் பிள்ளைபோல் கும்பம் சொரிய விரும்பினார். :)

அபிஷேகம் முடிந்து அம்மாவும் அப்பாவும் உடைமாற்றிக் கொண்டதும் அங்கே மன்னார்குடியில் இருந்து இன்னொரு சாந்திக்காக வந்திருந்த அம்மையார் ஒருவர் அப்பா அம்மாவுடன் சிநேகமாக சிரித்துப் பேசத் துவங்க அவர்களைக் க்ளிக்கினேன்.

மன்னார்குடி டை இந்தத் தாமரைப்பூ  டாலர் எனக்கு ரொம்பவே பிடித்தது. அந்த அம்மாவின் மூக்குத்தியும் முகமும், அகமும் சிரிப்பும் கூட அற்புதம்.

அடுத்தது ஊரில் என்றால் திருமாங்கல்யதாரணம் நடக்கும். இங்கே வேதியர் மந்திரம் ஓத குங்குமம் இட்டு மாலை மாற்றிக் கொள்கிறார்கள்.

எனக்கும் குங்குமம் கொடுத்தார். தாலியில் வைத்துக் கொள்கிறேன்.  அப்பா அம்மாவுக்குக் குங்குமம் இட்டு விடுகிறார்கள். அதென்னவோ இம்மாதிரி நிகழ்வுகளில் தலையைச் சுற்றிக் குங்குமம் இடச் சொல்வார்கள்.பார்க்க வித்யாசமாகவும் அழகாகவும் இருக்கும்.

இவர்தான் முக்கிய வேதியர் அங்கே. அப்பாவும் அம்மாவும் காரைக்குடியில் ஆர்டர் செய்து முதல்நாள் கொண்டு சென்ற மல்லிகைப்பூ மாலைகளை மாற்றிக் கொண்டார்கள்.

அப்பா ஜோராக அமர்ந்திருக்கிறார்கள். அம்மா கும்பம் வைத்த மண்டபத்தைப் பார்க்கிறார்கள்.

அடுத்துப் பரிவட்டம் கட்டுதல்.

கோயில் சார்பாக சுவாமி படமும் பிரசாதங்களும் தரப்படுகின்றன.

ஐஸ்வர்யங்களை ஏந்தியபடி என் பெற்றோர். ( அக்ஷதை, விபூதி, மஞ்சள், குங்குமம், சந்தனம், மஞ்சள் பூசிய தேங்காய், தேன்கதலி )

அடுத்து ஆசீர்வாதம் வாங்குதல்.

அனைவர் சார்பாகவும் நானே ஆசி வாங்கிக் கொண்டேன். ( ஆல் இன் ஆல் அழகுராணி ஹிஹி )

அப்பா அக்ஷதை போட்டு வாழ்த்தி விபூதி இட்டுவிட. அம்மா குங்குமம் வைத்தார்கள்.

தாலியிலும் குங்குமம் வைத்தார்கள்.


பூர்த்தியானது 75. அதனால் கோவில் கோபுரத்தின் உட்புறமாக பரிவட்டத்தோடு இன்னொரு க்ளிக்.

இதன் பின் அமிர்தகடேஸ்வரர், காலசம்ஹாரமூர்த்தி ஆகியோரை வணங்கினோம். காலசம்ஹார மூர்த்தியின் காலடியில் மார்க்கண்டேயனை இருக்கிறார். அவர் எட்டி உதைத்த எமன் இன்னும் கீழே இருக்கிறார். இந்த வெள்ளி எமனையும் தீப ஹாரத்தி காண்பிக்கும்போதுதான் விலக்கிக் காட்டுகிறார்கள். அதன் பின் தகடால் மூடி விடுகிறார்கள்.

இந்தக் குங்குமச் சிமிழ் அங்கே வந்த ஒரு தம்பதியர் எதேச்சையாக வழங்கினர். நல்ல சகுனம்.

அபிராமி அம்மன் சந்நிதியில் அம்மா அப்பா வணங்கி வந்து கொடிமரத்தைக் கும்பிட்டு அமர்ந்ததுதான் தாமதம். நூற்றுக்கணக்கில் கோயிலுக்கு வந்த அனைவரும் விழுந்து கும்பிட்டு ஆசியும் குங்குமமும் வாங்கிச் சென்றார்கள்.

முடிந்தால் நீங்களும் ஒருமுறை சென்று தரிசித்து வாருங்கள். அமிர்தகடேஸ்வரர், அபிராமியின் ஆசியால் அனைவரின் ஆயுளும் ஆரோக்கியமும் பெருகும்.

1 கருத்து:

  1. ஸ்ரீராம்.24 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 3:26
    சந்தோஷ நிகழ்வு.

    என் நமஸ்காரங்கள்.

    ஆனால் ஏன் நீங்கள் மட்டும் கலந்து கொள்ள, மற்ற உறவுகள் வரவில்லை?

    பதிலளி

    கோமதி அரசு24 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 8:11
    //அடுத்தது ஊரில் என்றால் திருமாங்கல்யதாரணம் நடக்கும். இங்கே வேதியர் மந்திரம் ஓத குங்குமம் இட்டு மாலை மாற்றிக் கொள்கிறார்கள்.//

    திருக்கடையூரிலும் உண்டே !நீங்கள் சொல்லி இருந்தால் அவர் திருமாங்கல்யதாரணம் செய்து வைத்து இருப்பரே நீங்கள் கொண்டு வந்த தாலியை அம்மனுக்கு சாற்றி பின் கொடுப்பாரே!(அம்மனாக பாவித்த கும்பத்திற்கு சாற்றி)
    விஜயரத சாந்தி படங்கள் எல்லாம் அருமை.
    வேற்று மதத்தை சார்ந்தவர் என்றாலும் மிகவும் மகிழ்ச்சியாக விழாவில் கலந்து கொண்ட டிரைவர் தம்பி வாழ்க!

    பதிலளி

    G.M Balasubramaniam25 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 3:26
    எங்கள் (என் ) சஷ்டியப்த பூர்த்தி திருக்கடையூரில்தான் நடந்தது பேரனுக்கு பேத்திக்கும் தத்தா பாட்டிக் கல்யாணம் காண்பதில் பெருமகிழ்ச்சி

    பதிலளி

    Thenammai Lakshmanan4 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 12:00
    ஆம் ஸ்ரீராம் அப்பா அம்மா யாரிடமும் தெரிவிக்கவில்லை. அதனால் நான் மட்டும் சென்று வந்தேன். 80 விமர்சையாகக் கொண்டாடலாம் என்று.

    அஹா அது தெரியாதே கோமதி மேம். அறியத் தந்தமைக்கு நன்றி :) ஆம் உண்மையிலேயே அந்த ட்ரைவர் பாராட்டப்பட வேண்டியவர்தான். :)

    அஹா அருமை அற்புதம் பாலா சார். உண்மைதான். :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

நவக்ரஹக் கோலங்கள்.

 நவக்ரஹக் கோலங்கள்.